மகளுக்குச் சொன்ன கதை- சே. பிருந்தா

Top Post Ad

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தனித்தன்மையும் தனித்திறமையும் இருக்கும். அதை அறியாத வரையில் எதிர்காலம் அச்சமூட்டும். நாம் யார். நம் ஆற்றல் என்ன என்பதை உணர்ந்துகொண்டால் வாழ்க்கை எளிதாகிவிடும். இக்கருத்தினை விளக்கும் கவிதை ஒன்றினை அறிவோம்.

சே. பிருந்தா ஆசிரியர் குறிப்பு TNPSC 

சே. பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர். 

நூல்கள்

  • மழை பற்றிய பகிர்தல்கள், 
  • வீடு முழுக்க வானம்,
  • மகளுக்குச் சொன்ன கதை 

ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.

தன்னை அறிதல்

அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு 
அது குயில் குஞ்சு என்று தெரிந்தது 
தெரிந்த பிறகு 
இனிமேல் நாம் சேர்ந்து வாழ முடியாது
போய்விடு என்றது

பாவம் குயில் குஞ்சு! 
அது எங்குப் போகும்? 
அதுக்கு என்ன தெரியும்? அது எப்படி வாழும்?

குயில் குஞ்சும் 
எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தது 
அம்மா காக்கா கேட்கவில்லை 
கிளம்பிப் போகச் சொல்லிவிட்டது

குயில் குஞ்சால் அம்மா காக்கையைப் பிரியமுடியவில்லை 
அதுவும் அந்த மரத்திலேயே 
வாழ ஆரம்பித்தது

அம்மா காக்கையைப் போல "கா" என்று 
அழைக்க முயற்சி செய்தது 
ஆனால் அதற்குச் சரியாக வரவில்லை

அதற்குக் கூடு கட்டத் தெரியாது 
பாவம் சிறிய பறவைதானே! 
கூடு கட்ட அதற்கு யாரும் 
சொல்லித் தரவும் இல்லை 
அம்மா அப்பா இல்லை 
தோழர்களும் இல்லை

குளிரில் நடுங்கியது 
மழையில் ஒடுங்கியது 
வெயிலில் காய்ந்தது 
அதற்குப் பசித்தது 
தானே இரை தேடத் தொடங்கியது

வாழ்க்கை எப்படியும் 
அதை வாழப் பழக்கிவிட்டது

ஒரு விடியலில் குயில் குஞ்சு
 "கூ" என்று கூவியது 
அன்று தானொரு 
குயில் என்று கண்டு கொண்டது.


-சே. பிருந்தா


கவிதையின் உட்பொருள்

குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது. முட்டையிலிருந்து வெளிவந்த குயில்குஞ்சு தன்னைக் காக்கைக்குஞ்சாக எண்ணிக் காக்கையைப் போலவே கரைய முயல்கிறது. தனியே சென்று வாழ அஞ்சுகிறது. தான் குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்குகிறது. நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்பது இக்கவிதையின் உட்பொருள் ஆகும்.

நூல் வெளி

இக்கவிதை மகளுக்குச் சொன்ன கதை என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC  பொதுத்தமிழ் பகுதிக்காகப் புதிய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கு உரிய தனித்தன்மைகளைப் பட்டியலிடுக.

புலி 

  • புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு
  • புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை. எனவே, அதனைப் பண்புள்ள விலங்கு என்று கூறுவர்.
  • நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது
  • எனவே இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்கிறார்கள்.

யானை

  • உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன. ஒன்று ஆசிய யானை; இன்னொன்று ஆப்பிரிக்க யானை.
  • அவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு. பெண் யானைக்குத் தந்தம் இல்லை. ஆனால் ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு. அது மட்டுமன்றி அவற்றின் உயரம், நிறம், நகம் ஆகியவற்றிலும் சில வேறுபாடுகள் உள்ளன.
  • யானைகள் எப்பொழுதும் கூட்டமாகத்தான் வாழும்.
  • யானை மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு. அது பாசம் நிறைந்த விலங்கும் கூட.
  • யானைகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவது இல்லை. அவற்றின் வழித்தடங்களில் குறுக்கிடும்போதுதான் மனிதர்களைத் தாக்குகின்றன. 
  • மேலும் யானைக்குக் கண்பார்வை குறைவுகேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதி.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கூடு கட்டத் தெரியாத பறவை

அ) காக்கை

ஆ) குயில்

இ) சிட்டுக்குருவி

ஈ) தூக்கணாங்குருவி


2. தானொரு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) தா + ஒரு

ஆ) தான் +னொரு

இ) தான் + ஒரு

ஈ) தானே + ஒரு


குறுவினா

1. காக்கை ஏன் குயில் குஞ்சைப் போகச் சொன்னது?

அம்மா காக்காவிற்கு அது குயில் குஞ்சு என்று தெரிந்ததும், இனிமேல் நாம் சேர்ந்து வாழ முடியாது போய்விடு என்று குயில் குஞ்சைப் போகச் சொன்னது.

2. குயில்குஞ்சு தன்னை எப்போது 'குயில்' என உணர்ந்தது?

குயில்குஞ்சு தன்னைக் காக்கைக்குஞ்சாக எண்ணிக் காக்கையைப் போலவே கரைய முயல்கிறது. ஆனால் முடியவில்லை. பின்புதான் குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்தது.

சிறுவினா

குயில்குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக.

குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது. முட்டையிலிருந்து வெளிவந்த குயில்குஞ்சு தன்னைக் காக்கைக்குஞ்சாக எண்ணிக் காக்கையைப் போலவே கரைய முயல்கிறது. தனியே சென்று வாழ அஞ்சுகிறது. தான் குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்குகிறது. நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்பது இக்கவிதையின் உட்பொருள் ஆகும்.

சிந்தனை வினா

உங்களிடம் உள்ள தனித்தன்மைகளாக நீங்கள் கருதுவன யாவை? 

  • தன்னம்பிக்கை
  • முயற்சி
  • ஊக்கம்
  • சிந்திக்கும் திறன் 
  • செயல்படுத்தும் திறன்

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.