ஆகுபெயர்

ஒரு பொருளின் பெயர், தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய தொடர்ப் பொருளைத் தொன்று தொட்டு உணர்த்தி வந்தால் அதனைத் தமிழ் இலக்கணம் ஆகுபெயர் எனக் கூறுகிறது.

பெயர்ச்சொற்கள் தாம் ஆகுபெயராய் வாக்கியத்தில் வரும் என்பதால், பெயர்ச்சொற்களைப் பற்றி முதலில் அறிந்துக் கொள்க.

ஆகுபெயர் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம் பெயர்ச்சொல்

பாடத்தலைப்புகள்(toc)

இந்தியா மிகப்பெரிய நாடு இத்தொடரில் உள்ள இந்தியா இடத்தைக் குறிக்கின்றது
மட்டைப்பந்தில் இந்தியா வென்றது இத்தொடரில் உள்ள இந்தியா, இந்திய வீரர்களைக் குறிக்கின்றது

இவற்றால்,

  • ஒரு பெயர்ச் சொல்தான் ஆகுபெயராய் வரும்.
  • அப்பெயர்ச்சொல் தன் சொற்பொருளை உணர்த்தாது.
  • அச்சொல் தன்னோடு தொடர்புடைய தொடர்ப் பொருளை இடம் பெறும் வாக்கியத்தின் பொருள் சூழலுக்கு ஏற்ப உணர்த்தும்.

பெயர்ச்சொற்கள்

ஒரு பெயர் தனிச்சொல்லாக வரும் பொழுது சொற்பொருளைக் குறிக்கும்.

மரம், பள்ளிக்கூடம், சித்திரை, கிளை, இனிப்பு, பாடுதல் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவை அனைத்தும் பெயரைக் குறிக்கின்றன. இவ்வாறு ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

  • பெயரையும், இடத்தையும் குறித்து வந்ததால் அது பெயர்ச்சொல் ஆகும்.

பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?

அவை,

  1. பொருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. காலப்பெயர்
  4. சினைப்பெயர்
  5. குணப்பெயர்
  6. தொழிற்பெயர்
என ஆறுவகைப்படும்.

இந்த ஆறுபெயர்களின் அடியாகவும் ஆகுபெயர் தோன்றும் என்பதறிக.

பெயர்ச்சொற்கள் எடுத்துக்காட்டு

மல்லிகை பொருள் பெயர்
வகுப்பு இடப்பெயர்
பொழுது காலப்பெயர்
கொழுந்து சினைப்பெயர்
கார்(கருமை) பண்புப்பெயர்
ஆட்டம் தொழில் பெயர்

பொருட்பெயர்

மல்லிகை என்பது மணம்மிக்க மலரை உடைய ஒரு கொடியின் பெயர். கொடி என்பது ஒரு பொருள் ஆதலால் அது பொருள்பெயர் ஆகும்.

இடப்பெயர்

வகுப்பு என்பது மாணவர் பலர் சேர்ந்து கல்வி பயிலும் ஓர் இடத்தைக் குறிக்கும். எனவே இச்சொல் இடப்பெயர் ஆகும்.

காலப்பெயர்

பொழுது என்பது கால அளவைக் குறிப்பிடுவதால் காலப்பெயர் ஆகும்.

சினைப்பெயர்

கொழுந்து என்பது இலையின் இளமை அல்லது தளிரின் பெயரைக் குறிப்பதாகும். தளிராக உள்ள இலை தாவரத்தின ஒரு பகுதி ஆகையால் இது சினைப்பெயர் ஆகும்.

பண்புப்பெயர்

கார் என்னும் கருமை என்பது வண்ணத்தின் பெயரைக் குறிப்பதாகும். வண்ணம், வடிவம், அளவு, சுவை முதலியன பண்புப் பொருள் தருவன. எனவே கார் என்பது பண்புப் பெயர் ஆகும்.

தொழில் பெயர்

ஆட்டம் என்பது ஆடும் செயலைக் குறிக்கும் பெயர்ச்சொல். செயல், வினை, தொழில் என்பன ஒரு பொருள் குறித்த சொற்கள். எனவே ஆட்டம் என்பது தொழிற்பெயர் ஆகும்.

தொடர்ப்பொருள்

மேலே காட்டிய ஆறு பெயர்ச்சொற்களும் தத்தமக்குரிய சொற்பொருளைக் குறித்து வழங்கி வருகின்றன.

  • இனி அவை வாக்கியத்தில் இடம் பெற்றும் தொடர்ப்பொருள் குறித்து வருவதை ஆராயலாம்.

ஒரு வாக்கியத்தில் அல்லது தொடரில் தனக்குரிய சொற்பொருளையோ அல்லது சொற்பொருளோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளையோ குறிக்கலாம்:அப்பெயா் தன் சொற்பொருளோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறித்தால் அது அச்சொல்லின் தொடர்ப்பொருள் எனப்படும்.

சொற்றொடர் அல்லது தொடர் என்றால் என்ன?

இரண்டு முதலாக சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது "சொற்றொடர்" அல்லது "தொடர்" எனப்படும்.

தொடர் எடுத்துக்காட்டு 

  • நீர் பருகினான்
  • வெண்சங்கு ஊதினான்
  • கார்குழலி பாடம் படித்தாள். 

இறுதித்தொடரில் உள்ள மூன்று சொற்களும் (கார்குழலி, பாடம், படித்தாள்) தொடர்ந்து வந்து பொருளைத் தருகின்றன. 

தொடர்ப்பொருள் எடுத்துக்காட்டு

மல்லிகை சூடினாள்
வகுப்புக் கலைந்தது
பொழுது சாய்ந்தது
கொழுந்து நட்டனர்
கார் பெய்தது
ஆட்டம் முடிந்தது

ஆகுபெயர் என்றால் என்ன?

ஒரு பெயர் தன்னோடு தொடர்புடைய தொடர்ப் பொருளைத் தொன்று தொட்டு உணர்த்தி வந்தால் அதனைத் தமிழ் இலக்கணம் ஆகுபெயர் எனக் கூறுகிறது.

ஒரு பொருளின் இயற்பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குப் பெயராகி வருவது ஆகுபெயராகும்.

ஆகுபெயர் எடுத்துக்காட்டு

  • ஊர் சிரித்தது

இதில் 'ஊர்' என்ற சொல் ஊரைக் குறிக்காமல் அதோடு தொடர்புடைய ஊர் மக்களைக் குறிப்பதால் இஃது ஆகுபெயராகும்.

"பொருள்முதல் ஆறோடளவைசொல் தானி
கருவி காரியம் கருத்த னாதியுள்
ஒன்றன் பெயரான அதற்கியை பிறிதைத்
தொன்முறை உரைப்பன ஆகு பெயரே" - ந.நூற்பா 290


ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

பெயர்கள் தாம் ஆகுபெயராக வரும் என்பது முன்னதாகக் கூறப்பட்டது. அதேபோல் பெயர்ச்சொல் ஆறு வகைப்படும் என்பதும் விளக்கப்பட்டது. இவற்றால் ஆகுபெயர் ஆறுவகையாக மட்டுமே இருக்க வேண்டும் எனக் கருதலாம். ஆனால் நுட்பமான பொருள் விளக்கம் கருதி ஆகுபெயர்கள் வகைகள் பலவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.

ஆகுபெயர் வகைகள் யாவை

  1. பொருளாகுபெயர்
  2. இடவாகுபெயர்
  3. காலவாகு பெயர்
  4. சினையாகு பெயர்
  5. பண்பாகுபெயர்
  6. தொழிலாகு பெயர்
  7. என்ணலளவை ஆகுபெயர்
  8. எடுத்தலளவை ஆகுபெயர்
  9. முகத்தளவை ஆகுபெயர்
  10. நீட்டலளவை ஆகுபெயர்
  11. சொல்லாகு பெயர்
  12. தானியாகு பெயர்
  13. கருவியாகு பெயர்
  14. காரியவாகு பெயர்
  15. கருத்தாவாகு பெயர்
  16. உவமையாகுப்பெயர்

பொருள்பெயர் ஆகுபெயரானால் பொருளாகுபெயர், இடப்பெயர் ஆகுபெயரானால் இடவாகுபெயர், காலப்பெயர் ஆகுபெயரானால் காலவாகுபெயர், இவ்வாறே ஏனைய ஆகுபெயர்களும் பெயர் பெறக் காணலாம்.

ஆகுபெயர் எத்தனை வகைப்படும்

பொருளாகு பெயர் அல்லது முதலாகு பெயர்

  • மல்லிகை சூடினாள்

என்னும் வாக்கியத்தில் 'மல்லிகை' என்பது பொருள்பெயர்,ஆனால் அது வேர், தண்டு, இலை, பூ ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரு பொருளான கொடியைக் குறிக்கவில்லை. மாறாக அக்கொடியின் ஒரு பகுதி அல்லது உறுப்பு (சினை) ஆகிய பூவை மட்டும் குறித்து வந்துள்ளது. அதாவது ஒரு முழுப்பொருள் அதன் ஓர் உறுப்பை மட்டும் இங்கு உணர்த்துகிறது. இவ்வாறு ஒருவாக்கியத்தில் ஒரு பொருள் பெயர் தன்னோடு தொடர்புடைய வேறு பொருள் குறித்து வருமானால் அதனைப் பொருளாகுபெயர் என்பர்.

  • இதனை முதலாகு பெயர் என்றும் கூறுவர்.

பொருளாகு பெயர் அல்லது முதலாகு பெயர் என்பதில், முழுப் பொருளின் பெயர் அதன் ஒரு சினையைக் குறித்து வரும் என்பதறிக

இடவாகுபெயர்

  • வகுப்புக் கலைந்தது

என்னும் வாக்கியத்தில் 'வகுப்பு' என்பது இடப் பெயர். அந்த இடத்தில் கல்வி கற்கும் மாணவரைக் குறிப்பதாக வாக்கியத்தில் பொருள்படுகிறது. இங்கு வகுப்பு என்னும் இடப்பெயர் அதனோடு தொடர்புடைய மாணவரைக்குறித்தமையால் இடவாகுபெயர் ஆயிற்று.

காலவாகுபெயர்

  • பொழுது சாயந்தது

என்னும் வாக்கியத்தில் 'பொழுது' என்னும் சொல் காலப்பெயர். ஆனால் பொழுது சாயந்தது என்னும் தொடரில் காலத்தைக் குறிக்காமல் சூரியனைக் குறிக்கிறது. எனவே காலவாகுபெயர் ஆயிற்று.

சினையாகுபெயர்

  • கொழுந்து நட்டனர்
  • வெற்றிலை நட்டனர்

இலையின் தளிர்ப்பருவத்தைக் குறிக்கும் பெயர் 'கொழுந்து' ஆகும். இலை என்பது தாவரத்தின் ஓர் உறுப்பு அல்லது சினையாகும். 'கொழுந்து நட்டனர்’ என்னும் வாக்கியத்தில் கொழுந்து என்னும் இலைப்பெயர் 'மருக்கொழுந்து' என்னும் செடியைக் குறிப்பிடுகிறது. இதனால் இது சினையாகுபெயர் ஆயிற்று. ஓர் உறுப்பின் பெயர் முழுப்பொருளையும் ஒரு தொடரில் குறித்து வந்தால் அச்சொல் சினையாகுபெயர் என அழைக்கப்படும்.

இது பொருளாகுபெயர் அல்லது முதலாகுபெயரின் மறுதலையாக அமைந்துள்ளமை காண்க.

பொருளாகுபெயர் முழுப்பொருள் உறுப்பைக் குறித்தல் (மல்லிகை - பூ) மல்லிகை சூடினாள்
சினையாகுபெயர் ஓர் உறுப்பு முழுப் பொருளைக் குறித்தல் (கொழுந்து - மருக்கொழுந்து) கொழுந்து நட்டனர்

தொழிலாகுபெயர்

  • ஆட்டம் முடிந்தது

ஆடும் செயலை அல்லது தொழிலைக் குறிப்பிடும் பெயர் 'ஆட்டம்' என்பதாகும். 'ஆட்டம் முடிந்தது' என்னும் வாக்கியத்தில் ஆட்டம் என்பது தொழில் பெயரைக் குறிப்பதற்காக வரவில்லை. ஆடும் செயலோடு தொடர்புடைய கலை நிகழ்ச்சியைக் குறித்து வந்துள்ளது. அதனால் ஆட்டம் என்பது தொழிலாகுபெயர் ஆயிற்று.

பண்பாகுபெயர்

  • கார் பெய்தது

பண்புப் பெயர் என்பது வண்ணம், ,வடிவம், அளவு, சுவை, தன்மை ஆகியனவற்றைக் குறிக்கும் சொல்லாகும். கார் என்பதற்குக் கருமை என்பது பொருள். எனவே இது வண்ணப் பண்புப் பெயர் எனப்படும்.

'கார் பெய்தது' என்னும் தொடரில் 'கரிய வண்ணம் உடைய மேகம்' எனக் கார் என்னும் சொல் பொருள்படுகிறது. எனவே இது பண்பாகுபெயர் ஆயிற்று.

முன்பு கூறியபடி பண்புப் பெயரின் வகையில் அளவுப்பெயரும் அடங்கும்.

அளவைப் பெயர்கள்

அளவைக் குறிக்கும் பெயர்களை அளவைப் பெயர்கள் என்பர்.

அளவுப் பெயர்கள் வகைகள்

  1. எண்ணல் அளவைப் பெயர்,
  2. எடுத்தலளவைப் பெயர்,
  3. முகத்தலளவைப் பெயர்,
  4. நீட்டலளவைப் பெயர்

என நான்கு வகைப்படும்.


அவற்றின் அடியாகப் பிறந்த ஆகுபெயர்களை இனிக் காணலாம்.

அளவை ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

  1. எண்ணல் அளவை ஆகுபெயர் ,
  2. எடுத்தலளவை ஆகுபெயர் ,
  3. முகத்தலளவை ஆகுபெயர் ,
  4. நீட்டலளவை ஆகுபெயர்

என நான்கு வகைப்படும்.


எண்ணலளவை ஆகுபெயர்

  • பழங்கள் வாங்கி வந்த அம்மா தன்பிள்ளைகளுக்கு ஆளுக்கு இரண்டு கொடுத்தார்.

இத்தொடரில் இரண்டு என்பது எண் அளவுப்பெயர். ஆனால் இங்கு இரண்டு என்பது எண்ணுப் பெயரைக் குறிக்காமல் அந்த எண்ணிக்கையில் அமைந்த பழங்களைக் குறித்தது. எனவே 'இரண்டு' என்பது இவ்வாக்கியத்தில் எண்ணலளவை ஆகுபெயர் எனப்படும்:

  • ஒன்று பெற்றால் ஒளி மயம்.

இத்தொடரில் ஒன்று என்னும் எண்ணுப்பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்குப் பெயராகி வந்தது.

எடுத்தலளவை ஆருபெயர்

  • ''கிலோ பதினைந்து ரூபாய்க்குக் கிடைக்கும்'' என அரிசி கடைக்காரர் கூறினார்.
  • ஐந்து கிலோ என்ன விலை?

'கிலோ' என்பது எடை அளவைக் குறிக்கும் பண்புப் பெயர். இவ்வாக்கியத்தில் அப்பெயர் அந்த எடை அளவு உள்ள அரிசியைக் குறிப்பிடுகிறது. ஒரு வாக்கியத்தில் எடையின் அளவுப் பெயர் அந்த எடை அளவு உள்ள பொருளைக் குறித்ததால் அது எடுத்தலளவை ஆகுபெயர் எனப்படும்.

முகத்தலளவை ஆகுபெயர்

  • அமுதன் எண்ணெய்க் கடைக்காரரிடம் ''ஒரு லிட்டர் ஊற்று'' எனக் கூறினான்.
  • நாலுலிட்டர் தேவை

'லிட்டர்' என்பது முகத்தல் அளவைக் குறிக்கும் பண்புப்பெயர் அவ்வளவைக் குறிக்கவில்லை. அவ்வளவுடைய நெய், எண்ணெய், பால் முதலியவற்றுள் ஒன்றுக்கு ஆகிவந்தது.இவ்வாக்கியத்தில் அப்பெயர் அந்தக் கொள்ளளவு உள்ள பொருளைக் குறிப்பிடுகிறது. ஒரு வாக்கியத்தில் கொள்ளவின் பெயர் அந்த அளவுள்ள பொருளைக் குறிக்குமானால் முகத்தலளவை ஆகுபெயர் எனப்படும்.

நீட்டலளவை ஆகுபெயர்

  • சட்டைக்கு இரண்டே கால் மீட்டர் எடு.
  • மூன்று மீட்டர் கொடு

‘மீட்டர்’ என்பது நீட்டல் அளவைக் குறிக்கும் பண்புப் பெயர். இந்த வாக்கியத்தில் அப்பெயர் அந்த அளவு நீளம் உள்ள துணியைக் குறிக்கிறது. இவ்வாறு ஒரு வாக்கியத்தில் நீட்டல் அளவின் பெயர் அந்த அளவுள்ள பொருளைக் குறிப்பது நீட்டலளவை ஆகுபெயர் எனப்படும்.

குறிப்பு: "ஒன்றுகொடு, நாலுகிலோ தா, இரண்டு லிட்டர் தேவை, ஐந்து முழம் வேண்டும்" என்பனபோல வரும் அளவுத்தொடர்கள் ஆகுபெயராம். ''ஒரு மாம்பழம் கொடு, இரண்டு கிலோ நெய் வேண்டும்'' என்பன ஆகுபெயராகா.

சொல்லாகு பெயர்

  • பேராசிரியரின் உரையைப்படி

இந்த வாக்கியத்தில் உரை என்னும் சொல்லின பெயர் அதன் பொருளுக்கு ஆகி வருகிறது. அதனால் இது சொல்லாகு பெயர் எனப்படும்.

  • வள்ளுவர்சொல் வாழ்க்கைக்கு இனிது

இத்தொடரில் வள்ளுவர்சொல் என்பது, சொல்லைக் குறிக்காது பொருளுக்குப் பெயராகி வந்தது.

தானியாகுபெயர்

  • அடுப்பிலிருந்து பாலை இறக்கு

பாலின் பெயர், பாலைக் குறிக்காமல் பாத்திரத்தைக் குறிக்கிறது. 'பால்' என்பது ஒரு நீர்மப் பொருள். நீர்மப் பொருள்கள் தனியே இருக்கும் தன்மை அற்றவை. அவற்றை ஏதேனும் ஒரு பாத்திரத்தில் ஊற்றியே வைத்திருப்பர். எனவே நீர்மப் பொருளும் அதனைத் தாங்கியுள்ள பாத்திரம் என இரண்டு இருக்கும்.

  • இவற்றில் நீர்மப் பொருளைத் தாங்கியுள்ள பாத்திரம் என்னும் பொருள் 'தானம்' எனப்படும்.
  • அத்தானமாகிய பாத்திரத்தில் உள்ள நீர்மப் பொருள் 'தானி' எனப்படும்.

மேல் உள்ள எடுத்துக்காட்டில் "பால்" தானியாகும்; 'பாலை இறக்கு' என்றால் பால் உள்ள தானமாகிய பாத்திரத்தை இறக்கு எனப் பொருள்படுகிறது. அதாவது தானி, இங்குத் தானத்தைக் குறிக்கிறது. அதனால் இது தானியாகுபெயர் எனப்படும்.

இடவாகுபெயர் ஊர் சிரித்தது இடத்தைக் குறிப்பிடும் பொழுது, அவ்விடத்தில் உள்ள பொருளைச் சுட்டுகின்றது இடம், பொருளுக்கு ஆகி வருவது
தானியாகு பெயர் ஏரி உடைந்தது பொருளைக் குறிப்பிடும் பொழுது, பொருள் உள்ள இடத்தைக் குறிக்கின்றது பொருள், இடத்திற்கு ஆகி வருவது

கருவியாகுபெயர் அல்லது காரண ஆகுபெயர்

கருவிப் பொருளைக் குறிக்காமல், அதனின் தோன்றிய காரியத்திற்கு ஆகிவரும்.

  • குழல் கேட்டு மகிழ்ந்தாள்
  • யாழ் கேட்டு மகிழ்ந்தாள்

குழல், யாழ் என்பது ஓர் இசைக்கருவியின் பெயர். கருவியைக் காரணம் எனவும் கூறுவர். அக்கருவியிலிருந்து தோன்றும் இசைக்கு காரியமாகும். இவ்வாறு கருவியின் பெயர் அதன் காரியமாகிய பொருளுக்கு ஆகி வருதல் 'கருவியாகு பெயர்' எனப்படும்.

  • இது காரண ஆகுபெயர் எனவும் அழைக்கப்படும்.

காரியவாகுபெயர்

காரியப்பொருள் கருவிப்பொருளுக்கு ஆகிவருவது.

  • என் பிழைப்புக் கெட்டது
  • நான் சமையல் கற்றேன்

முதல் தொடரில், பிழைப்பு என்னும் சொல் பிழைப்புக்குக் காரணமாகிய வேலையை இத்தொடரில் குறித்தது. வேலை காரணம், பிழைப்பு - காரியம் (செயல்). அதாவது வேலை செய்வதன் காரணத்தினாலேயே பிழைப்பு (வாழ்க்கை) ஆகிய காரியம் நடந்து கொண்டிருக்கிறது. இதைப் போல் காரியப் பெயர் தன்னோடு தொடர்புடைய காரணத்தைக் குறித்து வருமானால் அது 'காரியவாகுபெயர்' எனப்படும்.

இரண்டாம் தொடரில், இங்குச் சமையல் என்னும் காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்குப் (கருவிக்கு) பெயராகி வருவது காரியவாகு பெயர்.

கருத்தாவாகுபெயர்

  • வள்ளுவரைப் படித்தால் வாழலாம்
  • திருவள்ளுவரைப் படித்துப்பார்.

முதல் தொடரில், வள்ளுவர்,திருக்குறளை எழுதியவர் ஆவார். அதனால் திருக்குறளின் கருத்தா - உருவாகக் காரணமானவர் திருவள்ளுவர் ஆவார். ஆனால் இத்தொடரில் வள்ளுவர் என்னும் சொல் கருத்தாவாகிய திருவள்ளுவரைக் குறிக்கவில்லை. அவர் இயற்றிய நூலைக் குறித்தது. இவ்வாறு கருத்தாவின் பெயர், தன்னோடு தொடர்புடைய வேறு பொருளைக் குறிப்பது 'கருத்தாவாகுபெயர் ஆகும்.

இரண்டாம் தொடரில், திருவள்ளுவர் என்பது, அவரால் இயற்றப் பெற்ற நூலுக்கு ஆகிவந்ததனால், கருத்தாவாகு பெயராயிற்று.

உவமையாகுபெயர்

  • மலைகள் மோதின
  • ஒருவரைப் பார்த்து, நாரதர் வருகிறார் எனல்

முதல் தொடரில், மலைகள் என்னும் சொல் இடப்பெயர் ஆகும். ஆனால் இத்தொடரில் அச்சொல் இடப்பொருளைத் தரவில்லை. அம்மலையில் வாழும் மக்களையும் குறிப்பிடவில்லை. 'மலைகள் மோதின' என்னும் இத்தொடருக்கு 'மலை போன்ற வலிமை உடைய வீரர்கள் மோதினர் அல்லது சண்டையிட்டனர்' என்பதே பொருள். இத்தொடரில் மலைகள் என்னும் சொல் வலிமை மிக்க வீரர்களுக்கு உவமையாக வந்துள்ளது.

  • மலை - உவமானம் (உவமை);
  • வீரர்கள் - உவமேயம்.

இவ்வாறு உவமைப் பெயர் அதனோடு தொடர்புடைய உவமேயத்தைக் குறித்து வந்தால் உவமையாகுபெயர் எனப்படும்.

இரண்டாம் தொடரில், நாரதர் என்னும் பெயர் அவரைக் குறிக்காமல், அவரைப்போன்ற (கலகமூட்டுபவர்) வேறொருவர்க்கு ஆகிவந்தது.

இருமடியாகுபெயர்

  • புளி காய்த்தது

புளி என்பது ஒரு சுவையின் பெயர். இச்சுவையின் பெயர் அச்சுவையையுடைய பழத்தை முதலில் குறித்து வழங்கியது. இது முதல்நிலை, இத்தொடரில் புளி என்பது பழத்தைக் குறிக்கவில்லை. ஏனெனில் பழம் காய்க்காது மரமே காய்க்கும். இரண்டாம் நிலையில் புளிப்புச் சுவையையுடைய பழத்தைத் தரும் மரத்தை இத்தொடரில் குறித்து வந்துள்ளது. இவ்வாறு புளி, பழத்திற்கு ஆகி, பின்பு அப்பழத்தை உடைய மரத்திற்கும் ஆகி வந்துள்ளது. இவ்வாறு ஒரு சொல் இரண்டு நிலையில் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பொருள்களுக்கு ஆகி வருவதை இருமடியாகு பெயர்' என்பர்.

  • இவ்வாறு இரண்டுக்கு மேற்பட்ட நிலைகளில் வரும் பொழுது மும்மடி ஆகுபெயர், நான்மடி ஆகுபெயர் எனப்படும்.

அடையெடுத்தவாகுபெயர்

  • வெற்றிலை நட்டான்

வெற்றிலை என்னும் சொல் வெறுமை + இலை என்னும் இரண்டு சொற்களின் கூட்டாகும். வெறும் இலை மட்டுமே அக்கொடியில் பயன்படுவதால் அக்கொடியின் இலை. வெறுமை இலை என்று அழைக்கப்பட்டு வெற்றிலையாகியது. இதில் வெறுமை என்பது இலைக்கு அடையாகும். இலை என்பது அடைக்குரிய பொருளாகும். 'இலை நாட்டான்' என்று கூறினால் அது 'வெற்றிலைக் கொடியை நட்டான்' எனப் பொருள் தராது. அந்த இலைக்குரிய அடையான வெறுமையைச் சேர்த்து 'வெற்றிலை நட்டான்' என்னும் பொழுது, அடையும் (வெறுமை), சினையும் (இலை) சேர்ந்து அதன் முழுப் பொருளுக்கு ஆகி வரக் காணலாம். இவ்வாறு அடையெடுத்த பெயர்கள் தம்மோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறித்து வருவது 'அடையெடுத்த ஆகுபெயர்' எனப்படும்.

இருபெயரொட்டு ஆகுபெயர்

இரண்டு பெயர்ச் சொற்கள் சேர்ந்து ஒரு பொருளைக் குறிப்பதுண்டு. இரண்டு சொற்களுள் ஒன்று சிறப்புப் பெயராகவும், மற்றொன்று பொதுப் பெயராகவும் அமைந்து ஒரே பொருளைக் குறிப்பது இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.

  • வாழை மரம்

இவ்வெடுத்துக்காட்டில் இரண்டு சொற்கள் உள்ளன. ஒன்றுவாழை, மற்றொன்று மரம்.

  • வாழை என்பது மரவகையில் ஒன்றின் சிறப்புப் பெயராகும்.
  • மரம் என்பது பொதுப்பெயர்.

இவ்விரண்டு சொற்களும் சேர்ந்து ஒரு பொருளையே குறித்தன.

  • வகரக்கிளவி

இந்தத் தொடரில் 'கிளவி' என்பது சொல் என்னும் பொருள் குறிப்பது. 'வகரம்' என்பதும் ஒரு சொல். இத்தொடரில் கிளவி என்பது சொல் எனப்பொருள் தரும் பொதுச் சொல்லும், வகரம் என்னும் சிறப்புச் சொல்லும் சேர்ந்து ஒரே பொருள் தந்தமையால் இத்தொடர் இருபெயரொட்டுப் பண்புத் தொகை ஆயிற்று. ஆனால் இவ்விருபெயரொட்டு, வகரச் சொல்லைக் குறிக்காமல் 'வ' என்னும் எழுத்தைக் குறித்து வந்துள்ளது. எனவே இது 'இருபெயரொட்டு ஆகுபெயர்' எனப்படும்.

விட்டவாகுபெயர்

  • சென்னை வளர்கிறது

இத்தொடரில் சென்னை என்னும் இடப்பெயர், தனக்குரிய இடத்தைக் குறிப்பதை விட்டுவிட்டுத் தன்னிடத்தில் வாழும் மக்களைக் குறித்தது. அதனால் இது 'விட்ட ஆகுபெயர்" ஆகும்.

விடாத ஆகுபெயர்

  • இனிப்புத் தின்றான்

இத்தொடரில் உள்ள இனிப்பு என்னும் சுவையைக் குறித்த சொல், தனக்குரிய இனிமைப் பொருளை விட்டு விடாமல் அச்சுவையை உடைய தின்பண்டத்தைக் குறித்தது. ஆகவே இது 'விடாதவாகுபெயர்' எனப்படும்.

ஆகுபெயர் பயிற்சிகள்

''மஞ்சள் பூசி, சிவப்பு உடுத்தி, மல்லிகை சூடி மங்கையும் மணாளனும் மழலையரோடு மலர்வனம் புகுந்தனர். மானின் அழகு மயக்கியது.காளையை மழலையர் ஆடினர். இணைந்த உள்ளததர் இருந்து பேசினர்.மருக்கொழுந்து விற்கும் மாது ஒருத்தி வந்தாள்.கொழுந்தை வாங்கிக் கொழுநன் சூட்டினான்.பொழுது சாய்ந்தது. போக எழுந்தனர்.திரும்பும் வழியில் உணவகம் புகுந்து உண்ணத் தொடங்கினர்.வற்றல், பொரியல், சோறு, குழம்பு என ஏற்ற உணவை இன்பமாய் உண்டனர்.இல்லம் திரும்பினா். ஊரே உறங்கியது. உறங்கா இரண்டும் எதிர்காலத்தை எண்ணமிட்டன".

மேலே கொடுத்துள்ள பத்தியில் அடிக்கோடிட்ட சொற்களைக் கவனிக்க. அவை பெயர்ச் சொற்கள். அப்பெயர்கள் தனி ஒரு சொல்லாக வரும் பொழுது உணர்த்தும் பொருள் வேறு. இங்கு வாக்கியங்களில் அவை பெற்றுவரும் பொருள் வேறு என்பதறிக.

நினைவுகூர்க

ஆகுபெயர் சான்று

ஆகுபெயர்
உதாரணங்கள்
பொருளாகுபெயர் தாமரை மலர்ந்தது - தாமரை என்பது வேர், கொடி, இலை, பூ அனைத்தும் சேர்ந்த முழுப்பொருள். ஆனால் இங்கு பூவை மட்டும் குறிக்கின்றது
இடவாகுபெயர் காஞ்சி வென்றது - காஞ்சியை ஆண்ட மன்னனைக் குறிக்கின்றது
காலவாகு பெயர் அவள் டிசம்பர் சூடினாள் - டிசம்பர் என்கிற ஒருவகை மலரைக் குறிக்கின்றது
சினையாகு பெயர் தலைக்கு ஒரு பழம் கொடு - தலை என்பது இங்கு ஒரு மனிதனைக் குறிக்கின்றது
பண்பாகுபெயர் வெள்ளையை ஏரில் பூட்டு - இங்கு வெள்ளை என்பது வெள்ளைநிறம் கொண்ட காளையைக் குறிக்கின்றது
தொழிலாகு பெயர் வளவன் வற்றல் உண்டான் - வற்றல் என்பது தொழிலின் பெயர் - வற்றுதலை உடைய உணவுக்குப் பெயராகி வந்தது
என்ணலளவை ஆகுபெயர் நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி - இங்கு நாலும், இரண்டும் என்பது முறையே நாலடியாரையும், திருக்குறளையும் குறிக்கின்றது
எடுத்தலளவை ஆகுபெயர் இரண்டு கிலோ கொடு - இரண்டு கிலோ என்பது அந்த அளவைக் கொண்ட பொருட்களைக் குறிக்கின்றது
முகத்தளவை ஆகுபெயர் மூன்று லிட்டர் கொடு - மூன்று என்பது அந்த அளவுள்ள பால், எண்ணெய் போன்ற பொருட்களைக் குறிக்கின்றது
நீட்டலளவை ஆகுபெயர் நான்கு மீட்டர் எடு - இங்கு நான்கு மீட்டர் என்பது அவ்வளவுள்ள துணி, கயிறு போன்றவற்றைக் குறிக்கின்றது
சொல்லாகு பெயர் வள்ளுவன் சொல் வாழ்க்கைக்கு பயனுள்ளது - இங்கு சொல் என்பது கருத்தினைக் குறிக்கின்றது
தானியாகு பெயர் ஏரி உடைந்தது - ஏரி என்பது கரையைக் குறிக்கின்றது
கருவியாகு பெயர் தொலைக்காட்சி பார்த்து மகிழ்ந்தனர் - இங்கு தொலைக்காட்சி என்பது அதில் வரும் நிகழ்ச்சிகளைக் குறிக்கின்றது
காரியவாகு பெயர்
நான் சமையல் கற்றேன் - இங்குச் சமையல் என்னும் காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்குப் (கருவிக்கு) பெயராகி வருவது காரியவாகு பெயர்.
கருத்தாவாகு பெயர் திருவள்ளுவரைப் படித்துப் பார் , ஷேக்ஸ்பியரைத் தொட்டுப்பார் - இங்கு ஆசிரியர்கள் பெயர் அவர்கள் எழுதிய நூல்களைக் குறிக்கின்றது
உவமையாகுப்பெயர்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - காளை என்பது வீரமுடைய இளைஞனைக் குறிக்கின்றது

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad