வழு - வழாநிலை -வழுவமைதி

வழு - வழாநிலை -வழுவமைதி

பேசுவதும் எழுதுவதும்,

இலக்கணமுறையின்றி பிழையுடனோ - வழு

இலக்கண முறையுடன் பிழையின்றியோ - வழாநிலை

பிழை, ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவதும் - வழுவமைதி

ஆகும்.

வழு என்றால் என்ன?

இலக்கணமுறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.

இரு திணையும் , ஐம்பாலும் , மூவிடமும் , காலமும் , வினாவும் விடையும், பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவையும் வழு எனப்படும். 

வழுவின் வகைகள் எடுத்துக்காட்டு

திணை வழு
செழியன் வந்தது
பால் வழு
கண்ணகி உண்டான்
இடம் வழு
நீ வந்தேன்
காலம் வழு
நேற்று வருவான்
வினா வழு
ஒரு விரலைக் காட்டிச் 'சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல்
விடை வழு
'கண்ணன் எங்கே இருக்கிறார்?' என்ற வினாவிற்குக் 'கண்ணாடி பைக்குள் இருக்கிறது' என்று விடையளித்தல்
மரபு வழு
தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் 'தென்னந்தோட்டம்' என்று கூறுதல்

வழாநிலை என்றால் என்ன?

இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.

இரு திணையும் , ஐம்பாலும் , மூவிடமும் , காலமும் , வினாவும் விடையும், பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகள் இல்லாதிருப்பின் அவை வழாநிலை எனப்படும். 

வழாநிலையின் வகைகள் எடுத்துக்காட்டு

திணை வழாநிலை
செழியன் வந்தான்
பால் வழாநிலை
கண்ணகி உண்டாள்
இடம் வழாநிலை
நீ வந்தாய்
காலம் வழாநிலை
நேற்று வந்தான்
வினா வழாநிலை
இரு விரல்களைக் காட்டி 'எது சிறியது? எது பெரியது?' என்று கேட்டல்
விடை வழாநிலை

கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் 'கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார்' என்று விடையளித்தல்

மரபு வழாநிலை
தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் 'தென்னந்தோப்பு' என்று கூறுதல்

வழு மற்றும் வழாநிலை வேறுபாடு எடுத்துக்காட்டு


வழு வழாநிலை
திணை செழியன் வந்தது செழியன் வந்தான்
பால் கண்ணகி உண்டான் கண்ணகி உண்டாள்
இடம் நீ வந்தேன் நீ வந்தாய்
காலம் நேற்று வருவான் நேற்று வந்தான்
வினா ஒரு விரலைக் காட்டிச் 'சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல் இரு விரல்களைக் காட்டி 'எது சிறியது? எது பெரியது?' என்று கேட்டல்
விடை 'கண்ணன் எங்கே இருக்கிறார்?' என்ற வினாவிற்குக் 'கண்ணாடி பைக்குள் இருக்கிறது' என்று விடையளித்தல்

கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் 'கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார்' என்று விடையளித்தல்

மரபு தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் 'தென்னந்தோட்டம்' என்று கூறுதல் தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் 'தென்னந்தோப்பு' என்று கூறுதல்


வழுவமைதி என்றால் என்ன?

இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.

வழுவமைதியின் வகைகள் எடுத்துக்காட்டு

1. திணை வழுவமைதி

"என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணை வழுவமைதி ஆகும். 

இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.

2 பால் வழுவமைதி

'வாடா இராசா, வாடா கண்ணா' என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால் வழுவமைதி ஆகும். 

இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.

3. இட வழுவமைதி

மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, 

'இந்த மாறன் ஒருநாளும் பொய்கூறமாட்டான்' என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இட வழுவமைதி ஆகும்.

4. கால வழுவமைதி

குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.

இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். 

அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை. 

ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை தோக்கிக் கால வழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம்.

5. மரபு வழுவமைதி

"கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்"-பாரதியார்.

குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக. 

அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.

விடை: அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார் - கால வழுவமைதி

ஆ) இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்" என்று கூறினான்.

விடை: இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்" என்று கூறினான் - இட வழுவமைதி

ஆண்பாற்பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக.

தந்தை, " மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா?" என்று சொன்னார்.

விடை: தாய், " மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா?" என்று சொன்னார். 

வழுவை வழாநிலையாக மாற்றுக

அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது.

விடை: அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள். அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பினாள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad