புத்தியைத் தீட்டு - ஆலங்குடி சோமு- 8ம் வகுப்பு இயல் நான்கு

அறிவே ஆற்றல் என்பது ஆன்றோர் கூற்று. அறிவும் உழைப்புமே ஒரு மனிதனை வாழ்வில் உயரச் செய்யும். வன்முறையால் பிறரை வெல்வது சரியான செயலன்று. அறிவினாலும் அன்பினாலும் பிறரை வெல்லும் வெற்றியே நமக்குப் பெருமை தரும். இக்கருத்துகளை விளக்கும் பாடல் ஒன்றை அறிவோம்.

பாடத்தலைப்புகள்(toc)

ஆலங்குடி சோமு பற்றிய ஆசிரியர் குறிப்புகள் TNPSC 

பிறப்பு 

சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.

சிறப்புகள்

ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்றவர். 

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

ஆலங்குடி சோமு


இவரது திரையிசைப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.


புத்தியைத் தீட்டு - ஆலங்குடி சோமு - 8ம் வகுப்பு இயல் நான்கு 

கத்தியைத் தீட்டாதே - உந்தன் 
புத்தியைத் தீட்டு 
கண்ணியம் தவறாதே - அதிலே 
திறமையைக் காட்டு!

ஆத்திரம் கண்ணை 
மறைத்திடும் போது 
அறிவுக்கு வேலை கொடு - உன்னை 
அழித்திட வந்த 
பகைவன் என்றாலும் 
அன்புக்குப் பாதை விடு!

(கத்தியைத்)

மன்னிக்கத் தெரிந்த 
மனிதனின் உள்ளம் 
மாணிக்கக் கோயிலப்பா -இதை 
மறந்தவன் வாழ்வு 
தடம் தெரியாமல் 
மறைந்தே போகுமப்பா!

(கத்தியைத்)

இங்கே இருப்பது சில காலம்
இதற்குள் ஏனோ அகம்பாவம் 
இதனால் உண்டோ ஒரு லாபம் - இதை
எண்ணிப்பாரு தெளிவாகும்!

(கத்தியைத்)


- ஆலங்குடி சோமு


சொல்லும் பொருளும்

தடம் - அடையாளம்

அகம்பாவம் - செருக்கு

நூல் வெளி

ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்றவர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

இவரது திரையிசைப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

கற்பவை கற்றபின்

அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளைத் திரட்டுக.

  • ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் -  ஆறு இல்லாத ஊர் அழகு இல்லை அதேபோல் நூலகமில்லா ஊருக்கு அறிவு இல்லை.
  • பயன்மரம் உள்ளூர்ப் பழுத்ததைப் போன்று - உள்ளூரில் பழுத்த பழம் உள்ளூர் மக்களுக்கு மட்டும் பயன்படும். அதன் பயன் பிறருக்குக் கிடைக்காது. ஆனால், ஒரு நூல் பொதுநூலகத்தில் வைக்கப்பட்டால் அது பலர்க்கும் பயன்படும். 
  • குன்றின் மேலிட்ட விளக்குப் போல - புகழ், பயன் பயனுடைமை
  • அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது - இப்ப சரியா படிக்கலன்னா வாழ்க்கையில முன்னேற முடியாது.
  • உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும் - நாம் படிக்கலன்னா ஊர்ல யாரும் மதிக்கமாட்டாங்க. 
  • அதிர அடிச்சா உதிர விளையும் - முயற்சி செஞ்சா எல்லாம் முடியும். 
  • அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்னு - சிறிய வெற்றிக்கு பின் மேன்மேலும் வெற்றியடைய முயற்சி செய்யாமை

நினைவுக்கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2025 அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு - புத்தியைத் தீட்டு - ஆலங்குடி சோமு- 8ம் வகுப்பு இயல் நான்கு தமிழ்  - வினா விடை 8th standard tamil book back

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் ......... இன்றி வாழ்ந்தார்.

அ) சோம்பல்

ஆ) அகம்பாவம்

இ) வருத்தம்

ஈ) வெகுளி


2. 'கோயிலப்பா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கோ + அப்பா

ஆ) கோயில் + லப்பா

இ) கோயில் + அப்பா

ஈ) கோ + இல்லப்பா


3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) பகைவென்றாலும்

ஆ) பகைவனென்றாலும்

இ) பகைவன்வென்றாலும்

ஈ) பகைவனின்றாலும்


4. திரைப்படப் பாடலாசிரியர் சோமுவின் ஊர்

அ) சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி

ஆ) சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குளம்

இ) சிவகங்கை மாவட்டத்திலுள்ள சித்திரங்குடி

ஈ) சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆத்தூர் 


குறுவினா

1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது.

2. பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?

நம்மை அழித்திட வந்த பகைவன் என்றாலும் அன்புக்குப் பாதை விட வேண்டும்.


சிறுவினா

புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன 

  • கத்தியைத் தீட்டாதே 
  • கண்ணியம் தவறாதே 
  • திறமையைக் காட்டு
  • ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு
  • உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும் அன்புக்குப் பாதை விடு
  • மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா 
  • இங்கே இருப்பது சில காலம் இதற்குள் ஏனோ அகம்பாவம் இதனால் உண்டோ ஒரு லாபம் - இதை எண்ணிப்பாரு தெளிவாகும்!

சிந்தனை வினா

உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.