நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்-குலசேகர ஆழ்வார் அருளிய பெருமாள் திருமொழி

ManiMegala 0

தமிழகத்தின் பழம்பெரும் சமயங்களுள் ஒன்று வைணவம். வைணவம் திருமாலை முழுமுதற் கடவுளாய்க்கொண்டு போற்றும்.  பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே 'நாலாயிரத் திவ்விய பிரபந்தம்' அவையே 'வைணவ இலக்கியங்கள்' என்று வழங்கப்படுகின்றன.

பாடத்தலைப்புகள்(toc)

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் பாடல்கள் விளககம்

பிரபந்தம் என்று அழைக்கப்படும் நூல் - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.
 
பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய தீந்தமிழ்ப் பனுவல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.

பிரபந்தம் என்றால் என்ன?

பிரபந்தம் என்ற சொல் உணர்த்துவது  நன்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.
 
பிரபந்தம் என்ற சொல்லின் பொருள் -  நன்கு கட்டமைக்கப்பட்டது.
 
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் எழுதியவர்கள் - பன்னிரு ஆழ்வார்கள்
  • பன்னிரு ஆழ்வார்களில் முதல் மூவர் இருண்ட காலத்தில் வாழ்ந்தவர்கள்.
  • பிற ஆழ்வார்களில் பெரும்பான்மையோர் கி.பி.600 முதல் கி.பி. 900 வரை வாழ்ந்தவர்கள்
  •  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் உரை எழுதியவர் - நாத முனிகள்

குலசேகர ஆழ்வார்

பெருமாள் திருமொழி பாடல்கள் விளக்கம்

பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது.

பாடல்-1

நம் பாடப்பகுதி குலசேகர ஆழ்வார் அருளிய பெருமாள் திருமொழியின் முதலாயிரத்தில் உள்ளது.  

மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன் 

பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன் 

தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் 

கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே. - குலசேகர ஆழ்வார்(code-box)

பொருள் : 

மீன்கள் நீந்துகின்ற வயல்கள் சூழ்ந்த வித்துவக்கோட்டில் உள்ள பெருமானே! நீ எனக்குத் திருவருள் புரியவில்லை என்றாலும், உன்னையே அடைக்கலமாகப் புகுவேனே யன்றி, எனக்கு வேறு ஒரு பற்றில்லை. மன்னவன் ஒருவன் செங்கோல் முறை தவறித் துன்புறுத்தினாலும், அவனுடைய ஆட்சியையே எதிர்நோக்கி வாழ்கின்ற குடிமக்களைப் போல, நான் உன் திருவடிகளையே எண்ணிக்கொண்டிருக்கிறேன்!

சொற்பொருள் :

  • மீன்நோக்கும்- மீன்கள் வாழும்; 
  • என்பால் - என்னிடம்; 
  • தார்வேந்தன் - மாலையணிந்த அரசன்;
  • கோல்நோக்கி - செங்கோல் செய்யும் அரசனைநோக்கி. 

இலக்கணக்குறிப்பு : 

  • நோக்காய் - முன்னிலை ஒருமை வினைமுற்று;
  •  கோல்நோக்கி - இரண்டாம் வேற்றுமைத் தொகை;
  •  தார்வேந்தன் ( தாரை அணிந்த அரசன் ) -  இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை; 
  • வாழும்குடி – பெயரெச்சம்.

பகுபத உறுப்பிலக்கணம் 

 பகுபத உறுப்புகள் விளக்கம் 

பற்றில்லேன் - பற்று + இல் + ஏன். 

  • பற்று - பகுதி, 
  • இல் - எதிர்மறை இடைநிலை, 
  • ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

பிரித்தறிதல் 

  • பற்றில்லேன் - பற்று + இல்லேன்;
  •  போன்றிருந்தேன் - போன்று + இருந்தேன்.

பாடல்-2

தமிழர், பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள். அதன்விளைவாக, சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன. அதற்கு இணையாகப் பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துகள் செறிந்திருக்கின்றன.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

-பாசுர எண்: 691

(code-box)

பாடலின் பொருள்

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.

சொல்லும் பொருளும்

  • சுடினும் - சுட்டாலும், 
  • மாளாத-தீராத, 
  • மாயம் - விளையாட்டு

நூல் வெளி

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 105 பாடல்கள் உள்ளன. இதனைப் பாடியவர் குலசேகராழ்வார். இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.

வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. குலசேகர ஆழ்வார் அங்குள்ள இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.

ஆசிரியர் குறிப்பு - குலசேகர ஆழ்வார்

பிறப்பு 

கேரள மாநிலத்திலுள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்தவர் குலசேகர ஆழ்வார். 

  • இராமபிரானிடம் பத்தி மிகுதியாக வாய்க்கப்பெற்ற காரணத்தால், இவர், குலசேகரப் பெருமாள் எனவும் அழைக்கப்பட்டார். 

இவர் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். 

அறிந்த மொழிகள் 

இவர் வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர்.

இயற்றிய நூல்கள் 

  • இவர் அருளிய பெருமாள் திருமொழி, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஒன்று.
  • இதில் நூற்றைந்து பாசுரங்கள் உள்ளன. 
  • வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. குலசேகர ஆழ்வார் அங்குள்ள இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.

குலசேகரர் தமிழில் 

  • பெருமாள் திருமொழியையும்
  • வடமொழியில் முகுந்தமாலை 

என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.

சிறப்புகள் 

குலசேகரர், திருவரங்கத்தின் மூன்றாவது மதிலைக் கட்டியதால், அதற்குக் குலசேகரன் வீதி என்னும் பெயர் இன்றும் வழங்கி வருகிறது.

வாழ்ந்த காலம் 

இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. 

கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்றிருந்தேனே 

ஆ) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி குலசேகரர் பாடியதாகும்.

உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.

அ) பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?

1. இருநூற்றைந்து 

2. நூற்றைந்து

3. நூறு

ஆ) குலசேகராழ்வார் பாடல் எந்த தொகுப்பில் உள்ளது?

1.திருவியற்பா

2. முதலாயிரம் 

3. பெரிய திருமொழி

குறுவினாக்கள்

1. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர் என்ன ? 

பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய தீந்தமிழ்ப் பனுவல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.

2. குலசேகரர் எவ்வெம் மொழிகளில் வல்லவர் ?

குலசேகரர் வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.