வினா விடை வகைகள் எடுத்துக்காட்டு - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் TNPSC General Tamil இலக்கணம்

பல்வேறு சூழல்களில் வினாக்கள் வினவுகிறோம்; விடைகள் கூறுகிறோம். மொழியின் வளர்ச்சி என்பது வினவுவதிலும் விடையளிப்பதிலும் கூட இருக்கிறது. அவற்றைப் பற்றி நன்னூலார் விளக்கியிருக்கிறார். 
 
பாடத்தலைப்புகள்(toc)

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க முதலில் வினா என்றால் என்ன? வினா எத்தனை வகைபடும்? விடை என்றால் என்ன? விடை எத்தனை வகைபடும்? என்பதனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

வினா 

வினா என்றால் என்ன?

என்ன? எப்படி ? எங்கு ? ஏன் ? என்று தனக்கு தெரியாததை அறியும்பொருட்டு அல்லது ஒருபொருள் குறித்து, ஐயத்தினைப் போக்கிக் கொள்வதற்காக அல்லது ஒரு தொழிலைச் செய்யும்படி ஏவும் போது கேட்கப்படும் கேள்வி வினா ஆகும்.

என்ன? எப்படி ? எங்கு ? ஏன் ? என வினாமேல் வினாவைக் கேட்டு விடையறிய விரும்புகின்றவனே சிறந்த அறிவாளியாக ஆகமுடியும் என்று சாக்கரடிசும், தந்தை பெரியாரும் கூறுவர். (alert-success)

தமிழ் வினாவெழுத்து என்றால் என்ன?

வினாப்பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கு வினாவெழுத்து என்று பெயர்.

வினாவெழுத்து பற்றி அறிந்துக் கொள்க (link)
  • இவை சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்.
  • எ,யா,ஆ,ஓ,ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.

வினா எத்தனை வகைபடும்?

வினா வகைகள் 

வினா அறுவகைப்படும். 
அவை: 
  1. அறிவினா, 
  2. அறியா வினா, 
  3. ஐய வினா, 
  4. கொளல் வினா, 
  5. கொடை வினா, 
  6. ஏவல் வினா 
என்பன. 

அறி வினா என்றால் என்ன?

தான் ஒரு பொருளை நன்கறிந்திருந்தும் அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதனை அறியும்பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா. 

அறிவினா எடுத்துக்காட்டு

  • திருக்குறளை இயற்றியவர் யார் ? என ஆசிரியர் மாணவனிடம் வினவுவது. 

அறியா வினா என்றால் என்ன?

தான் அறியாத ஒரு பொருளை அறிந்துகொள்வதற்காகப் பிறரிடம் வினவுவது அறியாவினா. 

அறியா வினா எடுத்துக்காட்டு

  • எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றியன எவை ? என மாணவன் ஆசிரியரிடம் வினவுவது. 

ஐய வினா என்றால் என்ன?

தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒருபொருள் குறித்து, ஐயத்தினைப் போக்கிக் கொள்வதற்காக வினவப்படும் வினா, ஐயவினா.  

ஐய வினா எடுத்துக்காட்டு

  • அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?

கொளல் வினா என்றால் என்ன?

தான் ஒரு பொருளை வாங்கிக்கொள்ளும்பொருட்டுக் கடைக்காரரிடம் வினவும் வினா, கொளல்வினா.  

கொளல் வினா எடுத்துக்காட்டு

  • பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா. 

கொடை வினா என்றால் என்ன?

தான் ஒரு பொருளைக் கொடுப்பதற்காக, அப்பொருள் இருத்தலைப் பற்றிப் பிறரிடம் விளவுவது, கொடைவினா.  

கொடை வினா எடுத்துக்காட்டு

  • மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ ? 

ஏவல் வினா என்றால் என்ன?

ஒரு தொழிலைச் செய்யும்படி ஏவும் வினா, ஏவல் வினா.

ஏவல் வினா எடுத்துக்காட்டு

  • மனப்பாடச் செய்யுளைப் படித்தாயா? 
  • முருகா சாப்பிட்டாயா? 
இவை படி, சாப்பிடு என்று ஏவல் பொருளைத் தருகின்றன.
அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை
ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார் - நன்னூல்,385 (code-box)
சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்
உற்ற(து) உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும்எண் இறையுள் இறுதி
நிலவிய ஐந்தும்அப் பொருண்மையின் நேர்ப" -நன்னூல்,386 (code-box)

விடை 

விடை என்றால் என்ன? 

என்ன? எப்படி ? எங்கு ? ஏன் ? என்று தனக்கு தெரியாததை அறியும்பொருட்டு அல்லது ஒருபொருள் குறித்து, ஐயத்தினைப் போக்கிக் கொள்வதற்காக அல்லது ஒரு தொழிலைச் செய்யும்படி ஏவும் போது கேட்கப்படும் கேள்விக்கு ஏற்ப பதில் அளிப்பதுதான் விடை ஆகும்.

வினாவிற்கு ஏற்ப விடையளிப்பதுதான் மொழிநடையின் சிறப்பு. 
  • 'தேர்வு, நாளை நடைபெறுமா?' எனக் கேட்ட ஒருவனிடம், 
  • 'என் தங்கை ஏழாம் வகுப்பில் படிக்கிறாள்' எனக் கூறுவது தவறு. 
வினாவும் விடையும் பிழையின்றி அமைதலே முறை. 

விடையின் வேறுபெயர்கள்

இறை, செப்பு, பதில் என்பன விடையின் வேறுபெயர்கள்.(alert-passed)

விடை எத்தனை வகைபடும்?

  • முதல் மூன்று வகையும்(சுட்டு, மறை, நேர்) நேரடி விடைகளாக இருப்பதால் வெளிப்படை விடைகள் எனவும், 
  • அடுத்த ஐந்து விடைகளும்(ஏவல், வினா எதிர் வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி) குறிப்பாக இருப்பதால் குறிப்பு விடைகள் எனவும் கொள்ளலாம். 

விடை வகைகள்

விடை எண் வகைப்படும். 
அவை: 
  1. சுட்டு, 
  2. மறை, 
  3. நேர்,
  4. ஏவல், 
  5. வினா எதிர் வினாதல், 
  6. உற்றதுரைத்தல், 
  7. உறுவது கூறல், 
  8. இனமொழி 
என்பன. 

சுட்டு விடை எடுத்துக்காட்டு 

வினவும் வினாவிற்கு இது, அது என சுட்டிக் கூறும் விடை  சுட்டு விடை.

சுட்டெழுத்து பற்றி அறிந்துக் கொள்க (link)

  • “சென்னைக்கு வழி யாது ?" என்று வினவினால்,
  •  'இது' என்பதுபோலச் சுட்டிக் கூறும் விடை, சுட்டுவிடை. 

மறை விடை (எதிர்மறுத்துக் கூறல் விடை) எடுத்துக்காட்டு 

வினவும் வினாவிற்கு எதிர்மறைப் பொருளில் விடையிருப்பின் மறைவிடை எனப்படும்.

  • “இது செய்வாயா?' என்று வினவியபோது, 
  • செய்யேன் என்பதுபோல எதிர்மறுத்துக் கூறும் விடை, எதிர்மறைவிடை. 

நேர் விடை (உடன்பட்டுக் கூறுதல்) எடுத்துக்காட்டு

வினவும் வினாவிற்கு உடன்பாட்டுப் பொருளில் விடையளித்தால் நேர்விடை.

  • "இது செய்வாயா?" என்று வினவியபோது, 
  • செய்வேன் என்று உடன்பட்டுக் கூறும் விடை, நேர்விடை.

ஏவல் விடை எடுத்துக்காட்டு 

வினவும் வினாவிற்கு மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை ஏவல் விடை .

  • "இது செய்வாயா?" என்று வினவியபோது, 
  • 'நீயே செய்' என்று ஏவிக்கூறுவது ஏவல்விடை. 

வினா எதிர் வினாதல் விடை எடுத்துக்காட்டு 

வினவும் வினாவிற்கு விடையாக வினாவாகவே கூறல் வினா எதிர் வினாதல் விடை.

  • "இது செய்வாயா?” என்று வினவியபோது,
  •  'செய்யாமலிருப்பேனோ ?' என்று வினாவையே விடையாகக் கூறுவது, வினாஎதிர்வினாதல்விடை. 

உற்றதுரைத்தல் விடை எடுத்துக்காட்டு 

வினவும் வினாவிற்குத் தனக்கு உற்றதை விடையாகக் கூறுதல் உற்றதுரைத்தல் விடை.

  • “இது செய்வாயா ?” என்று வினவியபோது, 
  • 'உடம்பு நொந்தது' என்று தனக்கு உற்றதனை விடையாகக் கூறுவது, உற்றதுரைத்தல் விடை. 

உறுவதுகூறல் விடை எடுத்துக்காட்டு

வினவும் வினாவிற்குத் தனக்கு நிகழப்போவதை விடையாகக் கூறுவது உறுவதுகூறல் விடை.

  •  "செய்வாயா?” என்னும் வினாவிற்குக்
  •  'கை வலிக்கும்' எனத் தனக்கு வரப்போவதனை விடையாகக் கூறுவது, உறுவதுகூறல்விடை.

இனமொழி விடை எடுத்துக்காட்டு 

வினவும் வினாவிற்கு இனமான வேறொன்றை விடையாகக் கூறுவது இனமொழி விடை.

  •  'ஆடுவாயா?” என்று வினவியபோது, 
  • 'பாடுவேன்' என ஆடுவதற்கு இனமான பாடுவதனை விடையாகக் கூறுவது, இனமொழி விடை.
சுட்டு, மறை, நேர் ஆகிய மூன்றும் வெளிப்படை
ஏவல், வினா எதிர்வினாதல், உற்றது உரைத்தல், உறுவதுகூறல், இனமொழி ஆகிய ஐந்தும் வினாக்களுக்கு உரிய விடையைக் குறிப்பால் உணர்த்துவன.(alert-success)

 

TNPSC General Tamil Study Materials

ஒருபொருட்பன்மொழி 

  • திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கிறது. 
  • அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகின்றன. 
இவ்விரு தொடர்களிலும் ஒருபொருள் குறித்துத் தொடர்ந்து வரும் இருசொற்கள் உள்ளன. 
அவை, 
  • உயர்ந்தோங்கிய, 
  • குழிந்தாழ்ந்து 
என்பவை.
  • உயர்ந்து, ஓங்கி ஆகிய இரு சொற்களும், உயர்ந்த என்னும் ஒரே பொருளிலும்,
  • குழிந்து, ஆழ்ந்து என்பவை குழிந்து என்னும் ஒரே பொருளிலும் வருகின்றன. 

ஒருபொருட்பன்மொழி என்றால் என்ன?

ஒரு பொருளையே தரும் பல சொற்கள் தொடர்வது, ஒருபொருட் பன்மொழியாகும். 

ஒருபொருட்பன்மொழி எடுத்துக்காட்டு

  • நடுமையம். 
  • மீமிசை ஞாயிறு. 
என்னும் தொடர்களில்,
  • நடுப்பகுதி என்னும் ஒரே பொருளை உணர்த்தும் நடு, மையம் என்னும் இருசொற்களும், 
  • மேற்பகுதி என்னும் பொருளைத் தரும் மீ, மிசை என்னும் இருசொற்களும் இணைந்து வந்து ஒரே பொருளை உணர்த்தியுள்ளன.

10ம் வகுப்பு தமிழ்(10th Class Tamil Solution)- வினா விடை வகைகள்

கோடிட்ட இடங்களை நிரப்புக. 

விடைகள்: UNDERLINE AND BOLD செய்யப்பட்டுள்ளது.

அ) ஒரு பொருள் குறித்துவரும் சொற்களையே ஒருபொருட் பன்மொழி என்பர். 

ஆ) ஒருபொருட் பன்மொழிக்குச் சான்று நடுமையம்

இ) 'இது செய்வாயா' என்னும் வினாவிற்கு 'வயிறு வலிக்கும்' எனக் கூறுவது உறுவதுகூறல் விடை. 

ஈ) 'ஆடத்தெரியுமா' என்னும் வினாவிற்குப் "பாடத்தெரியும்" எனக் கூறுவது இனமொழி விடை. 

உ) நன்னூல் கிடைக்குமா எனக் கடைக்காரரிடம் கேட்பது கொளல் வினா. 

பொருத்துக. (பொருத்தப்பட்டுள்ளது)

1. அறிவினா - "இதன் பொருள் யாது?" என ஆசிரியர் மாணவரிடம் கேட்பது.

2. ஏவல் விடை -  இதனைச் செய்வாயா ? எனில், 'நீயே செய்' என்பது.

3. மறைவிடை -  வருவாயா? எனில் 'வாரேன்' என்பது.

4. உறுவது கூறல் - உண்டாயா? எனில், 'வயிறு வலிக்கும்' என்பது.

குறுவினாக்கள் 

1. வினா எத்தனை வகைப்படும் ? அவை யாவை? 

வினா அறுவகைப்படும். 
அவை: 
  1. அறிவினா, 
  2. அறியா வினா, 
  3. ஐய வினா, 
  4. கொளல் வினா, 
  5. கொடை வினா, 
  6. ஏவல் வினா 
என்பன.

2. பாம்போ? கயிறோ? எவ்வகை வினா?. ஐயவினா

தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒருபொருள் குறித்து, ஐயத்தினைப் போக்கிக் கொள்வதற்காக வினவப்படும் வினா, ஐயவினா.   

3. விடை எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

விடை எண் வகைப்படும். 
அவை: 
  1. சுட்டு, 
  2. மறை, 
  3. நேர்,
  4. ஏவல், 
  5. வினா எதிர் வினாதல், 
  6. உற்றதுரைத்தல், 
  7. உறுவது கூறல், 
  8. இனமொழி 
என்பன.

 4. சுட்டுவிடையை எடுத்துக்காட்டுடன் விளக்குக 

சுட்டு விடை எடுத்துக்காட்டு

    “சென்னைக்கு வழி யாது ?" என்று வினவினால்,
     'இது' என்பதுபோலச் சுட்டிக் கூறும் விடை, சுட்டுவிடை.

5. உடன்பட்டுக் கூறும் விடையின் பெயரென்ன? 

 
    "இது செய்வாயா?" என்று வினவியபோது, 


    "செய்வேன்" என்று உடன்பட்டுக் கூறும் விடை, நேர்விடை.

வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக. 

1. காமராசர் நகர் எங்கே இருக்கிறது? என்ற அறியா வினாவுக்கு . "இந்த வழியாகச் செல்லுங்கள்." என்று விடையளிப்பது - சுட்டு விடை

2. "எனக்கு எழுதித் தருகிறாயா?" என்ற வினாவுக்கு. "எனக்கு யார் எழுதித் தருவார்கள்?" என்று விடையளிப்பது. வினா எதிர் வினாதல் விடை

3. "இங்குநகரப் பேருந்து நிற்குமா?" என்று வழிப்போக்கர் கேட்டது அறியா வினா? . "அதோ,அங்கே நிற்கும்." என்று மற்றொருவர் கூறியது சுட்டு விடை.

உரையாடலில் இடம்பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக. 

பாமகள்: வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே? (அறியா வினா) 

ஆதிரை: ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.(நேர் விடை 

பாமகள்: அப்படியா! என்ன தலைப்பு? (அறியா வினா)

ஆதிரை: கல்வியில் சிறக்கும் தமிழர்! (நேர் விடை) நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ? 

பாமகள்: ஏன் வராமல்? வினா எதிர் வினாதல் விடை

கீழ்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? (அறியா வினா)

இதோ... இருக்கிறதே!சுட்டு விடை சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? ஐய வினா

ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு 

ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (Translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வார். 

இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக. 

  1. எந்த அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது?
  2.  மொழிபெயர்ப்பு (Translation) என்பது என்ன?
  3.  ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுபவர் யார்?
  4. அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள எதனை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வார்?
  5. ஐ.நா.அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி எந்த இடத்தில் இருப்பார்?

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் - TNPSC Group 2/ Group 4 General Tamil இலக்கணம்

1. பேரறிஞர் அண்ணா அடுக்கு மொழியில் பேசுபவர். 

பேரறிஞர் அண்ணா எப்படி பேசுவார் ? 

2. ஒருவருடைய நினைவு சொல் செயல்களில் தீமையை அறுப்பதே அறம் எனப்படும். 

அறம் எனப்படுவது யாது ? 

3. சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்பிற்குரியது.
 
சித்த வைத்தியத்தில் வியப்பிற்குரியது எது? 
 
4. இளங்கோவின் காவியப் பெண்மணி கண்ணகி. 

இளங்கோவன் காவியப் பெண்மணி யார்? 

5. உடற்பயிற்சி உடலை வலிமையாக்கும்.
 
உடற்பயிற்சி எதனை வலிமையாக்கும்? 
 
6. திருக்குறள் சிறந்த நீதி நூல். 
 
எது சிறந்த நீதி நூல் ? 
 
7. பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். 
 
நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் யார்?
 
8. வெண்பா ஆறு வகைப்படும். 
 
வெண்பா எத்தனை வகைப்படும்? 
 
9. நற்றிணை ஓர் அக இலக்கியமாகும். 

நற்றிணை எவ்வகை இலக்கியம்?

10. நாலடியார் ஒரு நீதிநூலாகும். 

நாலடியார் எவ்வகையான நூல்?

11. கண்ணன் தேர்வை நன்றாக எழுதினான்.

கண்ணன் தேர்வை எப்படி எழுதினான்? 

12. அறம் செய விரும்பு.

எதைச் செய்ய விரும்ப வேண்டும்?

13. வ.உ.சி. சுதேசிக் கப்பலை ஓட்டினார்.

 வ.உ.சி. எந்தக் கப்பலை ஒட்டினார்?

14. பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.

பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?

15. நல்ல குடும்பம் என்பது பல்கலைக்கழகம்.

நல்ல குடும்பம் என்பது என்ன?


    கருத்துரையிடுக

    0 கருத்துகள்
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad