தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி

இராமசாமி குறும்புக்காரச் சிறுவன். யார் எதனைச் சொன்னாலும் 'ஏன், எப்படி, எதற்கு' என்று வினா கேட்பான். அவனுக்குப் புரியவைப்பது எளிதான செயலாக இல்லை. 

அமைதிப்படுத்துவது பெற்றோரான வெங்கடப்பருக்கும் சின்னத்தாயம்மாளுக்கும் பெரும்பாடாக இருந்தது.

இராமசாமி துடுக்காகக் கேட்கிற வினாக்களால் எரிச்சல் அடைந்தோர் பலர்; 'கெட்டிக்காரச் சிறுவன்' என்று தட்டிக்கொடுத்தோர் சிலர். தானாகச் சிந்தித்துப் புரிந்துகொள்ள நினைக்கிறான் இராமசாமி; அதனால், தப்பு ஒன்றும் இல்லையே என்றும் சிலர் பாராட்டினர்.

இராமசாமிக்குப் பன்னிரண்டு அகவை. 

ஈரோடு அவனது ஊர். 

அங்கு இராமநாதன் என்பவரின் கடையில் இராமசாமி உட்கார்ந்திருந்தான். நடக்கிற எந்த ஒரு செயலுக்கும் மனிதனின் தலைவிதிதான் காரணம் என்று சொல்லிக்கொண்டே இருப்பவர் அந்த இராமநாதன்.

இராமநாதனின் தலைக்குமேல் தொங்கிக்கொண்டு இருந்த தராசு தட்டை, அவர் கவனிக்காத நேரம் பார்த்து மெல்லத் தட்டிவிட்டான் இராமசாமி. இராமநாதனின் தலையில் தட்டு 'மடாரென' வந்து விழுந்தது. "ஏன் தள்ளிவிட்டே ?” என்று இராமசாமியைச் சினத்துடன் விரட்டினார் கடைக்காரர். "தலைவிதிப்படிதான் எல்லாம் நடக்கிறது என்று சொன்னீர்கள் அல்லவா ? என்னை ஏன் விரட்டுகிறீர்கள் ?" என்று சொல்லியபடியே இராமசாமி ஓடி மறைந்தான்.

இராமசாமியின் பெற்றோர் அவன் பள்ளிக்குச் செல்லும்போது, நாள்தோறும் ஓர் அறிவுரையைச் சொல்லி அனுப்புவர். "பள்ளிக்குச் செல்லும் வழியில் உனக்கு நாவறட்சி ஏற்படும். அப்போது மற்ற மாணவர்கள் வீடுகளில் நீ போய் நீர் கேட்காதே. அவர்கள் கீழ்ச்சாதி மக்கள். அவர்கள் தொட்ட எதனையும் நாம் உண்ணவோ குடிக்கவோ கூடாது" என்பதுதான் அது.

இராமசாமிக்கு இது புரியவில்லை பிடிக்கவும் இல்லை. நீர்தான் குடிக்கிறோம், யார் வீட்டில் குடித்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது.

ஒருநாள், இராமசாமிக்கு நீர்வேட்கை ஏற்பட்டது; வீடு கொஞ்சம் தொலைவில் இருந்தது. வீட்டிற்குச் செல்லும்வரை நீர் குடிக்காமல் இருக்க இயலாது.

அவனது வகுப்பு ஆசிரியர் வீடு, அவன் செல்லும் வழியில் இருந்தது. அங்குச் சென்று நீர் கேட்டான். அங்கிருந்த பெண் குவளையில் கொண்டுவந்து நீர் கொடுத்தாள்; இராமசாமியும் குடித்தான்.

அவன் குடித்த குவளையின்மீது நீர் தெளித்த பிறகே அப்பெண் அதனை வீட்டுக்குள் கொண்டு சென்றாள். இராமசாமிக்கு அவளின் செயல் புரியவில்லை.

வீட்டிற்கு வந்ததும் அம்மாவைக் கேட்டான். “அவர்கள் மேல்சாதிக்காரர்கள். நாம் தொட்ட பொருள்களைத் தூய்மை செய்துவிட்டுத்தான் மீண்டும் பயன்படுத்துவார்கள்" என்றார் இராமசாமியின் அம்மா. இராமசாமிக்கு அம்மா சொன்னது வியப்பை அளித்தது. அவனுடைய பெற்றோர் சிலரைக் கீழ்ச்சாதியினராக நினைக்கின்றனர்; வேறு சிலரோ அவனையும், அவனுடைய பெற்றோரையும் கீழ்ச்சாதியினராக நடத்துகின்றனர். மனிதர்கள் ஏன் இப்படி ஒருவரையொருவர் தாழ்வாக நினைக்கின்றனர்? என்று இராமசாமி சிந்தித்தான்.

யார் யாரையெல்லாம் கீழ்ச்சாதிக்காரர்கள் என்று தன் வீட்டார் கருதுகிறார்களோ, அவர்கள் வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடுவது என்று இராமசாமி முடிவு செய்தான். அதன்படி எல்லாக் குழந்தைகளுடனும் விளையாடத் தொடங்கினான்.

அஃது, அவனுக்குப் பிடித்தும் இருந்தது; யாரும் யாரையும் தொடலாம்; யாரும் யார் வீட்டிலும் சாப்பிடலாம் என்பதனையும் உறுதிசெய்து கொண்டான்.

யார் எதனைச் சொன்னாலும், அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று தற்சிந்தனையுடன் இருந்த இராமசாமி, யார் ? 

வினாமேல் வினாக் கேட்டு எல்லாரையும் சிந்திக்கச் செய்த அந்தச் சுட்டிப் பையன், யார்?

 உங்கள் ஊரின் நடுவே பெரிய தாடியுடன், கண்ணாடி அணிந்த ஒரு தாத்தாவின் சிலையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சில இடங்களில் கைத்தடியைப் பிடித்தவாறும், வேறுசில இடங்களில் உட்கார்ந்து புத்தகம் படித்தவாறும் அவரது சிலை அமைக்கப்பட்டு இருக்கும்.

அந்தத் தாத்தாதான் இராமசாமி. தமிழகத்தின் மிகப்பெரிய சிந்தனையாளர் அவர்; ஏன், இந்தியாவின் மாபெரும் சிந்தனையாளரும்கூட. பெரியார் ஈ. வெ. ரா. என்றும் அவரை அழைப்பார்கள்.

பெரியார் ஈ. வெ. ரா என்பதன் விரிவாக்கம் ஈரோடு  வெங்கடப்பர் மகனார் இராமசாமி ஆகும்.

பாடத்தலைப்புகள்(toc)

பெரியார் ஈ. வெ. இராமசாமி வரலாறு

பிறப்பு - 17.09.1879

பெற்றோர் - வெங்கடப்பர், சின்னத்தாயம்மாள்

ஊர் - ஈரோடு 

இயற்பெயர் - இராமசாமி

சிறப்பு பெயர் - பெரியார், பகுத்தறிவு பகலவன், சுய மரியாதை சுடர், வைக்கம் வீரர்

இறப்பு - 24.12.1973

சிறப்பு பெயர்கள் 

  • பெரியார்
  • பகுத்தறிவு பகலவன்
  • சுய மரியாதை சுடர்
  • வைக்கம் வீரர்

பகுத்தறிவாளர் சங்கம்

சிறுவன் இராமசாமி, பெரியார் இராமசாமியாக வளர்ந்து உயர்ந்த கதை மிகச் சுவையானது. அவர் வளர்ந்து பெரியவரான பிறகும் வினாக்கள் கேட்பதனை நிறுத்தவே இல்லை. மற்றவர்களையும் வினாக்கள் கேட்கப் பழக்கவேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. அவர், தாம் வாழ்ந்த காலம் முழுவதும் அறிவுக்கே முதலிடம் கொடுத்தார். அறிவைப் பயன்படுத்தி எது சரி ? எது தவறு ? என்று சிந்தித்துப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படவேண்டும் என்றவர் அவர். பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் வழக்கமானாலும் சரி; அதனைச் செய்தால் என்னவாகும்; செய்யாவிட்டால் என்னவாகும் என்று சிந்தித்தே முடிவெடுக்க வேண்டும் என்றார் அவர். இதுபோன்ற அறிவார்ந்த செயல்களால் பெரியார் பலரையும் ஈர்த்தார்; அடிக்கடி கூட்டங்களை நடத்தினார்; சாதி உயர்வுதாழ்வுகளையும் மத வேறுபாட்டையும் அகற்ற வேண்டும் என்றார்; அதற்காக ஒரு சங்கமும் அமைத்தார்; அதற்குப் 'பகுத்தறிவாளர் சங்கம்' என்பது பெயர்.

  • இளமையிலே பெரியார், மகாத்மா காந்தியின் தொண்டரானார்
  • காங்கிரசுக் கட்சியில் சேர்ந்தார்; 
  • கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்; கள் இறக்குவதனைத் தடுப்பதற்காகத் தன்னுடைய தோப்பிலிருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்ந்தார். 
  • கதர் அணிய வேண்டும் என்று பரப்புரை செய்தார். அதுமட்டுமின்றி, தன் தோளில் கதர்த்துணிகளைச் சுமந்து விற்றார். 

சுயமரியாதை

பிறப்பினால் வரும் கீழ்ச்சாதி மேல்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் மனிதச்சாதி என்னும் ஓரினமாக எண்ணவேண்டும் என்றார்.

  • பிறரை மதித்தல் வேண்டும், அது மரியாதை.
  •  தன்னைத்தானே மதிப்பதும், தன் மரியாதையைத் தக்கவைத்துக் கொள்ளுவதும் சுயமரியாதை.

சிறு குழத்தையையும் 'வாங்க, போங்க...' என்று மரியாதையுடன் அழைத்துப் பேசுவது பெரியாரின் பண்பு. பெரியார் மரியாதையையும் - சுயமரியாதையையும் தம்மிரு கண்ணாகக் கருதினார். 

அவர் (பெரியார் ஈ.வெ.ரா) பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?... எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் - ஒரு கால கட்டம் ஒரு திருப்பம் - என்று கூறுகிறேன்.

 இது பெரியாரைப் பற்றி அறிஞர் அண்ணா(alert-success)

வைக்கம் வீரர்

கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள், கோவில் சுற்றுத்தெருவில் நடப்பதற்குத் தடை இருந்தது. அதனை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதனால், 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்பட்டார். 

"கீழ்ச்சாதி-மேல்சாதி வேற்றுமை, தீண்டாமைக்கொடுமைகள் அகல,எல்லாருக்கும் கல்வி தேவை; எல்லாரும் கல்வி பெறுதல் வேண்டும்" என்று பெரியார் கூறினார். இந்தக் கருத்துகள் இளைஞர்களை ஈர்த்தன. அதனால், சுயமரியாதை இயக்கம் வலுவடைந்தது.

பெண்விடுதலை

"மனிதர்களை மனிதர்களாக மதிக்கவேண்டும் என்பதனை ஏற்கிறீர்கள். அதுபோல, மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதித்தல் வேண்டும். ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்களும் செய்தல் வேண்டும்; அவர்களால் செய்யவும் இயலும். பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்.”

இராமசாமி இவ்வாறு பேசியது பெண்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவர்களும் துணிவு பெற்று மேடையேறிப் பேசினார்கள். தாய்மார்தாம் இராமசாமிக்குப் 'பெரியார்' எனப் பட்டம் வழங்கினார்கள்.

பெரியார் பெண் விடுதலைக்காகப் பெரிதும் பாடுபட்டவர். சில போற்றத்தக்க குணங்கள் ஆண்களுக்கு மட்டுந்தான் உண்டு, பெண்களுக்கு அக்குணங்கள் இல்லை என்பதனை அடியோடு மறுத்தார். “பொறுமை, அமைதி, பேணுந்திறன் முதலியன பெண்களுக்கு மட்டுமே உரியவை எனவும் சினம், வீரம், ஆளுந்திறன் முதலியன ஆண்களுக்கு மட்டுமே உரியவை எனவும் கூறுவதனை ஏற்க இயலாது. இப்படிக் கூறுவது பெண்களை ஆட்டுக்கும் ஆண்களைப் புலிக்கும் ஒப்பாகக் கூறுவதுபோல் அல்லவா உள்ளது. பெண்களுக்கும் துணிவு, வீரம், ஆளுந்திறன் முதலியன உண்டு என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். அதுவே பெண் விடுதலை" என வீரமுழக்கமிட்டார்.

பெண்விடுதலைக்கு முதற்படியாகப் பெண்கள் எல்லாரும் கல்வி கற்கவேண்டும் என்பதனைப் பெரியார் வற்புறுத்தினார். பெண்கள் துணிவுடனும் நம்பிக்கையுடனும் விளங்குதல் வேண்டும் என்றார். மற்போர், குத்துச்சண்டை முதலிய விளையாட்டுகளையும் சுற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்றார். அரசுப்பணி, இராணுவம், காவல்துறை முதலியவற்றிலும் பெண்களைச் சேர்த்தல் வேண்டும் என்றார்.

குணத்திலும் அறிவிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வேறுபாடு இல்லை; இருவரும் நிகரானவர்களே என்பதனை மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். 

அறிவு என்பது வளர்ந்துகொண்டே இருக்கும்; எனவே, புதியனவற்றை ஏற்றல் வேண்டும் என்றார். 

பெரியாரின் கையொப்பம்


பெரியார் பொன்மொழிகள் - periyar quotes 

  • பிறப்பினால் வரும் கீழ்ச்சாதி மேல்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் மனிதச்சாதி என்னும் ஓரினமாக எண்ணவேண்டும்.
  • பிறரை மதித்தல் வேண்டும், அது மரியாதை. தன்னைத்தானே மதிப்பதும், தன் மரியாதையைத் தக்கவைத்துக் கொள்ளுவதும் சுயமரியாதை.
  • கீழ்ச்சாதி-மேல்சாதி வேற்றுமை, தீண்டாமைக்கொடுமைகள் அகல,எல்லாருக்கும் கல்வி தேவை; எல்லாரும் கல்வி பெறுதல் வேண்டும்.
  • பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்.
  • பெண்விடுதலைக்கு முதற்படியாகப் பெண்கள் எல்லாரும் கல்வி கற்கவேண்டும்.
  • அறிவு என்பது வளர்ந்துகொண்டே இருக்கும்; எனவே, புதியனவற்றை ஏற்றல் வேண்டும்.

சிறப்புக் குறிப்புகள்

தம் வாழ்நாளில் 8600 நாள், 13,12,000 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து, 10,700 கூட்டங்களில் 21,400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றிச் சமுதாயத் தொண்டு ஆற்றினார்.


1970ஆம் ஆண்டு சமுதாயச் சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் 'யுனெஸ்கோ விருது” பெரியாருக்கு வழங்கப்பட்டது.


நடுவண் அரசு 1978ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

பெரியார் எழுத்துகள்

எழுத்துச் சீர்திருத்தம்

  • ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
  • ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.

புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது. இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

பெரியார் எழுத்துகள்

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம்

இருபதாம் நூற்றாண்டு வரை ணா, றா, னா - என எழுதினர். அதேபோல ணை, லை, ளை, னை -என எழுதினர். இவற்றை அச்சுக் கோப்பதற்காக இவ்வெழுத்துகளுக்குத் தனி அச்சுகள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. இக்குறைகளை நீக்குவதற்காகத் தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அவரது எழுத்துச் சீர்திருத்தங்கள் சில ஏற்கப்பட்டுத் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

நினைவு கூர்க 

தம் தொண்ணூற்றைந்து அகவையிலும்கூடப் புதிய சிந்தனைகளை எடுத்துக் கூறினார். நெடுநாள் வாழ்ந்தவரான பெரியார், நமது சமுதாயத்திற்குச் செய்த தொண்டுகள் எண்ணற்றவை. பெரியாரின் பெருமைக்குக் காரணம், தற்சிந்தனையும் சிந்தித்ததனைச் சொன்ன துணிச்சலும்தான். நாம், அவற்றைப் பெரியாரிடமிருந்து கற்றுக்கொள்வோம்; நம்மை மேலும் வளர்த்துக்கொள்வோம்!

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்  கீழ் 13. தந்தை பெரியார்  பகுதிக்காகப் பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise 

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்பட்டவர் பெரியார்

2. பெண்கள் மற்போர், குத்துச்சண்டை முதலிய விளையாட்டுகளைக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும் எனப் பெரியார் கூறினார்.

ஓரிரு சொற்களில் விடை தருக.


அ. பெரியார் தோற்றுவித்த இயக்கத்தின் பெயர் என்ன?

பெரியார் தோற்றுவித்த இயக்கத்தின் பெயர் பகுத்தறிவாளர் சங்கம்.

ஆ. கேரளத்தில் நடந்த போராட்டத்தில் பெரியாருக்குக் கிடைத்த சிறப்புப் பட்டம் என்ன?

கேரளத்தில் நடந்த போராட்டத்தில் பெரியாருக்குக் கிடைத்த சிறப்புப் பட்டம் வைக்கம் வீரர்.

ஓரிரு தொடர்களில் விடை தருக.


அ. எவற்றைத் தம்மிரு கண்ணாகப் பெரியார் கருதுகிறார்?
மரியாதையையும், சுயமரியாதையையும் தம்மிரு கண்ணாகப் பெரியார் கருதுகிறார்.

சிறுவினாக்கள்

 அ. ஈ.வெ.ரா. என்பதன் விரிவு என்ன?

ஈ.வெ.ரா. என்பதன் விரிவு ஈரோடு  வெங்கடப்பர் மகனார் இராமசாமி ஆகும்.

ஆ. பகுத்தறிவாளர் சங்கத்தைப் பெரியார் அமைத்ததன் நோக்கம் என்ன ?

பகுத்தறிவாளர் சங்கத்தைப் பெரியார் அமைத்ததன் நோக்கம் சாதி உயர்வுதாழ்வுகளையும் மத வேறுபாட்டையும் அகற்ற வேண்டும் என்பது ஆகும்.

இ. இராமசாமிக்குப் 'பெரியார்" என்று தாய்மார் பட்டம் கொடுத்துப் பாராட்டியது ஏன்?

மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதித்தல் வேண்டும். ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்களும் செய்தல் வேண்டும்; பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம். இராமசாமி இவ்வாறு பேசியது பெண்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் தாய்மார்தாம் இராமசாமிக்குப் 'பெரியார்' எனப் பட்டம் வழங்கினார்கள்.

TNPSC Previous year question 

1. மரியாதையையும், சுயமரியாதையையும் தம்மிரு கண்ணாகக் கருதியவர்?

பெரியார்

2. 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்பட்டவர்?

பெரியார்

3. பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம் என்றவர்?

பெரியார்

4. ஐக்கிய நாடுகள் அவையின் 'யுனெஸ்கோ விருது' பெரியாருக்கு வழங்கப்பட்ட ஆண்டு?

1970ஆம் ஆண்டு

5. நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டுச் சிறப்பித்த ஆண்டு?

1978ஆம் ஆண்டு

6. பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை நாள் மக்களுக்காக உரையாற்றிச் சமுதாயத் தொண்டு ஆற்றினார்? 

8600நாள்

7. பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து மக்களுக்காக உரையாற்றிச் சமுதாயத் தொண்டு ஆற்றினார்?

13,12,000 கிலோ மீட்டர்

8. பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை கூட்டங்களில் மக்களுக்காக உரையாற்றிச் சமுதாயத் தொண்டு ஆற்றினார்?

10,700 கூட்டம்

9. பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை மணிநேரம் மக்களுக்காக உரையாற்றிச் சமுதாயத் தொண்டு ஆற்றினார்?

21,400 மணிநேரம்

11. கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டவர்

பெரியார்

12. பெரியார் ஈ. வெ. ரா என்பதன் விரிவாக்கம்

 ஈரோடு வெங்கடப்பர் மகனார் இராமசாமி 

13. பெரியாருடைய பெரும் பணியை, "ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் - ஒரு கால கட்டம்- ஒரு திருப்பம்" என்று கூறியவர் 

அறிஞர் அண்ணா

14. சாதி உயர்வுதாழ்வுகளையும் மத வேறுபாட்டையும் அகற்ற 'பகுத்தறிவாளர் சங்கம்' அமைத்தவர்

 பெரியார்

15. கள் இறக்குவதனைத் தடுப்பதற்காகத் தன்னுடைய தோப்பிலிருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்ந்தவர்

பெரியார்

16. பெண்கள் மற்போர், குத்துச்சண்டை முதலிய விளையாட்டுகளையும் கற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்றவர்

பெரியார்

17. பெரியார் சிறப்பு பெயர்களில் பொருந்தாதது 

பகுத்தறிவு பகலவன்

பகுத்தறிவு செம்மல்

சுய மரியாதை சுடர்

வைக்கம் வீரர்

18. பெரியார் குறித்த கூற்றுகளில் தவறானது

இளமையிலே பெரியார், மகாத்மா காந்தியின் தொண்டரானார்; 

காங்கிரசுக் கட்சியில் சேர்ந்தார்; 

கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்; 

பெண்கள் சிலம்பம், குத்துச்சண்டை முதலிய விளையாட்டுகளையும் கற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்றார்

19. இராமசாமிக்குப் 'பெரியார்" என்று பட்டம் கொடுத்துப் பாராட்டியது

தாய்மார்கள்

20. எங்கு நடந்த போராட்டத்தில் பெரியாருக்குக் கிடைத்த சிறப்புப் பட்டம் வைக்கம் வீரர்

கேரளா 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad