தொகைநிலை மற்றும் தொகாநிலைத் தொடர்கள் | 10th Tamil Ilakkanam & NPSC Group 4 VAO 2 2A & TET Study Notes

ManiMegala 0

TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET பொதுத்தமிழ் பாடத்திட்டத்தின் அலகு III: எழுதும் திறன் (Writing Skills) - (i) தொடர் வகைகள் பகுதியில் இருந்து நேரடி வினாக்கள் அதிகளவில் கேட்கப்படுகின்றன. இக்கட்டுரையில், 10-ஆம் வகுப்பு புதிய பாடப்புத்தகத்தின் கீழ் வரும் தொகைநிலை மற்றும் தொகாநிலைத் தொடர்கள் பற்றி எளிமையான விளக்கங்கள், அட்டவணைகள், TNPSC Previous Year Questions (PYQ) மற்றும் தேர்வு நோக்கில் அமைந்த மாதிரி வினாக்களுடன் விரிவாகக் காண்போம். இப்பகுதியைப் படிப்பதன் மூலம் தேர்வில் 2 முதல் 3 மதிப்பெண்களைத் திண்ணமாகப் பெற முடியும்.

சொற்றொடர்(Phrase) அல்லது தொடர் வகைகள் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம்

TNPSC previous year questions and answers 

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இவை பெரும்பாலும் 'பொருத்துக' அல்லது 'பொருத்தமான பொருளைத் தேர்க' போன்ற வினாக்களாகக் கேட்கப்படும்.
1. பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிந்து பொருத்துக: CCSEIVGT-2025 Group 4 / VAO
  • (a) கடற்கரைச் சாலை
  • (b) புதுமனைப் புகுவிழா
  • (c) உரிமைக் குரல்
  • (d) பருத்தித் துணி
  • 1. ஏழாம் வேற்றுமைத்தொகை மூன்றாம் வேற்றுமை உருபும்
  • 2. பயனும் உடன்தொக்க தொகை
  • 3. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • 4. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
(a)(b)(c)(d)
(A)3142
(B)3412
(C)4321
(D)1342
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (A) 3 1 4 2
கடற்கரைச் சாலை (3) - கடற்கரையின்கண் அமைந்த சாலை (7-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை)
புதுமனைப் புகுவிழா (1) - புதுமனையின்கண் புகும் விழா (ஏழாம் வேற்றுமைத்தொகை மூன்றாம் வேற்றுமை உருபும்)
உரிமைக் குரல் (4) - உரிமைக்காக எழுந்த குரல் (4-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை)
பருத்தித் துணி (2) - பருத்தியால் ஆகிய துணி (பயனும் உடன்தொக்க தொகை)

2. வெண்குடை - இலக்கணக் குறிப்பு தருக (CCSE-II 2024):

A) ஆகுபெயர்
B) வினைத்தொகை
C) தொழிற்பெயர்
D) பண்புத்தொகை
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: D) பண்புத்தொகை (வெண்மை + குடை);தமிழ் இலக்கணப்படி, "வெண்மை, நன்மை, தீமை, சிறுமை, பசுமை, செம்மை" போன்ற பண்புப் பெயர்கள், ஒரு பெயர்ச்சொல்லோடு சேர்ந்து வரும்போது, அந்தப் பண்புப் பெயரின் ஈற்றில் உள்ள 'மை' விகுதி மறைந்துவிடும் (மறைந்து வருவது 'தொகை')

பாடத்தலைப்புகள்(toc)

சொற்றொடர்(Phrase) அல்லது தொடர் என்றால் என்ன?

இரண்டு முதலாக சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது "சொற்றொடர்" அல்லது "தொடர்" எனப்படும்.

சொற்கள் தொடர்வதைத் 'தொடர்' எனலாம். 
இது பொருள் முடிவு தராவிட்டால் முடியாத்தொடர் எனப்படும்.
பொருள் முடிவு தந்தால் அது முற்றுத்தொடர் எனப்படும். 
இந்த முற்றுத்தொடரை வாக்கியம் என்பர்.

தொடர் எடுத்துக்காட்டு 

  • நீர் பருகினான்
  • வெண்சங்கு ஊதினான்
  • கார்குழலி பாடம் படித்தாள். 

இறுதித்தொடரில் உள்ள மூன்று சொற்களும் (கார்குழலி, பாடம், படித்தாள்) தொடர்ந்து வந்து பொருளைத் தருகின்றன. 

ஒரு தொடரில் மூன்று பகுதிகள் இடம்பெறும்.

அவை,

1. எழுவாய் (the subject)

2. பயனிலை (the predicate)

3. செயப்படுபொருள் (the object)

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் - தொடர்

🎯தமிழ் இலக்கணத்தின் ஐந்து முக்கிய பிரிவுகளில் ஒன்றான சொல் இலக்கணம் (Sol Ilakkanam) பொதுவாக, சொற்களை இலக்கண வகை அடிப்படையிலும், இலக்கிய வகை அடிப்படையிலும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிப்பர்.

சொற்களின் இலக்கண வகைகள் 4: 1. பெயர்ச்சொல், 2. வினைச்சொல், 3. இடைச்சொல், 4. உரிச்சொல்.

சொற்களின் இலக்கிய வகைகள் 4: 1. இயற்சொல், 2. திரிசொல், 3. திசைச்சொல், 4. வடசொல்.

தொடர்கள் எத்தனை வகைபடும்? 

தொடர்கள் வகைகள்: இருவகைப்படும். 

  1. தொகைநிலைத் தொடர்கள், 
  2. தொகாநிலைத் தொடர்கள்

📌 TNPSC தேர்வர்கள் நினைவில் கொள்க::

தொகைநிலைத் தொடர் 6 வகைப்படும்: வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழித்தொகை

தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும்: எழுவாய், விளி, வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம், வேற்றுமை, இடைச்சொல், உரிச்சொல், அடுக்குத்தொடர்.


10th Tamil Ilakkanam Thogainilai and Thoganilai Thodargal Notes for TNPSC

தொகைநிலைத் தொடர்கள் 10th standard

சொற்கள் தொடராகும்போது, இரு சொற்களுக்கிடையே உருபுகள் மறைந்து வரும் தொடர்களைத் 'தொகைநிலைத் தொடர்கள்' என்பர். 

  • இரண்டிற்கு மேற்பட்ட சொற்களும் அவ்வாறு வரும்.

தொகைநிலைத் தொடர்கள் என்றால் என்ன?

பெயர்ச்சொல்லோடு, வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத்தொடர் என்று கூறுவர். 

எடுத்துக்காட்டு 

  • கயல்விழி

இச்சொல்லில் கயல், விழி என இரண்டு சொற்கள் உள்ளன. இவ்விரு சொற்களுக்கு இடையே போன்ற ('கயல் போன்ற விழி') என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. இதனை உவமைத்தொகை எனக்கூறுவர். 

உவமைத் தொடர்கள் (Uvamai Thodar) - Full Study Notes PDF

  • கரும்பு தின்றான்

மேற்கண்ட தொடர் கரும்பைத் தின்றான் என்னும் பொருளை உணர்த்துகிறது. இத்தொடரில் உள்ள இரண்டு சொற்களுக்கு நடுவில் ஐ என்னும் உருபு மறைந்து நின்று, அப்பொருளைத் தருகிறது. எனவே, இது தொகைநிலைத் தொடர் எனப்படும்.

​📺 வீடியோ 

தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் சொல் இலக்கணப் பகுதியை (வேற்றுமைத் தொகை, உவமைத்தொகை, அடுக்குத்தொடர்...) மிக எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் இந்த வீடியோவில் முழுமையாகப் பார்த்துப் படியுங்கள்!



தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைபடும்? 

தொகை நிலைத்தொடர் வகைகள் அறுவகைப்படும். 

  1. வேற்றுமைத்தொகை 
  2. வினைத்தொகை 
  3. பண்புத்தொகை 
  4. உவமைத்தொகை 
  5. உம்மைத்தொகை
  6. அன்மொழித்தொகை 

என்பன.

வேற்றுமைத்தொகை

வேற்றுமை என்றால் என்ன ? 

  • கண்ணன் இராமன் பார்த்தான்.
  • கரும்பு தின்றான்.
  • மதுரை சென்றார்.

இத்தொடரில் யார் யாரைப் பார்த்தான்? பார்த்தது யார் என்று புரியவில்லை, 

  • கண்ணனை இராமன் பார்த்தான். 
  • கரும்பைத் தின்றான்.
  • மதுரைக்குச் சென்றார்.

இப்போது புரிகிறதா? : நன்றாகப் புரிகிறது. 

கண்ணனை இராமன் பார்த்தான் என்னும் இத்தொடரில் ஐ என்னும் உருபு யார், யாரைப் பார்த்தான் எனப் பெயரை வேறுபடுத்திக் காட்டுவதனால், வேற்றுமை என்கிறோம். 

  • பெயரின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் உருபுக்கு வேற்றுமை உருபு என்பது பெயர். 
  • ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன வேற்றுமை உருபு. 

வேற்றுமை வகைகள்

  • முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை), 
  • இரண்டாம் வேற்றுமை (செயப்படுபொருள் வேற்றுமை), 
  • மூன்றாம் வேற்றுமை,
  • நான்காம் வேற்றுமை, 
  • ஐந்தாம் வேற்றுமை, 
  • ஆறாம் வேற்றுமை, 
  • ஏழாம் வேற்றுமை, 
  • எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)

என எண் வகைப்படும். 


  வேற்றுமை, வேற்றுமை உருபுகள், சொல்லுருபுகள், விரிவாக அறிய

வேற்றுமைத்தொகை

  • ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன வேற்றுமை உருபு. 

இருசொற்களுக்கிடையே இவ்வேற்றுமை உருபு மறைந்து வருவதனை வேற்றுமைத்தொகை என்கிறோம்.

💡 மாணவர் குறிப்பு (Note): முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை. மற்ற வேற்றுமைகளுக்கு உருபுகள் உண்டு. இரண்டாம் வேற்றுமை உருபுமுதல் ஏழாம் வேற்றுமை உருபுவரை உள்ளனவற்றுள் ஏதேனும் ஒன்று வேற்றுமை உருபாய் வரும்.
  • மதுரை சென்றார் 

இத்தொடர் மதுரைக்குச் சென்றார் என விரிந்து நின்று பொருள் தருகிறது. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் "கு" என்னும் வேற்றுமை உருபு இல்லை. அது தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது. இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ.ஆல், கு, இன், அது, கண்) ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும். 

வேற்றுமைத்தொகை எடுத்துக்காட்டு 

வேற்றுமைத்தொகை  வேற்றுமை உருபுகள் எடுத்துக்காட்டு  பொருள்
முதல் (எழுவாய்) இல்லை  - -
இரண்டாம்  பால் பருகினான் (பால் + ஐ + பருகினான்) இங்கு என்னும் உருபு மறைந்துள்ளது
மூன்றாம்  ஆல், ஆன், ஒடு, ஓடு தலை வணங்கினான் (தலை + ஆல் + வணங்கினான்)  இங்கு ஆல் என்னும் உருபு மறைந்துள்ளது
நான்காம்  கு  வேலன் மகன் (வேலன் + கு + மகன்) இங்கு கு என்னும் உருபு மறைந்துள்ளது
ஐந்தாம்  இல், இன் ஊர் நீங்கினான் (ஊர் + இன் + நீங்கினான்) இங்கு இன் என்னும் உருபு மறைந்துள்ளது
ஆறாம்  அது, ஆது, அ செங்குட்டுவன் சட்டை (செங்குட்டுவன் + அது + சட்டை)   இங்கு அது என்னும் உருபு மறைந்துள்ளது
ஏழாம்  கண் குகைப்புலி (குகை + கண் + புலி) இங்கு கண் என்னும் உருபு மறைந்துள்ளது
எட்டாம் (விளி) இல்லை  - -

உருபும் பயனும் உடன்தொக்க தொகை எடுத்துக்காட்டு

  • தேர்ப்பாகன் 

இத்தொடர் "தேரை ஓட்டும் பாகன்" என விரிந்து பொருளை உணர்த்துகிறது. கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கிடையில் "" என்னும் வேற்றுமை உருபும், ''ஓட்டும்” என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன. 

இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இதுவும் வேற்றுமைத் தொகையே ஆகும். 

📌 TNPSC தேர்வர்கள் நினைவில் கொள்க::

  • தமிழ்த்தொண்டு (தமிழுக்குச் செய்யும் தொண்டு) 

நான்காம் வேற்றுமை(கு) உருபும் பயனும் உடன்தொக்க தொகை.  தேர்வுகளில் இந்த நுட்பமான வேறுபாட்டைப் புரிந்துகொண்டால் எளிதில் முழு மதிப்பெண் பெறலாம்!

வேற்றுமை சொல் விரிந்த வடிவம் மறைந்த உருபு & பயன்
2-ஆம் வேற்றுமை தேர்ப்பாகன் தேர் + ஐ + ஓட்டும் + பாகன் ஐ + ஓட்டும்
3-ஆம் வேற்றுமை பொற்புனைந்தான் பொன் + ஆல் + செய்த + புனைந்தான் ஆல் + செய்த
4-ஆம் வேற்றுமை தமிழ்த்தொண்டு தமிழ் + கு + செய்யும் + தொண்டு கு + செய்யும்
5-ஆம் வேற்றுமை மலைவீழ்வருவி மலை + இன் + நின்று + வீழ் + அருவி இன் + நின்று
6-ஆம் வேற்றுமை கனகக்கிளி கனகம் + அது + ஒத்த + கிளி அது + ஒத்த
7-ஆம் வேற்றுமை கடற்கரைச்சாலை கடற்கரை + இன் + கண் + அமைந்த + சாலை கண் + அமைந்த

வினைத்தொகை என்றால் என்ன? 

காலங்காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது (பெயரெச்சம்) வினைத்தொகை எனப்படும். 

  • வீசுதென்றல், 
  • கொல்களிறு 
  • பொழிதருமணி, பணைதருபருமணி, வருபுனல், நிதிதருகவிகை

வீசு, கொல் என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே தென்றல், களிறு என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலத்தை வெளிப்படுத்தாத பெயரெச்சங்களாயின. மேலும் இவை வீசிய காற்று, வீசுகின்ற காற்று, வீசும் காற்று எனவும் கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றன.

காலங்கரந்த பெயரெச்சம் வினைத்தொகை - நன்னூல்

காலம் காட்டும் இடைநிலைகள் தனக்குள்ளே மறைந்து (தொக்கி) வரும் பெயரெச்சமே "வினைத்தொகை" ஆகும்.

காலங்காட்டும் இடைநிலை

காலங்காட்டும் இடைநிலை இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன. வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும். 

இறந்தகாலம் நிகழ்காலம்

எதிர்காலம்

பேசும் நேரத்துக்கு முன்னர் நிகழ்ந்தவற்றைக் குறிப்பது அந்நேரத்தில் நடந்துகொண்டு இருப்பவற்றைக் குறிப்பது பின்னர் நிகழ இருப்பவற்றைக் குறிப்பது
செய்தான் செய்கின்றான் செய்வான்
செய் + த் + ஆன் ----> செய்தான் செய் + கின்று + ஆன் ----> செய்கின்றான் செய் + வ் + ஆன் ----> செய்வான்
இடைநிலைகள் - "த்" (த், ட், ற், த்த்), "ந்த்" (ந்த், ன்ற், ண்ட்), "இன்" (ய், ன்) இடைநிலைகள்- "கின்று", "கிறு" இடைநிலைகள் - "வ்", "ப்ப்", "ப்"

வினைத்தொகை எடுத்துக்காட்டு 

வினைத்தொகைச் சொல் முக்கால விரிவு (இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்)
உண்கலம் உண்ட கலம், உண்கின்ற கலம், உண்ணும் கலம்
ஆடுகொடி ஆடிய கொடி, ஆடுகின்ற கொடி, ஆடும் கொடி
பாய்புலி பாய்ந்த புலி, பாய்கின்ற புலி, பாயும் புலி
அலைகடல் அலைந்த கடல், அலைகின்ற கடல், அலையும் கடல்
எழுகதிர் எழுந்த கதிர், எழுகின்ற கதிர், எழும் கதிர்

என முக்காலத்திற்கும் ஏற்பப் பொருள் கொள்ளலாம். 

பண்புத்தொகை என்றால் என்ன? 

நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும், அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் "மை" என்னும் பண்பு விகுதியும் 'ஆகிய, ஆன' என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும். 

பண்புத்தொகை எடுத்துக்காட்டு

பண்புத்தொகைச் சொல் இலக்கண விரிவு (பண்பு உருபுகள்)
செங்காந்தள் செம்மையாகிய காந்தள்
வட்டத்தொட்டி வட்டமான தொட்டி
இன்மொழி இனிமையான மொழி
இன்சொல் இனிமையான சொல் (கூறுதல் சான்றோர்க்கு அழகு)

பண்புப் பெயர்கள், பெயர்ச்சொற்களோடு சேர்ந்து வரும்போது இரண்டிற்கும் இடையில் ‘ஆகிய, ஆன' என்னும் பண்பு உருபுகளும், 'மை' விகுதியும் தொக்கி (மறைந்து) வந்துள்ளன. எனவே, இவை பண்புத்தொகை பயின்று வந்த தொடர்கள். 

வெண்ணிலவு, சதுரக்கல், இன்சுவை இச்சொற்றொடர்களைப் படித்துப் பாருங்கள். 

வெண்மை, சதுரம், இனிமை ஆகிய பண்புப் பெயர்கள் நிலவு, கல், சுவை ஆகிய பெயர்ச்சொற்களோடு சேர்ந்து வரும்போது இரண்டிற்கும் இடையில் ‘ஆகிய, ஆன' என்னும் பண்பு உருபுகளும் 'மை' விகுதியும் தொக்கி (மறைந்து) வந்துள்ளன. 

பிரித்தறிதல் பண்புத்தொகைச் சொல் இலக்கணக் குறிப்பு
வெண்மை + நிலவு வெண்ணிலவு 'மை' விகுதி மறைந்து வந்தது
சதுரம் + கல் சதுரக்கல் இயல்புப் புணர்ச்சி
இனிமை + சுவை இன்சுவை 'மை' விகுதி மறைந்து வந்தது

இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன? 

சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் 'ஆகிய' என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும். 

இருபெயரொட்டுப் பண்புத்தொகை எடுத்துக்காட்டு

எடுத்துக் காட்டாக, மல்லிகைப்பூ என்னும் சொல்லைப் பார்ப்போம். 

  • மல்லிகை என்பது சிறப்புப்பெயர். 
  • பூ என்பது பொதுப்பெயர். 

இரண்டுக்கும் இடையில் 'ஆகிய' என்னும் பண்பு உருபு மறைந்து வந்துள்ளது. எனவே, இஃது இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும். 

  • மார்கழித் திங்கள், 
  • சாரைப்பாம்பு

திங்கள், பாம்பு ஆகிய பொதுப் பெயர்களுக்கு முன் மார்கழி, சாரை எனும் சிறப்புப் பெயர்கள் வந்து 'மார்கழி ஆகிய திங்கள்' என்றும், 'சாரை ஆகிய பாம்பு' என்றும் இருபெயரொட்டாக வந்துள்ளன. 

உம்மைத்தொகை  என்றால் என்ன? 

இரண்டு சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வந்து பொருள் தந்தால், உம்மைத் தொகை எனப்படும். 

  • எண்ணல், 
  • எடுத்தல், 
  • முகத்தல், 
  • நீட்டல் 

என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும். 

உம்மைத்தொகை எடுத்துக்காட்டு

  • கபிலபரணர், 
  • உற்றார் உறவினர். 

இத்தொடர்கள் கபிலரும் பரணரும், உற்றாரும் உறவினரும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன. 

இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வந்து பொருள் தருவதனால், உம்மைத் தொகை எனப்பட்டது. 

  • அண்ணன் தம்பி, 
  • தாய்சேய் 

இத்தொடர்கள் அண்ணனும் தம்பியும், தாயும் சேயும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன. 

உவமைத்தொகை என்றால் என்ன? 

இரு சொற்களுக்கு இடையே போன்ற என்னும் உவம உருபு மறைந்து வருவதை உவமைத்தொகை எனக்கூறுவர்.

உவமைத் தொடர்கள் (Uvamai Thodar) - Full Study Notes PDF
  • உவமைக்கும், பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.

உவமைத்தொகை எடுத்துக்காட்டு

உவமைத்தொகைச் சொல் உவமை (உவமானம்) உவமேயம் (பொருள்) இலக்கண விரிவு (பொருள் விளக்கம்)
கயல்விழி கயல் விழி கயல் போன்ற விழி ('போன்ற' என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது)
மலர்க்கை மலர் கை மலர் போன்ற கை ('போன்ற' என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது)

அன்மொழித்தொகை என்றால் என்ன? 

வேற்றுமை, வினை, பண்பு, உம்மை, உவமை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும்.

  • (அல்+மொழி+தொகை)= அன்மொழித்தொகை

அன்மொழித்தொகை எடுத்துக்காட்டு

அன்மொழித்தொகைச் சொல் இலக்கண விரிவு (பொருள்)
சிவப்புச் சட்டை பேசினார் சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார்
முறுக்கு மீசை வந்தார் முறுக்கு மீசையை உடையவர் வந்தார்

எனத் தொகைநிலைத்தொடர் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருகின்றன.

  • கயல்விழி வந்தாள்

இத்தொடரில் முதலில் உள்ள ‘கயல்விழி' என்பது, 

'கயல் போன்ற விழி' என்னும் பொருளைத் தரும் உவமைத்தொகை ஆகும். 

வந்தாள்' என்னும் வினைச்சொல்லைத் தழுவி நின்றதனால், 'கயல் போன்ற விழியை உடைய பெண் வந்தாள்' எனப் பொருள் தருகிறது. 

இதில் 'உடைய', 'பெண்' என்னும் சொற்கள் தொடரில் இல்லாதவை. இவ்வாறு உவமைத்தொகையை அடுத்து அல்லாதமொழி தொக்கி வருவதனால் இத்தொடரை உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்கிறோம். 

இதனைப்போன்று வேற்றுமை, வினை, பண்பு, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும். 

தொகைநிலைத் தொடர்கள் ஒப்பீட்டு அட்டவணை: எளிய விளக்கப் பட்டியல் (Quick Revision)

தொகைநிலைத் தொடர் மறைந்து வரும் உருபுகள் (என்ன தொக்கி நிற்கும்?) பாடப்புத்தக எடுத்துக்காட்டு இலக்கண விரிவு (பொருள் விளக்கம்)
1. வேற்றுமைத் தொகை ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகிய வேற்றுமை உருபுகள் மதுரை சென்றார் மதுரைக்குச் சென்றார் ('கு' என்னும் நான்காம் வேற்றுமை உருபு மறைந்துள்ளது)
2. வினைத் தொகை காலம் காட்டும் இடைநிலைகளும், பெயரெச்ச விகுதியும் ஆடுகொடி ஆடிய/ஆடுகின்ற/ஆடும் கொடி (முக்காலமும் தன்னுள் கரந்து வந்துள்ளது)
3. பண்புத் தொகை 'மை' விகுதியும், ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் செங்காந்தள் செம்மையாகிய காந்தள் ('மை' விகுதியும், 'ஆகிய' உருபும் மறைந்துள்ளன)
4. உவமைத் தொகை போல, போன்ற, நிகர, அன்ன போன்ற உவம உருபுகள் கயல்விழி கயல் போன்ற விழி ('போன்ற' என்னும் உவம உருபு மறைந்துள்ளது)
5. உம்மைத் தொகை 'உம்' என்னும் இடைச்சொல் சொற்களின் இடையிலும் இறுதியிலும் அண்ணன் தம்பி அண்ணனும் தம்பியும் ('உம்' உருபு மறைந்து வெளிப்படாமல் வந்துள்ளது)
6. அன்மொழித் தொகை மேற்கண்ட தொகைத் தொடர்களுக்குப் புறத்தே உள்ள வேறு மொழிகள் சிவப்புச் சட்டை பேசினார் சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார் (தொடர் அல்லாத வேறு சொல் தொக்கியுள்ளது)

பயிற்சி 1: தொகைநிலைத் தொடர்கள் (Quiz)

1. 'வளர்தமிழ்' என்பது எவ்வகைத் தொகைநிலைத் தொடர்?

  • அ) வேற்றுமைத்தொகை
  • ஆ) வினைத்தொகை
  • இ) பண்புத்தொகை
  • ஈ) உவமைத்தொகை

✓ சரியான விடை: ஆ) வினைத்தொகை

2. 'மலர்க்கை' என்ற சொல்லில் மறைந்து வந்துள்ள உவம உருபு எது?

  • அ) ஆகிய
  • ஆ) உம்
  • இ) போன்ற
  • ஈ) ஆல்

✓ சரியான விடை: இ) போன்ற

3. 'அண்ணன் தம்பி' என்பது எவ்வகைத் தொகைநிலைத் தொடர்?

  • அ) உம்மைத்தொகை
  • ஆ) அன்மொழித்தொகை
  • இ) பண்புத்தொகை
  • ஈ) வினைத்தொகை

✓ சரியான விடை: அ) உம்மைத்தொகை

4. 'செங்காந்தள்' என்ற சொல்லை விரித்துப் எழுதும்போது வரும் பண்பு உருபு எது?

  • அ) போன்ற
  • ஆ) ஆகிய
  • இ) உடைய
  • ஈ) இன்

✓ சரியான விடை: ஆ) ஆகிய

5. 'முறுக்கு மீசை வந்தார்' - இத்தொடர் உணர்த்தும் இலக்கணம் யாது?

  • அ) உவமைத்தொகை
  • ஆ) உம்மைத்தொகை
  • இ) அன்மொழித்தொகை
  • ஈ) வேற்றுமைத்தொகை

✓ சரியான விடை: இ) அன்மொழித்தொகை

10ம் வகுப்பு ஏழாம் வகுப்பு தமிழ் வினா விடை

அடிக்கோடிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.

1. அன்புச்செல்வன் திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக்கொண்டிருந்தார்.

  •  அன்புச்செல்வன் - வேற்றுமைத்தொகை
  • தொடுதிரை - வினைத்தொகை
2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்.
  • மோர்ப்பானை - வேற்றுமைத்தொகை (மோரை உடைய பானை - ஐ)
  • மோர் கொடுக்கவும் - வேற்றுமைத்தொகை (மோரை கொடுக்கவும்)

3. வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.

  • வெண்டைக்காய் - வெண்டை ஆகிய காய்  - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • மோர்க்குழம்பு - மூன்றாம் வேற்றுமைத்தொகை - இங்கு ஆல் என்னும் உருபு மறைந்துள்ளது

4. தங்கமீன்கள், தண்ணீர்த்தொட்டியில் விளையாடுகின்றன. 

  • தங்கமீன்கள் - தங்க போன்ற மீன்கள் - உவமைத்தொகை 
  • தண்ணீர்த்தொட்டி - வேற்றுமைத்தொகை

சொல்லுக்கான தொகையின் வகை எது?

'பெரிய மீசை' சிரித்தார்

அ) பண்புத்தொகை 

ஆ) உவமைத்தொகை 

இ) அன்மொழித்தொகை 

ஈ) உம்மைத்தொகை

தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக; 

தண்ணீர் குடி - தண்ணீரைக் குடி

தயிர்க்குடம் -  தயிரை உடைய குடம்

இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.

தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள். 

மல்லிகைப்பூ - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

பூங்கொடி - உவமைத்தொகை 

ஆடுமாடு - உம்மைத்தொகை

சுவர்க்கடிகாரம் - வேற்றுமைத்தொகை 

சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.

இன்சொல் - பண்புத்தொகை

எழுகதிர் - வினைத்தொகை

கீரிபாம்பு - உம்மைத்தொகை

மலை வாழ்வார் - வேற்றுமைத்தொகை

முத்துப்பல் - உவமைத்தொகை

தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன ? 

ஒரு தொடரில் இருசொற்கள் அமைந்து, இரண்டிற்கும் இடையில் சொல்லோ உருபோ மறையாது பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும். 

  • காற்று வீசியது 
  • குயில் கூவியது 
இவ்வாறு ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது தொகாநிலை.

முதல் தொடரில் "காற்று" என்னும் எழுவாயும் "வீசியது" என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று வேறுசொல் வேண்டாது பொருளை உணர்த்துகின்றது. 

அதேபோன்று இரண்டாவது தொடரிலும் எழுவாயும் பயனிலையும் தொடர்ந்து நின்று குயில் கூவியது என்னும் பொருளைத் தருகின்றது. 

"முற்று ஈரெச்சம் எழுவாய் விளிப்பொருள் ஆறுருபு இடையுரி அடுக்கிவை தொகாநிலை" - நன்னூல் 374

தொகாநிலைத் தொடர்கள் எடுத்துக்காட்டு

  • இளமுருகன் படிக்கிறான்

இத்தொடரைப் படித்துப் பாருங்கள். 

'இளமுருகன்' என்னும் எழுவாயும், 'படிக்கிறான்' என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று பொருளைத் தருகின்றன. 

இவ்வாறு ஒரு தொடரில் இருசொற்கள் அமைந்து, இரண்டிற்கும் இடையில் சொல்லோ உருபோ மறையாது பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும். 

தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைபடும்? 

ஒன்பது வகைகள் : தொகாநிலைத் தொடர்கள் வகைகள் ஒன்பது வகைப்படும்.

  1. எழுவாய்த்தொடர் 
  2. விளித்தொடர் 
  3. வேற்றுமைத் தொடர் 
  4. இடைச்சொற்றொடர் 
  5.  வினைமுற்றுத்தொடர் 
  6. உரிச்சொற்றொடர் 
  7. பெயரெச்சத்தொடர் 
  8. அடுக்குத்தொடர் 
  9. வினையெச்சத்தொடர்

எழுவாய்த்தொடர்

எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும். 

  • இனியன் கவிஞர் – பெயர் 
  • காவிரி பாய்ந்தது — வினை 
  • பேருந்து வருமா? - வினா 

மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர், வினை, வினா ஆகியவற்றுக்கான பயனிலைகள் வந்து எழுவாய்த் தொடர்கள் அமைந்துள்ளன. 

  • கபிலன் வந்தான் 

இச்சொற்றொடரில் 'கபிலன்' என்னும் எழுவாயைத் தொடர்ந்து 'வந்தான்' என்னும் பயனிலை வந்துள்ளதனால், இஃது எழுவாய்த்தொடர்.

விளித்தொடர்

விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும். 

  • நண்பா எழுது! 

"நண்பா" என்னும் விளிப்பெயர் எழுது என்னும் வினை  பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளது.

  • கதிரவா வா! 

இது விளித்தொடர். 

வினைமுற்றுத்தொடர்

வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும். 

  • பாடினாள் கண்ணகி 

"பாடினாள்" என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக்கொண்டு முடிந்துள்ளது. 

  • கண்டேன் சீதையை 

வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடர்கிறது. அதனால், இது வினைமுற்றுத்தொடர். 

பெயரெச்சத்தொடர்

முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும். 

  • கேட்ட பாடல் 

 "கேட்ட" என்னும் எச்சவினை ‘பாடல்' என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.

  • விழுந்த மரம் 

'விழுந்த' என்னும் எச்சவினை 'மரம்' என்னும் பெயர்ச்சொல்லோடு முடிவதனால், இது பெயரெச்சத்தொடர். 

வினையெச்சத்தொடர்

முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் ஆகும்.  

  • பாடி மகிழ்ந்தனர் 

'பாடி' என்னும் எச்சவினை 'மகிழ்ந்தனர்' என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.

  •  வந்துபோனான் 

'வந்து' என்னும் எச்சவினை 'போனான்' என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளதனால், இது வினையெச்சத்தொடர். 

வேற்றுமைத் தொடர்

வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும். 

  • கட்டுரையைப் படித்தாள். 
  • வீட்டைக் கட்டினான்

இத்தொடர்களில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது. 

  • அன்பால் கட்டினார் 

இத்தொடரில் (ஆல்) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் 

  • அறிஞருக்குப் பொன்னாடை 

இத்தொடரில் 'கு' நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

இடைச்சொற்றொடர்

இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும். 

  • மற்றொன்று 

மற்றொன்று - மற்று + ஒன்று. 'மற்று' என்னும் இடைச்சொல்லை அடுத்து 'ஒன்று' என்னும் சொல் தொடர்ந்து வந்ததனால் இஃது இடைச்சொற்றொடர். 

உரிச்சொற்றொடர்

உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும். 

  • மாமுனிவர்

இத்தொடரில் 'மா' என்பது உரிச்சொல். இதனைத் தொடர்ந்து, 'முனிவர்` என்னும் சொல் வந்துள்ளதனால், இஃது உரிச்சொற்றொடர். 

  • சாலச் சிறந்தது 

‘சால` என்பது உரிச்சொல். அதனைத்தொடர்ந்து சிறந்தது என்ற சொல் நின்று 'மிகச் சிறந்தது' என்ற பொருளைத் தருகிறது.

அடுக்குத்தொடர்

ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும். 

  • வருக! வருக! வருக! 

ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.

  • வாழ்க வாழ்க வாழ்க 

ஒரே சொல் இங்குப் பலமுறை அடுக்கி வந்துள்ளதனால், இஃது அடுக்குத்தொடர். 

தொகாநிலைத் தொடர்கள் ஒப்பீட்டு அட்டவணை: ஒரு பார்வை திருப்புதல் பட்டியல் (Quick Revision)

தொகாநிலைத் தொடர் இலக்கண விளக்கம் (சுருக்கமாக) பாடப்புத்தக எடுத்துக்காட்டு
1. எழுவாய்த்தொடர் எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது இனியன் கவிஞர், காவிரி பாய்ந்தது
2. விளித்தொடர் விளிப் பெயருடன் (அழைத்தல்) வினை தொடர்வது நண்பா எழுது!
3. வினைமுற்றுத்தொடர் வினைமுற்றுடன் ஒரு பெயர்ச்சொல் தொடர்வது பாடினாள் கண்ணகி
4. பெயரெச்சத்தொடர் முற்றுப் பெறாத வினை (எச்சம்) பெயர்ச்சொல்லுடன் முடிவது கேட்ட பாடல்
5. வினையெச்சத்தொடர் முற்றுப் பெறாத வினை (எச்சம்) வினைச்சொல்லுடன் முடிவது பாடி மகிழ்ந்தனர்
6. வேற்றுமைத் தொகாநிலைத்தொடர் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு...) வெளிப்படையாக அமைந்து பொருள் தருவது கவிதையை எழுதினார்
7. இடைச்சொற்றொடர் இடைச்சொல்லுடன் பெயர் அல்லது வினைச்சொல் தொடர்வது மற்றொன்று (மற்று + ஒன்று)
8. உரிச்சொற்றொடர் உரிச்சொல்லுடன் பெயர் அல்லது வினைச்சொல் தொடர்வது சாலச் சிறந்தது
9. அடுக்குத்தொடர் ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தனித்தனிப் பொருள் தருவது வருக! வருக! வருக!

பயிற்சி 2: தொகாநிலைத் தொடர்கள் (Quiz)

1. 'நண்பா எழுது!' என்பது எவ்வகைத் தொகாநிலைத் தொடர்?

  • அ) எழுவாய்த்தொடர்
  • ஆ) விளித்தொடர்
  • இ) வினைமுற்றுத்தொடர்
  • ஈ) அடுக்குத்தொடர்

✓ சரியான விடை: ஆ) விளித்தொடர்

2. 'பாடினாள் கண்ணகி' என்ற தொடரின் வகை யாது?

  • அ) வினைமுற்றுத்தொடர்
  • ஆ) வினையெச்சத்தொடர்
  • இ) பெயரெச்சத்தொடர்
  • ஈ) எழுவாய்த்தொடர்

✓ சரியான விடை: அ) வினைமுற்றுத்தொடர்

3. 'கேட்ட பாடல்' - இத்தொடரில் பயின்று வந்துள்ள எச்சம் எது?

  • அ) வினையெச்சம்
  • ஆ) பெயரெச்சம்
  • இ) முற்றெச்சம்
  • ஈ) குறிப்பு வினைமுற்று

✓ சரியான விடை: ஆ) பெயரெச்சம்

4. 'கவிதையை எழுதினார்' - இத்தொடரில் வெளிப்படையாக வந்துள்ள வேற்றுமை உருபு எது?

  • அ) ஆல்
  • ஆ) கு
  • இ) ஐ
  • ஈ) கண்

✓ சரியான விடை: இ) ஐ

5. 'வருக! வருக! வருக!' - இத்தொடர் எவ்வகைத் தொகாநிலைத் தொடர்?

  • அ) இடைச்சொற்றொடர்
  • ஆ) உரிச்சொற்றொடர்
  • இ) அடுக்குத்தொடர்
  • ஈ) விளித்தொடர்

✓ சரியான விடை: இ) அடுக்குத்தொடர்

மதிப்பீடு - தொகாநிலைத் தொடர்கள் - 10ம் வகுப்பு- வினா விடை 10th standard Tamil Book Back Questions and Answers

வண்ணச் சொற்களின் தொடர்வகைகளை எழுதுக. 

தொடர் தொடர் வகை விளக்கம்
பழகப் பழகப் பாலும் புளிக்கும் அடுக்குத்தொடர் 'பழக' என்ற சொல் இரண்டு முறை அடுக்கி வந்து, ஒரு பொருளை வலியுறுத்திக் கூறுகிறது.
வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன் பெயரெச்சத்தொடர் 'வடித்த' என்பது முற்றுப்பெறாத எச்சவினை. இது 'கஞ்சி' என்னும் பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ளதால் இது பெயரெச்சம் ஆகும்.
வந்தார் அண்ணன் வினைமுற்றுத்தொடர் 'வந்தார்' என்ற வினைமுற்று முன்வந்து, 'அண்ணன்' என்ற பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ளது.
அரிய கவிதைகளின் தொகுப்பு இது வேற்றுமைத் தொடர் கவிதைகளின் (கவிதை + இன் + அ) - 'இன்' என்னும் ஆறாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது.
மேடையில் நன்றாகப் பேசினான் வினையெச்சத்தொடர் 'நன்றாக' என்பது முற்றுப்பெறாத வினையெச்சம், 'பேசினான்' என்பது வினைமுற்று.

கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.

மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.

பத்தியில் உள்ள தொடர் வகைகளைக் கண்டறிதல்

தொடர் தொடர் வகை விளக்கம்
இறங்கினார் முகமது வினைமுற்றுத்தொடர் 'இறங்கினார்' என்ற வினைமுற்று முன்னால் வந்து 'முகமது' என்ற பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ளது.
அவர் பாடகர் எழுவாய்த்தொடர் 'அவர்' என்னும் எழுவாய் 'பாடகர்' என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளது.
கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் பெயரெச்சத்தொடர் 'கேட்ட', 'கேட்காத' ஆகிய எச்சவினைகள் 'பாடல்களையும்' என்னும் பெயர்ச்சொற்களைக் கொண்டு முடிந்துள்ளன.
அடுக்கு அடுக்காக அடுக்குத்தொடர் 'அடுக்கு' என்ற சொல் மீண்டும் வந்து பொருள் தருகிறது.

திணை, பால், எண், இட வழுக்கள்

பிழைகள் நேராமல் இருக்க நாம் காலம், திணை, பால், எண், இடம் பற்றி அறிதல் வேண்டும். 

சொற்றொடர்ப் பொருத்தம்

சொற்கள் சேர்ந்தமைவது சொற்றொடராகும். ஒரு சொற்றொடரிலுள்ள எழுவாய், அதன் பயனிலையோடு திணை, பால், எண், இடங்களில் பொருத்தமாக அமைதல் வேண்டும். இவையே வழுவற்ற சொற்றொடர்களாம்.

திணைப்பொருத்தம் : 

  • திணைப்பொருத்தம் - கோலமயில் ஒயிலாக ஆடியது.

( கோலமயில் - அஃறிணை எழுவாய்; ஆடியது - அஃறிணைப் பயனிலை )

  • திணை வழு - அரசன் வந்தது❌
(✅அரசன் வந்தான்)

பால் பொருத்தம் : 

  • பால் பொருத்தம் - வண்டுகள் தேன் குடித்தன. 

(வண்டுகள் - பலவின்பால் எழுவாய்; குடித்தன - பலவின்பால் பயனிலை)

  • பால் வழு - கபிலன் பேசினாள்❌
(✅கபிலன் பேசினான்)

எண் பொருத்தம் : 

  • எண் பொருத்தம் - விண்கலங்கள் விண்ணில் பறந்தன. 

( விண்கலங்கள் - எழுவாய்ப் பன்மை; பறந்தன - பன்மைப் பயனிலை )

  • எண் வழு - குயில்கள் கூவியது❌
(✅குயில்கள் கூவின)

இடப்பொருத்தம் : 

  • இடப்பொருத்தம் - அவன் பாடம் படித்தான். 

( அவன் - படர்க்கை எழுவாய்; படித்தான் - படர்க்கைப் பயனிலை )

  • இட வழு - கமலா சிரித்தான்❌
(✅கமலா சிரித்தாய்)

சிறப்புப் பொருத்தம் : 

பாவேந்தர், பாரதியைப் புகழ்ந்து பாடினார். பாவேந்தர் என்னும் பெயர் பாரதிதாசனையே குறிக்கும் என்பதனால், அது சிறப்புப் பெயராயிற்று. சிறப்புப் பொருத்தம் உயர்வுமட்டுமல்லாது இழிவு கருதியும் வரும்.

(எ.கா) முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.

தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக.

(எ.கா.) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின. 

விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின

I. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான். 

கபிலன் வேலை செய்தான். களைப்பாக இருக்கிறான். 

2. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.

இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.



கூட்டுநிலைப் பெயரெச்சர்கள்

ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடியும் கூட்டுநிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம். வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன. 

  • கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி 

வெளி இணைப்புகள் (Reference Links / External Links)

உள் இணைப்புகள் (Internal Links)

TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET பொதுத்தமிழ் மாதிரி வினாவிடைகள் (Model Questions)

போட்டித் தேர்வுகளில் கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட மற்றும் வரவிருக்கும் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படும் முக்கிய மாதிரி வினாக்கள் விளக்கங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:


1. 'கரும்பு தின்றான்' என்பது எவ்வகைத் தொகைநிலைத் தொடர்?

A) இரண்டாம் வேற்றுமைத்தொகை
B) மூன்றாம் வேற்றுமைத்தொகை
C) வினைத்தொகை
D) பண்புத்தொகை
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: A) இரண்டாம் வேற்றுமைத்தொகை (விளக்கம்: கரும்பை தின்றான் என 'ஐ' என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது)

2. 'சாரைப்பாம்பு' - இச்சொல்லிற்குரிய சரியான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.

A) பண்புத்தொகை
B) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
C) உவமைத்தொகை
D) வினைத்தொகை
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) இருபெயரொட்டுப் பண்புத்தொகை (விளக்கம்: சாரை ஆகிய பாம்பு - சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் வந்துள்ளது)

3. "காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகை" என்று கூறும் இலக்கண நூல் எது?

A) தொல்காப்பியம்
B) அகநானூறு
C) நன்னூல்
D) சிலப்பதிகாரம்
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: C) நன்னூல் (விளக்கம்: நன்னூல் நூற்பா 364-ன் கீழ் வினைத்தொகைக்கு இவ்விளக்கம் தரப்பட்டுள்ளது)

4. 'தமிழ்த்தொண்டு' என்ற தொகைநிலைத் தொடரை விரித்து எழுதும்போது வரும் சரியான வேற்றுமை உருபு எது?

A) ஐ
B) ஆல்
C) கு
D) இன்
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: C) கு (விளக்கம்: தமிழுக்குச் செய்யும் தொண்டு - நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை)

5. 'பாடி மகிழ்ந்தனர்' - இத்தொடர் எவ்வகைத் தொகாநிலைத் தொடரைச் சார்ந்தது?

A) பெயரெச்சத்தொடர்
B) வினையெச்சத்தொடர்
C) வினைமுற்றுத்தொடர்
D) எழுவாய்த்தொடர்
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) வினையெச்சத்தொடர் (விளக்கம்: 'பாடி' என்னும் முற்றுப்பெறாத எச்சவினை, 'மகிழ்ந்தனர்' என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளது)

6. வேற்றுமை உருபுகள் சொற்றொடரில் வெளிப்படையாக அமைந்து பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) வேற்றுமைத்தொகை
B) வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
C) அன்மொழித்தொகை
D) வினைமுற்றுத்தொடர்
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) வேற்றுமைத் தொகாநிலைத்தொடர் (விளக்கம்: உருபுகள் மறையாமல் வெளிப்படையாக வருவது தொகாநிலை ஆகும்)

7. 'சாலச் சிறந்தது' - இத்தொடரில் பயின்று வந்துள்ள உரிச்சொல் எது?

A) சிறந்தது
B) சாலச்
C) சாலச் சிறந்தது
D) இதில் உரிச்சொல் இல்லை
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) சாலச் (விளக்கம்: சால, உறு, தவ, நனி, கூர், கழி என்பன உரிச்சொற்கள் ஆகும்)

8. 'தேர்ப்பாகன்' என்பது எவ்வகைத் தொகைநிலைத் தொடர்?

A) இரண்டாம் வேற்றுமைத்தொகை
B) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
C) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
D) பண்புத்தொகை
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (விளக்கம்: தேரை ஓட்டும் பாகன் - இதில் 'ஐ' உருபும் 'ஓட்டும்' என்ற பயனும் மறைந்துள்ளன)

9. உவமைக்கும் உவமேயத்திற்கும் (பொருள்) இடையில் உவம உருபு மறைந்து வருவது எது?

A) உவமை அணி
B) உருவக அணி
C) உவமைத்தொகை
D) உம்மைத்தொகை
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: C) உவமைத்தொகை (விளக்கம்: கயல்விழி - கயல் போன்ற விழி எனப் 'போன்ற' என்ற உருபு தொக்கி வந்துள்ளது)

10. 'மற்றொன்று' (மற்று + ஒன்று) என்ற தொடரின் தொகாநிலை வகை யாது?

A) எழுவாய்த்தொடர்
B) இடைச்சொற்றொடர்
C) உரிச்சொற்றொடர்
D) அடுக்குத்தொடர்
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) இடைச்சொற்றொடர் (விளக்கம்: 'மற்று' என்பது ஒரு இடைச்சொல் ஆகும்)

11. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும், தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

A) 9, 6
B) 6, 9
C) 5, 9
D) 6, 8
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) 6, 9 (விளக்கம்: தொகைநிலைத் தொடர் 6 வகைப்படும், தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும்)

பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)

தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு (TNPSC Group 4 VAO, 2, 2A, TET): இந்தப் பாடப்பகுதியின் முழுமையான இலக்கணக் குறிப்புகள் மற்றும் மாதிரி வினாவிடைகளை PDF வடிவில் இலவசமாகப் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.