உவமை அணி விளக்கம், சான்றுகள் மற்றும் வகைகள் | TNPSC பொதுத்தமிழ் இலக்கணம்

ManiMegala 1

TNPSC Group 2, 2A, 4 (VAO), TET போன்ற போட்டித்  தேர்வுகளில் பொதுத்தமிழ் பகுதியில் முழு மதிப்பெண்கள் பெற இலக்கணம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணம் கவிதைகளுக்கு அழகு சேர்ப்பதாகும். 

இதில் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் உவமை அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, மற்றும் இல்பொருள் உவமையணி ஆகியவற்றின் இலக்கண விளக்கம், திருக்குறள் சான்றுகள் மற்றும் குறிப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் மிக எளிமையாகக் காண்போம்.

மேலும், மாணவர்களின் பயிற்சிக்குத் தேவையான TNPSC Model Questions (மாதிரி வினாக்கள்) மற்றும் சுய தயாரிப்பிற்கு உதவும் Free Study Materials PDF பதிவிறக்க லிங்க் ஆகியவையும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

TNPSC பொதுத்தமிழ் - உவமை அணி முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQs) 

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இவை பெரும்பாலும் 'பொருத்துக' அல்லது 'பொருத்தமான பொருளைத் தேர்க' போன்ற வினாக்களாகக் கேட்கப்படும்.

1. நிழல்போலத் தொடர்ந்தான் - இது எவ்வகை உவமை? (CCSE 2 2A /2024)

A) வினை உவமை
B) பயன் உவமை
C) வடிவ உவமை
D) உரு உவமை
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: A) வினை உவமை

2. பின்வரும் உவமையின் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க: 'எடுப்பார் கைப்பிள்ளை' (CCSE 2 2A /2024)

A) எதையும் கேட்காதவர்
B) எடுத்து வளர்ப்பவரின் பிள்ளை
C) யார் எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவர்
D) எடுத்து வளர்ப்பவரின் சொல்லைக் கேட்பவர்
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: C) யார் எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவர்

பாடத்தலைப்புகள்(toc)

உவமை அணி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அணியிலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அணி இலக்கணம் 

  • "அணி" என்ற சொல்லுக்கு "அழகு" என்பது பொருள். 
செய்யுள்களைச் சொல்லழகும் பொருளழகும் பெறச் செய்வதே அணி இலக்கணமாகும். பள்ளி மாணவர்கள் (Class 7, 8, 11) மற்றும் TNPSC தேர்வர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், அணிகளின் தாயாகக் கருதப்படும் உவமை அணி (Uvamai Ani), அதன் வகைகள் மற்றும் அவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளைத் தெளிவான சான்றுகளுடன் இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

உவமை அணி விளக்கம் & சான்றுகள் Uvamai Ani Vilakkam in Tamil

அணிகளில் இன்றியமையாதது உவமையணி ஆகும். மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன. 

அணிகளில் முதலாவதாகவும் பிற அணிகளுக்குத் தாயாகவும் விளங்குவது உவமை அணியாகும். பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், உவமையியல் என்னும் இயல் அமைத்து இவ்வணியை விளக்கிக் கூறியிருப்பதால் இதன் சிறப்பை அறியலாம்.
உவமை அணி இலக்கண விளக்கம் - TNPSC தமிழ் குறிப்புகள்

உவமை அணி என்றால் என்ன? (What is Uvamai Ani)

ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூற விரும்பும் புலவர் சிறந்த எடுத்துக்காட்டு ஒன்றைக் கூறி அதனை விளக்குகிறார். 

  • அணியிலக்கணத்தில், இவ்வாறு சிறப்பிக்கப்படும் பொருள் உவமேயம் எனப்படும். 
  • அதனைச் சிறப்பிக்கப் பயன்பட்ட எடுத்துக்காட்டு, உவமானம் எனப்படும். 

ஒரு பாடலில் எடுத்துக்காட்டான உவமானம், பொருளான உவமேயம் இவற்றோடு போல என்னும் பொருள் தரும் உவம உருபு, உவமானத்திற்கும் உவமேயத்திற்கும் இடையே காணப்படும் பொதுத் தன்மை ஆகிய நான்கும் இடம்பெற வேண்டும். 

அப்பொழுதுதான் அப்பாடல் உவமை அணியில் அமைந்ததாகும். 

ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும். 

சான்றுகள் 

  • மலரன்ன பாதம்
  • தேன் போன்ற தமிழ்
  • புலி போலப் பாய்ந்தான்
  • மயிலொப்ப ஆடினாள்

உவமை அணி கூறுகள் (Elements of Uvamai)

ஆக உவமை அணியில், 

  • உவமானம்(உவமை)
  • உவமேயம், 
  • உவம உருபு, 
  • பொதுத்தன்மை 

என நான்கு கூறுகள் இடம்பெற வேண்டும். 

உவமை (உவமானம்)

ஒப்பிட்டுக் கூறப்படும் பொருள்.

உவமேயம் (பொருள்)

உவமையால் விளக்கப்படும் பொருள்.

உவம உருபு: 

உவமையையும் உவமேயத்தையும் இணைக்கும் சொல் (போல, போன்ற, அன்ன).

போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ போன்றவை உவம உருபுகளாக வரும். 

உவமை, உவமேயம், உவம உருபு மற்றும் பொதுத்தன்மை வேறுபாடு

உவமை தொடர்கள் உவமை உவமேயம் உவம உருபு பொதுத்தன்மை
மலரன்ன பாதம் மலர் பாதம் அன்ன மென்மை (மலர் போன்ற மென்மையான பாதம்)
தேன் போன்ற தமிழ் தேன் தமிழ் போன்ற இனிமை (தேன் போன்ற இனிமையான தமிழ்)
புலி போலப் பாய்ந்தான் புலி பாய்தல் போல வேகம் / வீரம் (புலியைப் போன்ற வேகமான பாய்தல்)
மயிலொப்ப ஆடினாள் மயில் ஆடுதல் ஒப்ப அழகு / நடனம் (மயிலைப் போன்ற அழகான ஆட்டம்)

பால் போன்ற சொல் என்னும் உவமை தொடரில்,

உறுப்பு விளக்கம் Example-ல
1. உவமை ஒப்பிடப்படும் பொருள் பால்
2. உவமேயம் விளக்கப்படும் பொருள் சொல்
3. உவம உருபு ஒப்பிடும் சொல் போன்ற
4. பொதுத்தன்மை Common quality இனிமை

பொதுத்தன்மை: 

உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையே உள்ள பொதுவான பண்பு. 

பொதுத் தன்மை இல்லாமல் மற்ற மூன்று கூறுகளைப் பெற்றிருந்தாலும் அது உவமை அணியாகாது.

'பண்புந் தொழிலும் பயனுமென் றிவற்றின் ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்ந் தொப்புமை தோன்றச் செப்புவ துவமை' - தண்டியலங்காரம் 31
டிஎன்பிஎஸ்சி மற்றும் அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட பிரத்யேகக் கல்வி வீடியோ இதுவாகும். கடினமான பாடப்பகுதிகளையும், இலக்கண விதிகளையும் எளிமையான முறையில் புரிந்துகொள்ளும் வகையில் இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகக் குறிப்புகளுடன் இந்த வீடியோவையும் முழுமையாகப் பார்த்து உங்கள் கற்றலை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.


தொல்காப்பிய உவமை வகைகள் (Uvamai Ani Types)

தமிழ் இலக்கணத்தின் உவமை வகைப்பாட்டிற்கு அடிப்படையாகத் திகழ்வது தொல்காப்பிய உவமையியல் நூற்பா ஆகும்:

"வினை பயன் மெய் உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமத் தோற்றம்"
- தொல்காப்பியம்: 1222

இதன் பொருள், உலகிலுள்ள எந்தவொரு உவமையும் வினை (செயல்), பயன் (விளைவு), மெய் (வடிவம்), உரு (நிறம்/குணம்) ஆகிய நான்கு அடிப்படைக் காரணங்களால் மட்டுமே தோன்றும் என்பதாகும்.


உவமை வகைப்பாட்டு அட்டவணை (TNPSC Quick Reference Table)

உவமை வகை விளக்கப்படும் தளம் (Core Concept) பாடப்புத்தகச் சான்று (Textbook Example) பொதுத்தன்மை (Common Factor)
1. வினை உவமை செயல் / தொழில் (Action) நிழல்போலத் தொடர்ந்தான் / புலி போலப் பாய்ந்தான் தொடர்தல் (Following) / பாய்தல் (Pouncing) ஆகிய தொழில்கள்
2. பயன் உவமை நன்மை / ஈகை (Benefit / Result) மாரி (மழை) அன்ன வண்கை வள்ளல்தன்மை (மழை தரும் அதே பயனை வழங்குதல்)
3. மெய் உவமை வடிவம் / தோற்றம் (Shape / Structure) துடி போலும் இடை உடுக்கை போன்ற நடுவில் சிறுத்த வடிவம்
4. உரு உவமை நிறம் / குணம் (Color / Hue) தளிர் போலும் மேனி / செம்பவளம் போன்ற வாய் மாந்தளிரின் நிறம் / பவளத்தின் சிவப்பு நிறம்

வகைகளின் விரிவான விளக்கம் (Detailed Analysis):

A) வினை உவமை:

ஒரு பொருளின் வினையை (செயலை) மற்றொரு பொருளின் செயலோடு ஒப்பிட்டுக் கூறுவதாகும்.
எடுத்துக்காட்டு: "நிழல்போலத் தொடர்ந்தான்" - இதில் ஒருவன் தொடர்ந்து வரும் வினையானது (செயல்), உடம்பை விட்டு நீங்காது பின்தொடரும் நிழலின் செயலுக்கு உவமையாக்கப்பட்டுள்ளது. எனவே இது வினை உவமையாகும்.

B) பயன் உவமை:

ஒரு பொருளால் கிடைக்கும் பயனை, அதே போன்ற பயன் தரும் வேறொரு சிறந்த பொருளோடு ஒப்பிடுவது ஆகும்.
எடுத்துக்காட்டு: "மாரி அன்ன வண்கை" - கைம்மாறு கருதாமல் வாரி வழங்கும் வள்ளலின் கைக்கு (பயன்), உலகிற்குப் பிரதிபலன் பாராமல் பொழியும் மழை உவமையாக்கப்பட்டுள்ளது.

C) மெய் (வடிவ) உவமை:

இலக்கணத்தில் 'மெய்' என்பது உடம்பின் வடிவத்தைக் குறிக்கும். பொருள்களின் வடிவ அமைப்பை அடிப்படையாகக் கொண்டு ஒப்பிடுவது வடிவ உவமையாகும்.
எடுத்துக்காட்டு: "துடி போலும் இடை" - உடுக்கையின் வடிவ அமைப்பை பெண்ணின் இடைக்கு (இடுப்புக்கு) வடிவ உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

D) உரு (நிற) உவமை:

இலக்கணப் பயன்பாட்டில் 'உரு ' என்பது நிறத்தைக் குறிக்கும். பொருள்களின் நிறம் அல்லது வண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒப்பிடுவது நிற உவமையாகும்.
எடுத்துக்காட்டு: "செம்பவளம் போன்ற வாய்" - உதட்டின் சிவப்பு நிறத்திற்குப் பவளத்தின் நிறம் உவமையாக்கப்பட்டுள்ளது.

📌 TNPSC தேர்வர்கள் நினைவில் கொள்க::

பொதுப் பேச்சுவழக்கில் 'உருவம்' என்றால் வடிவத்தைக் குறிக்கும். ஆனால், இலக்கணத்தில் 'உரு' என்றால் 'நிறம்' (Color) என்று பொருள். 'மெய்' என்றால் 'வடிவம்' (Shape) என்று பொருள். தேர்வுகளில் இந்த நுட்பமான வேறுபாட்டைப் புரிந்துகொண்டால் எளிதில் முழு மதிப்பெண் பெறலாம்!

தண்டியலங்காரம் / பொதுத்தன்மை வகைகள்

பொதுத் தன்மை மூன்று வகையில் அமையலாம் என அணி இலக்கண நூலார் கண்டறிந்துள்ளனர். 

அவை: 

  • பண்பு 
  • தொழில் 
  • பயன் 

என்பனவாகும். 

பொதுத் தன்மை அடிப்படையில் உவமை அணி எத்தனை வகைப்படும் ?

பொதுத் தன்மை அடிப்படையில் உவமை அணி மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது 

 அவை,

  • பண்பு உவமை அணி, 
  • தொழில் உவமை அணி, 
  • பயன் உவமை அணி 

என்பனவாகும். 

உவமை அணியின் வகைதான் மூன்றே தவிர இம்மூன்றும் ஒரே பாடலிலும் இடம் பெறலாம். தனித்தனிப் பாடல்களிலும் இடம்பெறலாம்.

மூன்றும் ஒரே பாடல் - முத்தொள்ளாயிரம்

"பால்போலும் இன்சொல் பவளம் போல் செந்துவர்வாய் சேல்போல் பிறழும் திருநெடுங்கண் - மேலாம் புயல்போல் கொடைக்கைப் புனல்நாடன் கொல்லி அயல்போலும் வாழ்வதவர்" -முத்தொள்ளாயிரம்

என்னும் பாடலில் உவமை அணியின் மூன்று பிரிவுகளையும் காணலாம்.

பாடலின் எளிமையான விளக்கத்தைக் கீழே பிரித்துக் காண்போம்.

பால்போலும் இன்சொல்: பால் போன்ற இனிமையான சொற்கள்.

பவளம் போல் செந்துவர்வாய்: பவளத்தைப் போன்ற சிவந்த, அழகான வாய்.

சேல்போல் பிறழும் திருநெடுங்கண்: சேல் மீனைப் போல அங்கும் இங்கும் பிறழ்ந்து (விழித்து) நோக்கும் அழகான நீண்ட கண்கள்.

மேலாம் புயல்போல் கொடைக்கைப் புனல்நாடன்: மேகத்தைப் போல கைம்மாறு கருதாமல் வாரி வழங்கும் கொடைத்தன்மை மிக்க கரங்களையும், நீர் வளம் மிக்க (காவிரி/பொன்னி) நாட்டையும் உடையவன் சேர மன்னன்.

பண்பு உவமை

'பவளம் போல் செந்துவர் வாய்' என்பதில், 

பவளம் உவமானம்
வாய் உவமேயம்
போல் உவம உருபு

சிவந்த வண்ணம் - பொதுத் தன்மை. வண்ணம் பண்பாதலின் இது பண்பு உவமை.

💡 மாணவர் குறிப்பு (Note): தண்டியலங்காரம் கூறும் இந்த 'பண்பு உவமை அணி' தான், தொல்காப்பியர் கூறும் 'உரு (நிறம்/குணம்) உவமை' ஆகும். இரண்டுமே நிறம் மற்றும் பண்பின் அடிப்படையில் ஒப்பிடப்படுபவையே ஆகும்.

தொழில் உவமை

'சேல்போல் பிறழும் திருநெடுங்கண்' என்பதில், 

சேல் உவமானம்
கண் உவமேயம்
போல் உவம உருபு

பிறழுதல் - பொதுத் தன்மை. பிறழுதல் தொழில் ஆதலின் இது தொழில் உவமை.

💡 மாணவர் குறிப்பு (Note): தண்டியலங்காரம் கூறும் இந்த 'தொழில் உவமை அணி' தான், தொல்காப்பியர் கூறும் 'வினை (செயல்) உவமை' ஆகும். வினையாகிய தொழிலை அடிப்படையாகக் கொண்டு ஒப்பிடுவதால் இவை இரண்டும் ஒன்றே ஆகும்.

பயன் உவமை

'புயல் போல் கொடைக்கைப் புனல் நாடன்' என்பதில், 

புயல் என்னும் மேகம் உவமானம்
கைப் புனல் நாடன் உவமேயம்
போல் உவம உருபு

கொடை - பொதுத்தன்மை. மழை, அதன் பயன் நோக்கி இங்கு உவமிக்கப்படுவதால் இது பயன் உவமை.

💡 மாணவர் குறிப்பு (Note): தொல்காப்பியமும், தண்டியலங்காரமும் ஒரு பொருளின் 'பயன்' (விளைவு/நன்மை) அடிப்படையில் ஒப்பிடுவதை ஒரே பெயரில்தான் (பயன் உவமை) குறிப்பிடுகின்றன. இதில் தேர்வர்களுக்குக் குழப்பம் தேவையில்லை.

உவமை அணி உதாரணம்

உவமை அணி எடுத்துக்காட்டு - திருகுறள் சான்று

எடுத்துக்காட்டு 1

" அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை" - குறள் (பொறையுடைமை)

பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வது போல, நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொருள். 

  • இதில் பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை
  • நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பிடப்படும் பொருள் (உவமேயம்). 
  • 'போல' என்பது உவம உருபு.

எடுத்துக்காட்டு 2

" ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு " - குறள்

ஊர் நடுவே உள்ள குளம் நிரம்பினாற்போன்றதே உலக உயிர்களை யெல்லாம் விரும்பி உதவிசெய்யும் பேரறிவு உடையானிடம் சேர்ந்த செல்வம். 

இப்பாடலில், 

ஊருணி நீர்நிறைதல் உவமை (உவமானம்)
உலகவாம் பேரறிவாளன் திரு பொருள் (உவமேயம்)
அற்று உவம உருபு

இவ்வாறு உவமை, உவமேயம் இவ்விரண்டனையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படுமாறு வரப்பாடுவது உவமையணி ஆகும். 

எடுத்துக்காட்டு 3

" இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" - குறள்

இதில் உவமையணி அமைந்துள்ளது.  

எடுத்துக்காட்டு உவமை அணி (Eduthukaatu Uvamai Ani) விளக்கம்

உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.

உவமானம் ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் அமைய இடையில் உவம உருபு மறைந்து நின்று, பொதுத் தன்மை தோன்ற விளங்குவது. 

(உவமானம் - உவமை; உவமேயம் - பொருள்)

எடுத்துக்காட்டு உவமை அணி எடுத்துக்காட்டு - திருகுறள் சான்று

எடுத்துக்காட்டு 1

" தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு " - குறள் (கல்வி)

மணற்கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். மனிதர்கள் கற்கும் அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும் என்பதே இக்குறளின் கருத்தாகும். 

தொடர் / உறுப்பு இலக்கண விளக்கம்
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி உவமை (உவமானம்)
மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு பொருள் (உவமேயம்)
அதுபோல் உவம உருபு (மறைந்து வந்துள்ளது)

இவ்வாறு உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.

எடுத்துக்காட்டு 2

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும் - குறள்

ஒருவனது உடல் தூய்மை நீரில் குளிப்பதனால் புலப்படும். உண்மையைப் பேசுவதனால், உள்ளத்தின் தூய்மை புலப்படும். 

இப்பாடலில், 

தொடர் / உறுப்பு இலக்கண விளக்கம்
உடம்பின் தூய்மை நீரால் அமையும் உவமை (உவமானம்)
உள்ளத்தின் தூய்மை உண்மை பேசுவதனால் உண்டாகும் பொருள் (உவமேயம்)
இல்லை உவம உருபு (மறைந்து வந்துள்ளது)

இப்பாடலில் உவமை, உவமேயம் இரண்டும் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டு இடையில் உவம உருபு மறையுமாறு அமைக்கப் பட்டுள்ளது. எனவே, இப்பாடல் எடுத்துக்காட்டு உவமை அணி.  

எடுத்துக்காட்டு 3

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' - குறள் 1

என்னும் திருக்குறளின் பொருள், 'எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாகப் பெற்றுள்ளமை போல உலகம் ஆதிபகவனை முதலாக உடையது' என்பதாகும். 

தொடர் / உறுப்பு இலக்கண விளக்கம்
'எழுத்தெல்லாம் அகர முதல' என்னும் தொடர் உவமை (உவமானம்)
'உலகு ஆதி பகவன் முதற்றே' என்னும் தொடர் பொருள் (உவமேயம்)
முதலாக விளங்குதல் பொதுத்தன்மை

உவம உருபு போல என்பது வெளிப்படத் தோன்றாமல் அப்பொருள் தோன்ற இடம் அளித்துள்ளமை காண்க. அதனால் இப்பாடல் எடுத்துக்காட்டு உவமை அணியின் பாற்படும்.   

இல்பொருள் உவமையணி (Ilporul Uvamai Ani) விளக்கம்

உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர். 

  • உலகில் எங்கும் காணமுடியாத அல்லது இல்லாத உவமானமாகக் கொள்ளுதல்.

இல்பொருள் உவமையணி எடுத்துக்காட்டு Ilporul uvamai ani examples

  • மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது.
  •  காளை, கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது. 

இத்தொடர்களில் 'பொன்மழை பொழிந்தது போல்', 'கொம்பு முளைத்த குதிரை போல' என்னும் உவமைகள் வந்துள்ளன. 

  • உலகில் பொன் மழையாகப் பொழிவதும் இல்லை. 
  • கொம்பு முளைத்த குதிரையும் இல்லை. 

இவ்வாறு உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர். 

எடுத்துக்காட்டு 1

'கருமுகில் தாமரைக் காடு பூத்துநீடு இருசுடர் இருபுறத் தேந்தி ஏந்தலர்த் திருவொடும் பொலியவோர் செம்பொற் குன்றின்மேல் வருவபோல் கலுழன்மேல் வந்து தோன்றினான்' - கம்பராமாயணம்

என்னும் கம்பராமாயணப் பாடலின் பொருள், 

'கார்மேகம் ஒன்று தாமரைக் காடு பூத்து, இருபுறமும் சந்திரன் சூரியரை ஏந்திக் குன்றின் மேலேறி வருவதைப் போலக் கருட வாகனத்தின் மேல் இராமன் வந்து தோன்றினான்' என்பது ஆகும். 

இதில் கார்மேகம் ஒன்று தாமரைக் காடு பூத்து இருபுறமும் சந்திரன், சூரியரை ஏந்திக் குன்றின் மேல் வருவது என்பது எங்கும் காண இயலாத காட்சி ஆகும். எனவே இது இல்பொருள் உவமை ஆயிற்று. இதனைத் தண்டியலங்காரம் இல்பொருள் உவமை அணி எனக் கூறும். 

உவமை அணி, உருவக அணி வேறுபாடு

உவமை அணி உருவக அணி
ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி என முன்னர் கற்றோம்.  உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும்.  
'தேன் போன்ற தமிழ்' என்று கூறுவது உவமை அணி  'தமிழ்த்தேன்' என்று கூறுவது உருவகம் 
  • வெள்ளம் போன்ற இன்பம்
  • கடல் போன்ற துன்பம்
  • மதிபோன்ற முகம் - மதிமுகம் 
  • இன்ப வெள்ளம்
  • துன்பக்கடல்
  • முகம் ஆகிய மதி - முகமதி 

தொடர்புடையவை

பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)

தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு TNPSC Group 4 VAO, 2 2A, TET Tamil Study Material: இந்தப் பாடப்பகுதியின் சுருக்கத்தை PDF வடிவில் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு

குறுவினா

1. உவமை, உவமேயம், உவம உருபு விளக்குக.

  • மயில் போல ஆடினாள். 
  • மீன் போன்ற கண். 

இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர். 

  • இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், கண்) உவமை அல்லது உவமானம் என்பர். 
  • உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். 
  • இத்தொடர்களில் வந்துள்ள 'போல', 'போன்ற' என்பவை உவம உருபுகளாகும்

2. உவமை அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?

உவமை அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு 

உவமை அணி எடுத்துக்காட்டு உவமை அணி
ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும்.  உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.
'தேன் போன்ற தமிழ்' என்று கூறுவது உவமை அணி  'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு' 
  • உவமை உருபு - போன்ற
  • மறைந்து உள்ளது

தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.

1. என் தாயார் என்னை .... காத்து வளர்த்தார்.

(கண்ணை இமை காப்பது போல / தாயைக் கண்ட சேயைப் போல)

2. நானும் என் தோழியும் ...... இணைந்து இருப்போம்.

(இஞ்சி தின்ற குரங்கு போல, நகமும் சதையும் போல)

3. திருவள்ளுவரின் புகழை ..... உலகமே அறிந்துள்ளது.

(எலியும் பூனையும் போல / உள்ளங்கை நெல்லிக்கனி போல)

4. அப்துல் கலாமின் புகழ் .......... உலகெங்கும் பரவியது. (குன்றின்மேலிட்ட விளக்கு போல / குடத்துள் இட்ட விளக்கு போல)

5. சிறுவயதில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் .... என் மனத்தில் பதிந்தன.

(கிணற்றுத்தவளை போல / பசுமரத்தாணி போல)

உவமை, உவமேயம், உவம உருபு வேறுபாடு

பின்வரும் தொடர்களில் உள்ள உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவற்றைக் கண்டறிந்து எழுதுக. 

தொடர்கள்உவமைஉவமேயம்உவம உருபு
மலரன்ன பாதம்மலர்பாதம்அன்ன
தேன் போன்ற தமிழ்தேன் தமிழ்போன்ற 
புலி போலப் பாய்ந்தான்புலி பாய்தல்போல
மயிலொப்ப ஆடினாள் மாதவிமயில்ஆடிதல் ஒப்ப

பழமொழிகள்(Tamil Proverbs)

நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள் (Proverbs)விடுகதைகளைப் படித்தால், தமிழின் மிகப் பெரியதொரு சொற்களஞ்சியத்தை உருவாக்கலாம்.

உவமைத் தொடர்கள் (Idioms) - 8ம் வகுப்பு 

உவமைத் தொடர்கள் (Idioms) மற்றும் பழமொழிகள் (Proverbs) தமிழ் மொழியின் செழுமையை வெளிப்படுத்துவதோடு, ஒரு கருத்தை ஆழமாகவும் சுருக்கமாகவும் கூற உதவுகின்றன.

சொலவடைகள்

சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை. 

TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET Tamil Model Questions and Answers

1. அணிகளுக்கு எல்லாம் தாயாகவும், முதன்மையானதாகவும் விளங்கும் அணி எது?

A) உருவக அணி
B) உவமை அணி
C) பின்வருநிலை அணி
D) வேற்றுமை அணி
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) உவமை அணி

2. "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை" - இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி எது?

A) எடுத்துக்காட்டு உவமை அணி
B) இல்பொருள் உவமை அணி
C) உவமை அணி
D) ஏகதேச உருவக அணி
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: C) உவமை அணி

3. உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து, உவம உருபு மறைந்து வருவது எவ்வகை அணி?

A) உவமை அணி
B) உருவக அணி
C) இல்பொருள் உவமை அணி
D) எடுத்துக்காட்டு உவமை அணி
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: D) எடுத்துக்காட்டு உவமை அணி

4. "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு" - இதில் பயின்றுள்ள அணி எது?

A) உவமை அணி
B) எடுத்துக்காட்டு உவமை அணி
C) இல்பொருள் உவமை அணி
D) வஞ்சப் புகழ்ச்சி அணி
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) எடுத்துக்காட்டு உவமை அணி

5. "மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது" - இத்தொடரில் உள்ள அணி யாது?

A) இல்பொருள் உவமையணி
B) உவமை அணி
C) எடுத்துக்காட்டு உவமை அணி
D) உருவக அணி
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: A) இல்பொருள் உவமையணி

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hi Please, Do not Spam in Comments