பழமொழி நானூறு பற்றிய குறிப்புகள்

ManiMegala 0

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. 

பாடத்தலைப்புகள்(toc)

பழமொழி நானூறு நூல் குறிப்பு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. 

மக்கள் தம் பட்டறிவால் பெற்ற கருத்தைச் சுருக்கமாகக் கூறியதே பழமொழியாகும்.

வேறு பெயர்கள் - பழமொழியை 

  • மூதுரை, 
  • முதுமொழி, 
  • உலக வசனம்,
  • பழமொழி 

எனவும் கூறுவர்.  

இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது. 

இது தமிழறிஞர்களால் நாலடியாருக்கு இணையாக வைத்து மதிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் வாழ்ந்த மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கம்,மன இயல்பு ஆகியவற்றை அறிவதற்குரிய செய்திக் குறிப்புகளை இந்நூல் பெற்றுள்ளது.

பாவகை :

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழி இடம் பெறுமாறு பாடப்பெற்ற பழமொழி நானூறு வெண்பாக்களால் ஆன அறநூலாகும். 

34 அதிகாரங்களில் அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

சிறந்தத் தொடர்கள் 

  • ஆற்றுணா வேண்டுவது இல்
  • ஒன்றுறா முன்றிவோ இல்
  • பாம்பறியும் பாம்பின் கால்
  • முள்ளினால் முள் களையுமாறு
  • இறைத்தோறும் ஊறுங்கிணறு
  • தனிமரம் காட்டாவதுஇல்
  • ஆயிரங் காக்கைக் கோர்கல்
  • திங்களை நாய் குரைத்தன்று
  • கற்றலின் கேட்டலே நன்று 

கீழ்காணும் இப்பாடலில் வரும் பழமொழி, 'ஆற்றுணா வேண்டுவது இல் என்பது. இதற்குக் 'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா' என்பது பொருள்.

பழமொழி நானூறு பாடல்கள் விளக்கம் 

பழமொழி நானூறு கூறும் கல்வியின் சிறப்பு

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்

 நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு

 வேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால்

 ஆற்றுணா வேண்டுவது இல்.


- முன்றுறை அரையனார் (code-box)


பாடல்பொருள்

கற்க வேண்டிய நூல்களை நிறைவாகக் கற்றவர் அறிவுடையவர் ஆவார். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவும். அவருடைய புகழ் பரவாத நாடு இல்லை. அந்த நாடுகள் எல்லாம் வேற்று நாடுகள் இல்லை; தம்முடைய நாடுகளே. எனவே, அந்நாடுகளுக்குச் செல்லும்போது வழிநடை உணவை, அவர் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை.

எந்நாட்டிற்குச் சென்றாலும், அந்நாட்டில் கற்றோரை வரவேற்று உணவு அளிப்பர் என்பது பாடல் உணர்த்தும் கருத்து.

சொல்பொருள்

ஆற்றவும் - நிறைவாக; 

நாற்றிசை - நான்கு + திசை;

தமவேயாம் - தம்முடைய நாடுகளே; 

ஆற்றுணா -ஆறு + உணா; 

ஆறு - வழி; 

உணா - உணவு. 

வழிநடை உணவு. இதனைக் 'கட்டுச்சோறு' என இக்காலத்தில் கூறுவர். 

பழமொழி நானூறு ஆசிரியர் குறிப்பு

முன்றுறை அரையனார் ஆசிரியர் குறிப்பு TNPSC

பழமொழி என்னும் இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார். 

  • முன்றுறை என்பது ஊர்ப்பெயர்.
  • அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும். 

இவர் பாண்டிய நாட்டு முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம்.

இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.