பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்த பெயர்ச்சொல்லுடன் ஐ, ஆல், கு, இன், அது போன்ற சொற்கள் இணைந்து அச்சொல்லின் பொருளைப் பல்வேறு வகையாக வேறுபடுத்துகின்றன. இவற்றை வேற்றுமை என்பர்.
வேற்றுமை விளக்கம்
- இராமன் கண்டான்
- இராமனைக் கண்டான்
முதல் தொடரில், இராமன் என்னும் பெயர்ச்சொல் அமைந்துள்ளது.
இரண்டாம் தொடரில் அதே பெயர்ச்சொல் இராமனை வேறொருவர் இராமனைப் பார்த்தார் எனவும் பொருள் வேறுபடுகிறது.
இராமன் என்னும் பெயரோடு சேர்ந்துள்ள ஐ என்னும் உருபு தான் காரணம். இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை எனப்படும்.
பாடத்தலைப்புகள்(toc)
வேற்றுமை - இயல் நான்கு - 8ம் வகுப்பு தமிழ்
பாவை அண்ணன் பார்த்து,
"அண்ணன் எனக்கு ஓர் உதவி செய்வாயா?" என்று கேட்டாள்.
"இந்த அண்ணன் செய்ய முடிந்த உதவி என்றால் உறுதியாகச் செய்வேன்" என்றான் அண்ணன்.
"என் அண்ணன் உள்ளம் எனக்குத் தெரியும். என் அண்ணன் என் மீது மிகுந்த அன்பு உண்டு" என்றாள் பாவை.
மேலே உள்ள பகுதியைப் படித்துப் பாருங்கள். இதில் கூறப்பட்டுள்ள செய்தியைப் புரிந்துகொள்ள இயலாதவாறு ஒரு குழப்பம் உள்ளது அல்லவா? இதே பகுதியைக் கீழே உள்ளவாறு படித்துப் பாருங்கள்.
பாவை அண்ணனைப் பார்த்து,
''அண்ணா எனக்கு ஓர் உதவி செய்வாயா?" என்று கேட்டாள்.
"இந்த அண்ணனால் செய்ய முடிந்த உதவி என்றால் உறுதியாகச் செய்வேன்" என்றான் அண்ணன்.
"என் அண்ணனது உள்ளம் எனக்குத் தெரியும். என் அண்ணனுக்கு என் மீது மிகுந்த அன்பு உண்டு" என்றாள் பாவை.
இப்போது எளிதாகப் பொருள் புரிகிறது அல்லவா?
இரண்டாம் பகுதியில் அண்ணன் என்னும் பெயர்ச்சொல் அண்ணனை, அண்ணா, அண்ணனால், அண்ணனுக்கு, அண்ணனது என்றெல்லாம் மாற்றப்பட்டிருப்பதால் பொருள் தெளிவாக விளங்குகிறது.
வேற்றுமை என்றால் என்ன?
அண்ணன் என்னும் பெயர்ச்சொல்லுடன் ஐ, ஆல், கு, இன், அது போன்ற அசைகள் இணைந்து அச்சொல்லின் பொருளைப் பல்வேறு வகையாக வேறுபடுத்துகின்றன. இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை வேற்றுமை என்பர்.
இதற்காகப் பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை வேற்றுமை உருபுகள் என்று கூறுவர்.
சொல்லுருபுகள் என்றால் என்ன?
சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.
சொல்லுருபுகள் எடுத்துக்காட்டு
- ஓவியர் தூரிகையால் ஓவியம் தீட்டினார் - இதில் ஆல் என்பது வேற்றுமை உருபாக வந்துள்ளது.
- ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார் - இதில் கொண்டு என்பது சொல்லுருபாக வந்துள்ளது.
வேற்றுமை எத்தனை வகைப்படும்?
வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை வேற்றுமைத் தொடர்கள் என்பர். வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அஃது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத்தொகை என்பர்.
இவ்வேற்றுமை எட்டு வகைப்படும்.
வேற்றுமை வகைகள்
- முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை),
- இரண்டாம் வேற்றுமை (செயப்படுபொருள் வேற்றுமை),
- மூன்றாம் வேற்றுமை,
- நான்காம் வேற்றுமை,
- ஐந்தாம் வேற்றுமை,
- ஆறாம் வேற்றுமை,
- ஏழாம் வேற்றுமை,
- எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)
என எண் வகைப்படும்.
முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை):
- முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை.
பெரும்பாலான சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகிய மூன்று உறுப்புகள் இடம் பெற்றிருக்கும். எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும்.
- முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும் குறிப்பிடுவர்.
முதல் வேற்றுமை எடுத்துக்காட்டு
- பாவை வந்தாள்
இரண்டாம் வேற்றுமை (செயப்படுபொருள் வேற்றுமை) :
- இரண்டாம் வேற்றுமை உருபு ஐ என்பதாகும்.
இரண்டாம் வேற்றுமை எடுத்துக்காட்டு
- கபிலரைப் பரணர் புகழ்ந்தார்.
- கபிலர் பரணரைப் புகழ்ந்தார்.
இவ்விரு தொடர்களையும் கவனியுங்கள். இரண்டாம் வேற்றுமை உருபு ( ஐ ) எந்தப் பெயருடன் இணைகிறதோ அப்பெயர் செயப்படுபொருளாக மாறிவிடுகிறது. இவ்வாறு ஒரு பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுவதால் இரண்டாம் வேற்றுமையைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.
இரண்டாம் வேற்றுமை ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறு வகையான பொருள்களில் வரும்.
- ஆக்கல் - கரிகாலன் கல்லணையைக் கட்டினான்,
- அழித்தல் - பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்,
- அடைதல் - கோவலன் மதுரையை அடைந்தான்,
- நீத்தல் - காமராசர் பதவியைத் துறந்தார்,
- ஒத்தல் - தமிழ் நமக்கு உயிரைப் போன்றது,
- உடைமை - வள்ளுவர் பெரும் புகழை உடையவர்.
மூன்றாம் வேற்றுமை
- ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகிய நான்கும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் ஆகும்.
ஆல், ஆன்
இவற்றுள் ஆல், ஆன் ஆகியவை கருவிப்பொருள், கருத்தாப் பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும்.
கருவிப்பொருள்
கருவிப் பொருள் முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.
- கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது முதற்கருவி - மரத்தால் சிலை செய்தான்.
- ஒன்றைச் செய்வதற்குத் துணையாக இருப்பது துணைக்கருவி - உளியால் சிலை செய்தான்.
கருத்தாப் பொருள்
கருத்தாப்பொருள் ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இருவகைப்படும்.
- பிறரைச் செய்யவைப்பது ஏவுதல் கருத்தா - கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.
- தானே செய்வது இயற்றுதல் கருத்தா - சேக்கிழாரால் பெரியபுராணம் இயற்றப்பட்டது.
ஆன்
ஆன் என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும்.
(எ.கா.) புறந்தூய்மை நீரான் அமையும்.
ஒடு, ஓடு
ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
- தாயொடு குழந்தை சென்றது - ஒடு
- அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர் - ஓடு
நான்காம் வேற்றுமை
- நான்காம் வேற்றுமைக்கு உரிய உருபு கு என்பதாகும்.
இது கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.
| முல்லைக்குத் தேர் கொடுத்தான் | கொடை |
| புகை மனிதனுக்குப் பகை | பகை |
| கபிலருக்கு நண்பர் பரணர் | நட்பு |
| கவிதைக்கு அழகு கற்பனை | தகுதி |
| தயிருக்குப் பால் வாங்கினான் | அதுவாதல் |
| தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டார் | பொருட்டு |
| செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ | முறை |
| தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்கக்கடல் | எல்லை |
நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக ஆக என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு.
(எ.கா.) கூலிக்காக வேலை
ஐந்தாம் வேற்றுமை
- இன், இல் ஆகியவை ஐந்தாம் வேற்றுமை உருபுகள் ஆகும்.
இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது போன்ற பொருள்களில் வரும்.
| தலையில் இழிந்த மயிர் | நீங்கல் |
| பாம்பின் நிறம் ஒரு குட்டி | ஒப்பு |
| தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல் | எல்லை |
| சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம் | ஏது |
ஆறாம் வேற்றுமை:
ஆறாம் வேற்றுமை உருபு - அது, ஆது, அ ஆகியவை ஆகும்.
- ஆது, அ ஆகிய உருபுகளை இக்காலத்தில் பயன்படுத்துவது இல்லை.
இவ்வேற்றுமை, உரிமைப் பொருளில் வரும். உரிமைப் பொருளைக் கிழமைப் பொருள் என்றும் கூறுவர்.
ஆறாம் வேற்றுமை எடுத்துக்காட்டு
- இராமனது வீடு.
- நண்பனது கை.
ஏழாம் வேற்றுமை:
ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபு கண் ஆகும்.
- கால், இல், இடம், உள், மேல், கீழ் போன்ற உருபுகளும் உண்டு.
இடம், காலம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும்.
ஏழாம் வேற்றுமை எடுத்துக்காட்டு
- எங்கள் ஊரின்கண் மழை பெய்தது.
- இரவின்கண் மழை பெய்தது.
இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும், ஏழாம் வேற்றுமையிலும் உண்டு.
நீங்கல் பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை என்றும், இடப் பொருளில் வந்தால் ஏழாம் வேற்றுமை என்றும் கொள்ள வேண்டும்.
- மாலையில் மலர்கள் - இல் ஏழாம் வேற்றுமை உருபு இடப்பொருளில் வந்தது.
- மாலையிலிருந்து மலரைப் பிரித்தான் - இல் ஐந்தாம் வேற்றுமை உருபு நீங்கல் பொருளில் வந்தது.
எட்டாம் வேற்றுமை
இது விளிப்பொருளில் வரும்.
படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதையே விளி வேற்றுமை என்கிறோம்.
- இவ்வேற்றுமைக்கு என்று தனியே உருபு கிடையாது.
பெயர்கள் திரிந்து வழங்குவது உண்டு.
எட்டாம் வேற்றுமை எடுத்துக்காட்டு
- அண்ணன் என்பதை அண்ணா என்றும்,
- புலவர் என்பதைப் புலவரே என்றும்
மாற்றி வழங்குவது எட்டாம் வேற்றுமை ஆகும்.
| வேற்றுமை உருபுகளும் அவற்றின் பொருள்களும் | |||
|---|---|---|---|
| வேற்றுமை | வேற்றுமை உருபுகள் | சொல்லுருபு | பொருள் |
| முதல் (எழுவாய்) | இல்லை | ஆனவன், ஆவான், ஆகின்றவன் | பயனிலை ஏற்றல் |
| இரண்டாம் | ஐ | இல்லை | செயப்படுபொருள் |
| மூன்றாம் | ஆல், ஆன், ஒடு, ஓடு | கொண்டு, வைத்து, உடன், கூட | கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி |
| நான்காம் | கு | ஆக, பொருட்டு, நிமித்தம் | கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை |
| ஐந்தாம் | இல், இன் | இலிருந்து, நின்று, காட்டிலும், பார்க்கிலும் | நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது |
| ஆறாம் | அது, ஆது, அ | உடைய | கிழமை |
| ஏழாம் | கண் | - | இடம், காலம் |
| எட்டாம் (விளி) | இல்லை | இல்லை | விளி (அழைத்தல்) |
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் இலக்கணம் பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
கற்பவை கற்றபின்
பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள வேற்றுமை உருபுகளை எடுத்து எழுதி வகைப்படுத்துக.
''அண்ணா எனக்கு ஓர் உதவி செய்வாயா?" என்று கேட்டாள். "இந்த அண்ணனால் செய்ய முடிந்த உதவி என்றால் உறுதியாகச் செய்வேன்" என்றான் அண்ணன். "என் அண்ணனது உள்ளம் எனக்குத் தெரியும். என் அண்ணனுக்கு என் மீது மிகுந்த அன்பு உண்டு" என்றாள் பாவை.
அண்ணா - எட்டாம் (விளி) வேற்றுமை
அண்ணனால் - ஆல் - மூன்றாம் வேற்றுமை
அண்ணனது - அது - ஆறாம் வேற்றுமை
அண்ணனுக்கு - கு - நான்காம் வேற்றுமை
மதிப்பீடு - வேற்றுமை இயல் நான்கு 8ம் வகுப்பு தமிழ் - வினா விடை 8th standard tamil book back
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ........ ஆகும்.
அ) எழுவாய்
ஆ) செயப்படுபொருள்
இ) பயனிலை
ஈ) வேற்றுமை
2. எட்டாம் வேற்றுமை ...... வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
அ) எழுவாய்
ஆ) செயப்படுபொருள்
இ) விளி
ஈ) பயனிலை
3. உடனிகழ்ச்சிப் பொருளில் ....... வேற்றுமை வரும்.
அ) மூன்றாம்
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
4. 'அறத்தான் வருவதே இன்பம்' இத்தொடரில் ...... வேற்றுமை பயின்று வந்துள்ளது.
அ) இரண்டாம்
ஆ) மூன்றாம்
இ) ஆறாம்
ஈ) ஏழாம்
5. ' மலர் பானையை வனைந்தாள்' - இத்தொடர் ......... பொருளைக் குறிக்கிறது.
அ) ஆக்கல்
ஆ) அழித்தல்
இ) கொடை
ஈ) அடைதல்
பொருத்துக. பொருத்தப்பட்டுள்ளது
1. மூன்றாம் வேற்றுமை - மண்ணால் குதிரை செய்தான்.
2. நான்காம் வேற்றுமை - இராமனுக்குத் தம்பி இலக்குவன்
3. ஐந்தாம் வேற்றுமை - ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்
4. ஆறாம் வேற்றுமை - பாரியினது தேர்
சிறுவினா
1. எழுவாய் வேற்றுமையை விளக்குக.
எழுவாய் வேற்றுமை
பெரும்பாலான சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகிய மூன்று உறுப்புகள் இடம் பெற்றிருக்கும். எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும்.
- முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும் குறிப்பிடுவர்.
முதல் வேற்றுமை எடுத்துக்காட்டு
- பாவை வந்தாள்
2. நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?
நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள்
கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.
3. உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?
ஓடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
ஓர் எழுவாயின் செயலுடன் பிறிதொன்றனது செயலும் உடனிகழ்வது உடனிகழ்ச்சிப் பொருள் எனப்படும்.
- தாயொடு குழந்தை சென்றது.
- அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.


Please share your valuable comments