தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

தமிழில் இயல் உண்டு; இசை உண்டு; நாடகம் உண்டு; இவை மட்டுமல்ல அறிவியலும் உண்டு. தமிழுக்கு அறிவியல் புதிதல்ல. அன்று முதல் இன்று வரை அறிவியல் செய்திகளை இலக்கியங்கள் வாயிலாக வெளியிட்டிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நீண்ட நெடுங்காலமாகவே அறிவியல் சிந்தனைகளோடு விளங்கியவர்கள் தமிழர்கள். தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் பல காணப்படுகின்றன. இலக்கியங்கள் கூறும் செய்திகளை அறிவோமா!

பாடத்தலைப்புகள்(toc)

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

தமிழ்மொழி சிந்தனைக் கருவூலமாய்த் திகழ்வது; அறிவுச் சுரங்கமாய் விளங்குவது. நம் தாய்மொழி உயிரினும் இனியது. தமிழ் இலக்கியங்கள் தமிழர் தம் வாழ்வை எதிரொலிப்பன. 

இயற்கையோடு இயைந்த வாழ்வினர் தமிழர் அவர்தம் மொழியும் அவ்வாறே,

அறிவு அற்றம் காக்கும் கருவி 

-  திருக்குறள்(code-box)


(அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்) என்றார் திருவள்ளுவர்

அறிவின் நுண்ணிலை வளர்ச்சியே அறிவியல்.

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

மருத்துவ அறிவு :

திருமூலர்

உடம்பார் அழியின் உயிரார் அழிவர் 

- திருமூலர்(code-box).


உடலை ஒம்பவேண்டியதன் இன்றியமையாமையைத் தமிழர் அறிந்திருந்தனர்.

திருவள்ளுவர்

'மருந்து' என்னும் ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார். உடல் உறுதியாய் இருப்பதற்கு வாதம், பித்தம், சீதம் இம்மூன்றின் சமநிலையே காரணமாகும். அவற்றில் சமநிலை தவறும்போது நோய்மிகும்.அவற்றைச் சமப்படுத்த இயற்கை தரும் காய்கனிகளி லிருந்தே மருந்து கண்டு உண்டனர்.

'மருந்தாகித் தப்பா மரத்தற்றால்

திருக்குறள்(code-box)

(எல்லோர்க்கும் பயன்படுகின்ற மருந்து மரம்) என்னும் திருக்குறள் வரி, தமிழ்  மருத்துவத்தின் தொன்மையை எடுத்தியம்பும்.

இன்று பரவலாகப் பயின்று வரும் இயற்கை மருத்துவம் என்னும் மருந்தில்லா மருத்துவ முறையை, அன்றே நம் தமிழர் கண்டறிந்துள்ளனர்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின் 

- குறள்(code-box)

என்னும் திருக்குறள் இக்கருத்திற்கு அரண் சேர்க்கிறது.

பதினெண் சித்தர்கள்

பதினெண் சித்தர்கள் வளர்த்த மருத்துவம் சித்த மருத்துவமாயிற்று. அகத்தியர், தேரையர், போகர், புலிப்பாணி முதலிய சித்தர்களின் மருத்துவ நூல்கள் இன்றும் தமிழர்களின் உடற்பிணியைப் போக்குகின்றன. பின்விளைவுகளற்ற மருத்துவங்களுள் சித்த மருத்துவமும் ஒன்று

அறுவை மருத்துவம்:

கண்ணிடந் தப்பிய கண்ணப்பன் வரலாறு ஊனுக்கு ஊன் (code-box)


என்னும் செய்தி அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றது.

கம்பர்

உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி

அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயாம் தீர்வர் (code-box)

என்னும் கம்பர் வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றது.

மணிமேகலை

மணிமேகலையின் தோழி சுதமதியின் தந்தையை மாடு முட்டியதால், அவரின் குடல் சரிந்தது. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியை மணிமேகலை எடுத்துரைக்கிறது.

திருவாசகம்

திருவாசகத்தில் பல்வகை அறிவியல் செய்திகள், உயிரியல் செய்திகள், மருத்துவச் செய்திகள் விரவிக் கிடக்கின்றன. 

பரிணாம வளர்ச்சி

புல்லாகிப் பூடாய்(code-box)

எனத் தொடங்கும் திருவாசக வரிகள் பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விரிவாய்க் கூறுகின்றன.

கருவியல்

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்(code-box)

எனத் தொடரும் பாடலடிகள் கருவியல் அறிவை நன்கு தெரிவிக்கின்றன.

பதிற்றுப்பத்து

போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு, வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு

- பதிற்றுப்பத்து(code-box)


நற்றிணை

சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியும் நற்றிணை என்னும் நூலில் காணப்படுகிறது. 

கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய 

நரம்பின் முடிமுதிர் பரதவர்

- நற்றிணை(code-box)

முற்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள அறுவை மருத்துவத்துக்கான இன்றைய கூறுகள் வியப்பளிக்கின்றன அல்லவா?

    பொறியியல் அறிவு :

    இன்றைய வாழ்வில் பொறியியல் பெரும்பங்கு வகிக்கிறது. பல்வேறு எந்திரங்கள் பொறியியல் மூலம் உருவாக்கப் படுகின்றன. பண்டைத் தமிழகத்தில் எந்திரவியல் பற்றிய அறிவு ஆழமாக இருந்திருக்கிறது. 

    பதிற்றுப்பத்து

    கரும்பைப் பிழிவதற்கும் எந்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.இதனைத்

    தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த(code-box)

    எனப் பதிற்றுப்பத்து குறிப்பிடும்.

    பெருங்கதை

    நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக் கிணறு, அக்காலத்தில் இருந்திருக்கலாம் என்பதனை,  

    அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் (code-box)

    என்னும் பெருங்கதை வரியின் வாயிலாக அறியமுடிகிறது. 

    மேலும்,

    பெருங்கதையில் வரும் எந்திரயானை கிரேக்கத் தொன்மத்தில் குறிப்பிடப்படும் 'டிராய்' போருடன் இணைத்துப் பேசப்படும் எந்திரக் குதிரையுடன் ஒத்தது.

      கனிமவியல் அறிவு :

      சிலப்பதிகாரம் 

      பல்வகை மணிகளையும், அதன் தன்மைகளையும் சிலப்பதிகாரம் விளக்குகிறது. 

      ஊர்காண் காதையில்,

      ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்

       இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் (code-box)

      என்னும் இவ்வடிகள் ஆழ்ந்த பொருளுடையன. ஐவகை மணிகளும் ஒளிவிடும் திறத்தினால் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளன. ஆனால், அவற்றின் மூலப்பொருள் ஒன்றே. இவ்வறிவியல் சிந்தனை, தற்போதைய வேதியியல் கூறுகளுடன் ஒப்புநோக்கத் தக்கது.

      மண்ணியல் அறிவு :

      தமிழர், தம் வாழிடங்களை நிலத்தின் தன்மைக்கேற்பப் பாகுபடுத்தியுள்ளனர். அவையே ஐவகை நிலங்கள். மேலும் செம்மண், களர்நிலம், உவர்நிலம் எனவும் பகுத்துள்ளனர்.  

      • நிறத்தின் அடிப்படையில் செம்மண் நிலம் எனவும், 
      • சுவையின் அடிப்படையில் உவர்நிலம் எனவும்,  
      • தன்மையின் அடிப்படையில் களர் நிலம் 

      எனவும் நிலத்தைத் தமிழர் வகைப்படுத்தினர்.


      செம்மண் நிலம்

      தமிழர், செம்மண் நிலத்தை அதன் பயன் கருதிப் போற்றினர். இதனை,

      'செம்புலப் பெயல் நீர்போல' (code-box)

      என்னும் குறுந்தொகை வரி உணர்த்தும். உவர்நிலம், மிகுந்த நீரைப் பெற்றிருந்தும் பயன் தருவதில்லை. 

      உவர்நிலம்

      இதனை, 

      அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்(code-box)

      என்னும் புறநானூற்று வரிகள் புலப்படுத்துகின்றன.   

      களர்நிலம்

      எதற்கும் பயன்படாத நிலம் களர்நிலம். இதனைப் 

      பயவாக் களரனையர் கல்லாதவர்'(code-box)

      என்பார் திருவள்ளுவர்.

      • தமிழ்  ஐவகை நிலங்களுக்கும் உரிய உணவு,விலங்கு, பறவை போன்றவற்றையும் தமிழர் பகுத்தும் வகுத்தும் வைத்துள்ளனர்.

      அணுவியல் அறிவு :


      இன்றைய அறிவியல், அணுவைப் பிளக்கவும் சேர்க்கவும் முடியும் என ஆய்ந்திருக்கிறது.

      திருவள்ளுவ மாலை

      குறுகிய அடிகளில் (குறள்) மிகப்பெரிய கருத்துகளைப் புகுத்தியது வள்ளுவனின் திறமையாகும்.    

      இதை விளக்க வந்த… இடைக்காடர் என்ற புலவர், 

      கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி

       குறுகத் தரித்த குறள்(code-box)

      என்று திருவள்ளுவ மாலையில் பாடினார்.

      ஒளவையார்

      இதையே ஒளவையார் "கடுகு" என்ற சொல்லிற்கு பதிலாக "அணு" என்ற சொல்லை மாற்றி 

      அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

       குறுகத் தறித்த குறள் (code-box)

      என்றார்.

      கம்பர்

      ஓர், அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்(code-box)

       எனக் கம்பரும் கூறுவார்.  1/100= கோண்

      இதன் மூலம் அணுச்சேர்ப்பும் அணுப் பிரிப்பும் பற்றிய கருத்துகள் அன்றே அரும்பியுள்ளதனை அறியலாம்.

      நீரியல் அறிவு:

      கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். 

      பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

      கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி....

      - கார்நாற்பது (code-box)


      திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்து

      ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

      நாழி முகவாது நால் நாழி

      - ஒளவையார்(code-box)


      என ஒளவையார் பாடலில் கூறப்பட்டுள்ளது.

      திருக்குறள்

      நீர் மழையாக மண்ணிற்கு வருவதும் ஆவியாகி விண்ணிற்குச் செல்வதுமான சுழற்சி எக்காலத்தும் நிகழ்ந்து கொண்டிருப்பது. இவ்வியக்கமே உலகை வளப்படுத்துகிறது. இந்நீர்சுழற்சி இயக்கம் இயற்கையாக நிகழக்கூடிய ஒன்றே. இவ்வியக்கம் இல்லை எனில் மழைவளம் குன்றும்; வெப்பநிலை மிகும்; புவியின் தட்பவெப்பநிலை மாறும். இச்சுழற்சி முறைதான் உயிர்கள் தழைத்திருப்பதற்கோர் காரணம். இவ்விளைவு நிகழவில்லையெனில் கடலும் வற்றும். இதனை,

      நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி

      தான்நல்கா தாகி விடின் - குறள் 17 (code-box)

      எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். மழைவளம் குறைந்தால் இச்சமநிலை பிறழும்; எனவேதான், மழையை உணவு தருவதாலும் மழை அமிழ்தாகிறது; உயிரைக் காப்பதாலும் அமிழ்தாகிறது; உலகை அழிவினின்றும் தடுப்பதாலும் அமிழ்தாகிறது. இஃது, எத்துனை அறிவியல் கூர்ந்த சிந்தனை!

      வானியல் அறிவு:

      பேரண்டத்தின் தோற்றம் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. மேலைநாட்டறிஞர்கள் இது குறித்து விரிவாக ஆய்ந்துள்ளனர்; ஆய்ந்தும் வருகின்றனர். இவ்வுலகம் பேரண்டத்தின் ஒரு கோள் என்பதனையும், இவ்வண்டப் பரப்பையும் அதன்மீது அமைந்துள்ள கோள்களையும் தமிழ் இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன.

      திருவள்ளுவமாலை

      தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம்பெற்றுள்ளது.

      தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட

       பனையளவு காட்டும்

      - திருவள்ளுவமாலை(code-box)

      உலகம் தட்டையா ? உருண்டையா ?

      அண்ட வெளியில் சுற்றும் இந்த உலகம் பற்றியும் தமிழர் ஆய்ந்துள்ளனர். மேலை நாட்டார்,  

      • பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன்புவரை, உலகம் தட்டையானது என்றே நம்பி வந்தனர்.
      • பதினைந்தாம் நூற்றாண்டில்தான் போலந்து நாட்டைச் சார்ந்த நிக்கோலஸ்கிராப்ஸ் என்பவர் உலகம் தட்டை இல்லை உருண்டையானது என்று  முறையாகக் கணித்துக் கூறினார். ஆனால், அதனை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 
      • பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோ, உலகம் உருண்டையானது என்பதனைத் தம் தொலைநோக்கியால் கண்டுபிடித்துச் சொன்ன பிறகுதான் மக்கள் ஏற்றுக்கொண்டனர். 

      வள்ளுவர்

      மேலை நாட்டினர் கண்டறிந்ததற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லியது ஒரு தமிழ்க்குரல். அந்தக்குரலுக்கு உரியவர் திருவள்ளுவர்

      சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

      உழந்தும் உழவே தலை - குறள் (code-box)

      என்னும் குறட்பாவில் உலகம் சுழல்கிறது எனக் கூறுகின்றார். உருண்டையான பொருள்தான் சுழலும் என்பது அறிவியல் உண்மை. எனவே, உலகம் உருண்டையாக இருக்கும் என்பதனை எந்தக் கருவியும் இல்லாத அக்காலத்தில் வள்ளுவர் உணர்ந்து தம் குறளில் கையாண்டுள்ளமை வியப்புக்குரியது.  

      திருவாசகம்

      ஆன்மஇயல் பேசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது.

      இவர்,

      அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

      அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி

      ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

      நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன(code-box)

      இத்திருவாசக வரிகள் தெளிந்த வானியல் அறிவை வெளிப்படுத்துகின்றன. பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதை இப்பாடல் ஆழமாக விளக்குகிறது.

      தமிழரின் அறிவியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது வானியல் பற்றிய அறிவாகும். ஞாயிறு, திங்கள் என ஆராய முற்பட்டபோதே வானியல் ஆய்வு தோன்றிவிட்டது எனலாம். உலகில் தோன்றிய பல்வேறு அறிவியல் கல்விகளில் மிகத் தொன்மையானது, பழைமையானது வானியல் கல்வி.

      தொல்காப்பியம்

      நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பது அறிவியல் உண்மை. தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்னும் நூலில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆற்றிவு வரை வகைப்படுத்தியும் உள்ளார். 

      உலகம் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று(வளி), வானம்(விசும்பு) ஆகிய உள்ளடக்கியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.       

      நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும் 

      கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

       - தொல்காப்பியம்(code-box)


      புறநானூற்றுப் பாடல்

      இதுபோன்றதொரு குறிப்பைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் உணர்த்தும்.

      மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும
      விசும்பு தைவரு வளியும் வளித்தலை இய தீயும்
      தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும்பூதத்து இயற்கை போல்..(code-box)


      ஞாயிற்றுக்காட்சி(சூரியன்)   

      வான்வெளியில் மிகப்பெரிய விண்மீன் ஞாயிறு. ஞாயிற்றை வழிபடும் வழக்கம் வானவியல் மரபால் உண்டானது எனலாம்.

      இளங்கோவடிகள்

      சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்,  

      ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்(code-box)

      என ஞாயிற்றைப் போற்றியுள்ளமையைக் காணலாம். 

      புறநானூறு

      ஞாயிற்றைச் சுற்றியுள்ள பாதையை ஞாயிற்று வட்டம் என்றனர் பழந்தமிழர் எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது.

      செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
      பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்" (code-box)

      இப்பாடலின் வாயிலாக ஞாயிற்று வட்டம், அதன் இயக்கம், அந்தரமாய் நிற்கும் வான்வெளி மண்டலம் என்பன பற்றிய வானியல் அறிவை உணரமுடிகின்றது.

      திங்கள் தோற்றம்(சந்திரன்)

      தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை நாள்மீன் எனவும், ஞாயிற்றிடமிருந்து ஒளிபெற்று ஒளிவிடக்கூடியவற்றைக் கோள்மீன் எனவும் பண்டைத்தமிழர் குறிப்பிட்டுள்ளனர். திங்கள், தானாக ஒளிவீசுவதில்லை. இந்த வானியல் உண்மையைத் திருக்குறள் வெளிப்படுத்துகிறது.

      மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

      காதலை வாழி மதி - குறள்(code-box)

      இக்குறளில் திங்களுக்குத் தானாக ஒளிவிடும் தன்மை இல்லை என்னும் வானியல் உண்மையை அறியலாம். 

      திங்களைப் பாம்பு கொண்டற்று - குறள்(code-box)

      திங்கள் மறைப்புப் (சந்திரகிரகணம்) பற்றியதாகும். திங்களின் நிலையைக் கருதித் தேய்பிறை, வளர்பிறை எனவும் குறித்துள்ளனர்.

      கோள்கள் பற்றிய தமிழரின் கருத்து 

      உலகிற்கு ஒளி ஊட்டும் ஞாயிற்றையும் திங்களையும் தாம் கண்டறிந்த கோள்களையும் இணைத்துக் கிழமையாக்கி ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எனக் கண்டு, தம் வாழ்வியலோடு இணைத்துக்கொண்டவர்கள் தமிழர்கள். அவர்கள் விண்ணிலே மின்னும் விண்மீன்களையும் திரியும் கோள்களையும் கண்டு, அறிவியல் வழியில் தெளிவான வானியல் அறிவுபெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள். கோள்களின் நிறம், வடிவம் முதலியவற்றைப்பற்றியும் தமிழர் அறிந்திருந்தனர்.

      செவ்வாய்

      செந்நிறமாய் இருந்த கோளைச் செவ்வாய் என அழைத்தனர். இன்றைய அறிவியல் வல்லுநர்கள் செவ்வாய்க்கோளில், மண் சிவப்பு நிறமாய் இருப்பதனை அங்குச் சென்றுள்ள செயற்கைக்கோள் அனுப்பும் ஒளிப்படங்கள் வாயிலாய் வெளிப்படுத்தியுள்ளனர்.

      வெள்ளி

      வெண்மை நிறமுடைய கோளை வெள்ளி என அழைத்தனர். வெள்ளிக்கோளில் வெள்ளித்தாது இருப்பதனை இன்று அறிவியல் ஆய்வு புலப்படுத்தியுள்ளது. 

      • ஞாயிறு உதயத்திற்கு முன்பே வெள்ளி எழுந்து விடியலை உணர்த்துவதனால் இதனை விடிவெள்ளி என்றனர்.

      புதன்

      புதிதாகக் கண்டறிந்த கோளைப் புதன் என அழைத்தனர். புதிதாக அறிந்ததனால் அதற்கு, 'அறிவன்' எனவும் பெயருண்டு.

      வியாழன்

      வியா என்றால் பெரிய, நிறைந்த எனப் பொருள்படும். வானில் பெரிய கோளாக வலம் வருவதனையே வியாழன் என்றனர்.

      சனி

      சனிக்கோளைக் காரிக்கோள் என அழைத்தனர். இக்கோளில் கந்தகம் இருப்பதாக இன்றைய அறிவியல் ஆய்வு கூறுகிறது.
      வான்வழிப் பயணம்

      வானம், ஞாயிறு, திங்கள், விண்மீன், கோள்கள் என்பன மனிதருக்கு வியப்புப் பொருள்களாகத்தான் இருந்திருக்கின்றன. இருப்பினும், மனிதர்களின் அறிவினாலும் ஆற்றலினாலும் தொடர் முயற்சியினாலும் வானியல் புதிர்கள் நாள்தோறும் சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. 

      வான்வழிப் பயணங்கள் 

      வானில் பறவை பறப்பதனைக் கண்ட மனிதன், தானும் பறக்க முடியுமா எனக் கற்பனை செய்தான். அக்கற்பனை உண்மையானபொழுது, வானூர்தி உருவாகியது. பழந்தமிழ் இலக்கியங்களில் வான்வழிப் பயணங்கள் பறக்க முடியுமா எனக் கற்பனை செய்தான். அக்கற்பனை உண்மையானபொழுது, வானூர்தி உருவாகியது. பழந்தமிழ் இலக்கியங்களில் வான்வழிப் பயணங்கள் இடம்பெற்றுள்ளன.

      • சிலம்பு, மணிமேகலையில் வான்வழிப் பயணங்கள் பற்றிய குறிப்புகளும்,
      • சீவகசிந்தாமணியில் மயிற்பொறி விமானத்தின் செயல்திறனும்,
      • கம்பராமாயணத்தில் இராவணன் செலுத்திய புட்பக விமானமும்,
      • பெருங்கதையில் வானூர்தி வடிவமும், அதனை இயக்கும் முறைமையும்பற்றிய வான்பயணச் செய்திகள் காணப்படுகின்றன.

      புறப்பாடல்

      வலவன் ஏவா வானவூர்தி - புறப்பாடல்(code-box)

      என்னும் புறப்பாடல் வரி, சங்க காலத்திலேயே ஓட்டுநர் இல்லா வானவூர்தி இருந்தது என்னும் வியக்கத்தக்க செய்தியைத் தருகிறது. இது தற்போதைய செயற்கைக் கோளைப் போன்றது எனக் கருத இடமுண்டு.

      வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு. இதனையும் பண்டைத் தமிழர் அறிந்திருந்தனர். இதனை, 

      வறிது நிலைஇய காயமும்  - புறப்பாடல்(code-box)

      என்னும் பாடல் வரி உணர்த்தும்,  

      உலகம் என்னும் தமிழ்ச்சொல் உலவு என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. உலவு என்பது சுற்றுதல் என்ற பொருளைத் தரும். உலகம் தன்னையும் ஞாயிற்றையும் சுற்றி வருகிறது என்னும் அறிவியல் கருத்து, இதில் வெளிப்படுவதனைக் காணலாம்.

      ஞாலம் என்னும் தமிழ்ச்சொல் 'ஞால்' என்னும் சொல்லடியாகத் தோன்றியது என்பர். 'ஞால்' என்பதற்குத் ‘தொங்குதல்` என்பது பொருள். எவ்விதப் பற்றுக் கோடுமின்றி அண்ட வெளியில் உலகம் தொங்கிக் கொண்டிருப்பதனை, இஃது உணர்த்துகிறது.

      தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், திருமந்திரம், திருவாசகம் முதலிய நூல்களின் மூலம் பழந்தமிழர் கையாண்ட அறிவியல் நுணுக்கங்களைக் காணலாம்.

      வானியல் அறிஞர் பெயர்கள் தமிழில் -

      • அறிவன்,
      • கணியன்,
      • நாழிகைக்கணக்கர்     
      • வானூர்தி ஒட்டுகிறவனைத் தமிழில் வலவன்


      என அழைக்கிற சொல்லோடு வானூர்தியைக் கண்டறிந்த புறநானூற்றுத் தமிழன் நமக்கு முன்னோடிதானே. நம்மால், இவற்றை யெல்லாம் கற்பனை என்று ஒதுக்கிவிட இயலுமா?

      இன்றைய அறிவியல் சிந்தனை 

      அறிவியல் ஆய்வுக்கு எல்லை இல்லை. மண்ணில், விண்ணில், கடலில், காத்தில் என எங்கும் ஆய்வுகள் திகழ்கின்றன. மனிதனின் நகலாக எந்திர மனிதனை மனிதரே படைக்கின்றனர். மனித உடலின் பாகங்களையும் இயந்திரத்தின் பாகங்கள் போல் மாற்றுகின்றனர். கோள்கள் இனி நமக்குத் தொலைவு இல்லை. நேற்றைய மனிதன் நினைத்துப் பார்க்காத பலவற்றை இன்றைய மனிதன் நிகழ்த்திக் காட்டுகிறான். இன்றைய மனிதனின் கனவுகளை நாளை நாம் நனவாக்குவோம் வாருங்கள்!

      அறிவியலால் ஆள்வோம் பாடல்

      ஆழக் கடலின் அடியில் மூழ்கி 

      ஆய்வுகள் செய்து பார்க்கின்றான்

      நீல வானின் மேலே பறந்து 

      நிலவில் வாழ நினைக்கின்றாள்


      செயற்கைக் கோளை விண்ணில் ஏவி 

      செய்தித் தொடர்பில் சிறக்கின்றான் 

      இயற்கை வளமும் புயலும் மழையும் 

      எங்கே என்று உரைக்கின்றான்


      எனும்பும் தசையும் இல்லாது இயங்கும் 

      எந்திர மனிதனைப் படைக்கின்றான் 

      இணைய வலையால் உலகம் முழுமையும் 

      உள்ளங் கையில் கொடுக்கின்றான்


      உறுப்பை மாற்றும் மருத்துவம் கண்டு

      உடலும் உயிரும் காக்கின்றான் 

      அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து 

      அனைத்தும் செய்து பார்க்கின்றான்


      நாளை மனிதன் கோள்களில் எல்லாம் 

      நகரம் அமைத்து வாழ்ந்திடுவான்

      வேளை தோறும் பயணம் செய்ய 

      விண்வெளிப் பாதை அமைத்திடுவான்

      -படநூல் ஆசிரியர் குழு (code-box)

      பாடலின் பொருள்

      மனிதன் ஆழ்கடலுக்கு உள்ளேயும் சென்று ஆய்வுகள் செய்கின்றான். நீல வானத்தின் மேலே பறந்து நிலவில் சென்றும் வாழ நினைக்கிறான்.

      வானத்தில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் உதவியுடன் செய்தித் தொடர்பில் சிறந்துள்ளான். இயற்கை வளங்களையும் புயல், மழை ஆகியவற்றையும் கண்டறிந்து கூறுகிறான்.

      எலும்பும் தசையும் இல்லாமல் செயல்படும் எந்திர மனிதனையும் படைத்து விட்டான். இணைய வலையின் உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொடுக்கின்றான்.

      பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை மாற்றிப் பொருத்தி உடலையும் உயிரையும் காக்க வழிவகை செய்துவிட்டான். அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறான்.

      நாளைய மனிதனோ விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான். அங்குச் சென்றுவர விண்வெளியிலும் பாதை அமைத்திடுவான்.

      வானை அளப்போம் கடல் மீனையளப்போம்

      சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்

      சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

      -பாரதியார்(code-box)

      6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - அறிவியலால் ஆள்வோம் மதிப்பீடு

      சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

      I. மனிதன் எப்போதும் உண்மையையே

      அ) உரைக்கின்றான்

      ஆ) உழைக்கின்றான்

      இ) உறைகின்றான்

      ஈ) உரைகின்றான்

      2. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

      அ) ஆழமான + கடல்

      ஆ) ஆழ் + கடல்

      இ) ஆழ + கடல்

      ஈ) ஆழம் + கடல்

      3. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

      அ) விண் + வளி 

      ஆ) விண் + வெளி 

      இ) விண் + ஒளி 

      ஈ) விண் + வொளி

      4. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

      அ) நீலம்வான் 

      ஆ) நீளம்வான்

       இ) நீலவான் 

      5. இல்லாது+இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

      அ) இல்லாது இயங்கும்

      இ) இல்லாதியங்கும்

      ஆ) இல்லா இயங்கும்

      ஈ) இல்லதியங்கும்

      நயம் அறிக.

      1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.

      ஆழக் - ஆய்வுகள்

      செயற்கைக்- செய்திகள் 

      எலும்பும் - எந்திர 

      உறுப்பை- உடலும்


      2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எழுதுக.

      நீல- நிலவில்

      நீல- உலகம்


      3. பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.

      வளமும்- புயலும்- மழையும்

      நினைக்கின்றான்- பார்க்கின்றான்

      குறுவினா

      1. செயற்கைக்கோள் எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது?

      வானத்தில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் செய்தித் தொடர்பில் உதவுகிறது. இயற்கை வளங்களையும் , புயல், மழை ஆகியவற்றையும் கண்டறிந்து கூறுகிறது.

      2. நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?

      நாளைய மனிதனோ விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான். அங்குச் சென்றுவர விண்வெளியிலும் பாதை அமைத்திடுவான்.

      சிந்தனை வினா

      1. இதுவரை எத்தனை கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? அவை யாவை? 

      இதுவரை சூரியக் குடும்பத்தில் எட்டுக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

      அவை,

      1. புதன்
      2. வெள்ளி
      3. பூமி
      4. செவ்வாய்
      5. வியாழன்
      6. சனி
      7. யுரேனஸ்
      8. நெப்டியூன்

      2. இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக்கோளின் பெயர் யாது?

      இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக்கோளின் பெயர் சந்திராயன் -2.

      நினைவுகூர்க

      தமிழர்கள் பரந்துபட்ட அறிவியல் சிந்தனை உடையவர்கள். விண்ணியல், மண்ணியல், விலங்கியல், நீரியல், மருத்துவஇயல் முதலிய அறிவியல் கூறுகளையும் நன்கு உணர்ந்தவர்கள். தமிழ் இலக்கியங்களை நுண்ணிதின் ஆய்கின்றபோது எத்துணையோ அறிவியல் கருத்துகள் ஆழப் புதைந்து கிடப்பதனை அறியலாம்.அறிவியல் அறிஞர்கள் இலக்கிய அறிவுடன் இவற்றை ஆராய்ந்தால், மேலும் அரிய பல செய்திகளைத் தமிழுலகம் பெற ஏதுவாகும். ஆகவே, பழந்தமிழர் நிலத்தையும் கடலையும் மட்டுமல்லாமல் நீலவானத்தையும் ஆளுமை செய்தவர்கள் என்பதை நினைவுகூர்க.

      இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர்  பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 16. தமிழ்மொழியின் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் என்ற தொகுப்பிற்காக பழைய மற்றும் புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

      தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்

      • முன்னாள் குடியரசுத் தலைவர் - மேதகு டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல்கலாம் 
      • இஸ்ரோ அறிவியல் அறிஞர் - டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை
      • இஸ்ரோவின் தலைவர் -  டாக்டர் கை. சிவன்

      கருத்துரையிடுக

      0 கருத்துகள்
      * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

      Top Post Ad