திருக்குறள்- வாழ்வியல் குறித்த சில குறள்கள்

Top Post Ad

"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்"

என்று திருக்குறளின் பெருமையை ஔவையார் போற்றுகிறார். மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி, அஃது எவ்வாறு வாழ வேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப்பட்ட நூல் திருக்குறள். இது போன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியிலும் இதுவரை தோன்றியது இல்லை என்பர். அத்தகைய பெருமைமிகு திருக்குறளைப் படிப்போம்.

திருக்குறள் அதிகாரங்கள்

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி தமிழ்நாடு அரசின் 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

திருக்குறள்

கல்வி

1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக.

பொருள்: கற்க வேண்டியவற்றைப் பிழை இல்லாமல் கற்க வேண்டும். கற்றபின் கற்ற வழியில் நடக்க வேண்டும்.

2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

பொருள்: எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் கண்கள் போன்றவை.

3. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.

பொருள் : தோண்டும் அளவிற்கு ஏற்ப மணற்கேணியில் நீர் ஊறும். அதுபோல் கற்கும் அளவிற்கு ஏற்ப மக்களுக்கு அறிவு வளரும்.

4. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.

பொருள்: அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. ஒருவருக்கு அதனைவிடச் சிறந்த செல்வம் வேறு இல்லை.

தெரிந்து செயல்வகை

5. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
 செய்யாமை யானும் கெடும்.

பொருள்: செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும்.

6. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
 எண்ணுவம் என்பது இழுக்கு.

பொருள்: எந்தச் செயலையும் நன்கு சிந்தித்த பின் தொடங்க வேண்டும். தொடங்கிய பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

7. நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
 பண்பறிந்து ஆற்றாக் கடை.

பொருள்: நாம் ஒருவருடைய பண்பை அறிந்து அவருக்கு நன்மை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும்.

சுற்றந்தழால்

8. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
 அன்ன நீரார்க்கே உள.

பொருள்: காகம் தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தன் சுற்றத்தாரைக் கூவி அழைத்து உண்ணும். அத்தகைய பண்பு உடையவர்களிடமே செல்வமும் சேரும்.

மடியின்மை

9. மடியை மடியா ஒழுகல் குடியைக்
 குடியாக வேண்டு பவர்.

பொருள் : தம் குடியைச் சிறப்புடைய குடியாகச் செய்ய விரும்புபவர், சோம்பலைத் துன்பமாகக் கருதி முயற்சியோடு வாழ்தல் வேண்டும்.

இடுக்கண் அழியாமை

10. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
 இடும்பை படாஅ தவர்.

பொருள்: துன்பம் வந்த போது வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவர்.


7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ............ தீமை உண்டாகும்.

அ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால்

ஆ) செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

இ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

ஈ) எதுவும் செய்யாமல் இருப்பதால்


2. தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ............. இருக்கக் கூடாது.

அ) சோம்பல்

ஆ) சுறுசுறுப்பு

இ) ஏழ்மை

ஈ) செல்வம்


3. 'எழுத்தென்ப' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) எழுத்து + தென்ப

ஆ) எழுத்து + என்ப

இ) எழுத்து + இன்ப

ஈ) எழுத் + தென்ப


4. கரைந்துண்ணும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கரைந்து + இன்னும்

ஆ) கரை + துண்ணும்

இ) கரைந்து + உண்ணும்

ஈ) கரை + உண்ணும்


5. கற்றனைத்து+ ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கற்றனைத்தூறும்

ஆ) கற்றனைதூறும்

இ) கற்றனைத்தீறும்

ஈ) கற்றனைத்தோறும்


பொருத்துக.

1. கற்கும் முறை - பிழையில்லாமல் கற்றல்

2. உயிர்க்குக் கண்கள் - எண்ணும் எழுத்தும்

3. விழுச்செல்வம் - கல்வி

4. எண்ணித் துணிக - செயல்

5. கரவா கரைந்துண்ணும் - காகம்


குறுவினா

1. நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும் எப்போது?

நாம் ஒருவருடைய பண்பை அறிந்து அவருக்கு நன்மை செய்யாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும்.


2. தீமை உண்டாக்கும் இரண்டு செயல்களை எழுதுக.

தீமை உண்டாக்கும் இரண்டு செயல்கள் 

செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும்.


3. துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்குபவர் யார்?

துன்பம் வந்த போது வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவர்.


பாடப்பகுதியிலிருந்து படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு




Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.