ஓவியக்கலை

எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளைகொண்டு வியக்கவைக்கும் விந்தை மொழி, ஓவியம். காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்தகலை ஓவியக்கலை. ஓவியம் பேசும் செய்திகள் பல; உணர்த்தும் கருத்துகளோ மிகப்பல.

கலைகளும் இலக்கியங்களும் ஒரு நாட்டின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலகிற்கு உணர்த்துவன. தமிழர்கள் சிற்பம், ஓவியம் முதலிய கலைகளில் சிறந்திருந்தனர். காலத்தால் அழியாத கலைச் செல்வங்கள் பலவற்றைப் படைத்தனர். நூற்றாண்டுகள் பல கடந்தும் கலைநயம் குறையாமலும் அழகு சிதையாமலும் விளங்கும் கலைச்செல்வங்கள் பல தமிழகத்தில் உள்ளன. அவற்றுள் சில காண்போம் வாருங்கள்.

பாடத்தலைப்புகள்(toc)

ஓவியக்கலை

தமிழகத்தில் தொன்றுதொட்டு விளங்கிவந்த பாரம்பரியக் கலைகள் பல. அவற்றுள் பல, காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு அழிந்துபோயின. எஞ்சிய சில, தமிழர்களின் கலைத்திறன்களையும் கலைநுட்ப அறிவையும் உலகோர்க்கு எடுத்துக்காட்டும் ஒளிவிளக்குகளாகத் திகழ்கின்றன. தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை கலை முன்னணியில் நிற்கிறது.

பழங்கால மக்கள், தம் உள்ளக் கருத்துகளைப் புலப்படுத்த பாறைகளிலும் குகைகளிலும் கீறி எழுதினர். தம் எண்ணத்தைச் சித்திரம் வரைந்து வெளிப் படுத்தினர். இவற்றைத் தொல்பொருள் ஆய்வுகளாலும் இலக்கியச் சான்றுகளாலும் அறிந்துகொள்ள முடிகிறது.

மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கு உண்டு. 

அழகுக்கலைகள், மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகுக் காட்சியையும் இன்ப உணர்ச்சியையும் கொடுத்து மகிழ்விக்கிறபடியினாலே, நாகரிகம் படைத்த மக்கள் அழகுக் கலைகளைப் போற்றுகிறார்கள்; பேணி வளர்க்கிறார்கள்; துய்த்து இன்புற்று மகிழ்கிறார்கள்.

அழகுக்கலைக்கு இன்கலை என்றும் கவின்கலை என்றும் நற்கலை என்றும் வேறு பெயர்கள் உண்டு. 

இவ்வழகுக் கலைகள் ஐந்து. அவை, கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என்பன. 

- மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்


குகை ஓவியங்கள்

தமிழகத்தில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ( மான், போர் செய்தல், விலங்கு வேட்டை ஆகியனவற்றைக் குறிக்கும்) குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

கண்ணெழுத்து

தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன. தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணெழுத்து என்றே வழங்கியுள்ளனர். 

தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் இருந்ததனைப் பரிபாடல், குறுந்தொகை செய்யுள் அடிகள் தெளிவுபடுத்துகின்றன. 

சீனமொழியிலும் எழுத்துகள் உருவங்களாக உள்ளன. எனவே, பழங்கால மக்கள் சித்திர எழுத்துகளால் கருத்துகளைப் புலப்படுத்தினர். அவையே நாளடைவில் மொழிக்குறியீடுகளாக வளர்ந்துள்ளன.

கோட்டோவியங்கள்

கி.மு. 2000 ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தில் மக்கள் இனக்குழுக்களாக வாழ்ந்தனர். தாம் தங்கிய மலைக்குகைகளிலும் பாறைகளிலும் கோட்டோவியங்கள் வரைந்தனர். அவற்றைத் தற்காலத் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கண்டுபிடித்து வெளிக் கொணர்ந்துள்ளனர்.

கோட்டோவியங்கள் என்றால் என்ன?

ஓவியம் வரைதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும். இவ்வாறு வரையப்படுபவை கோட்டோவியங்கள் எனப்படும். அவ்வரைகோடுகள்மேல் சிவப்பு, கறுப்பு, மஞ்சள், நீலம் முதலிய வண்ணங்கள் பூச, அழகிய ஓவியங்களாக உருவெடுக்கும்.

இலக்கியங்களில் ஓவியம்

தொல்காப்பியம்

  • தொல்காப்பியம் நடுகல் வணக்கம் பற்றிக் கூறுகிறது. 

நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியனவற்றைப் பொறிக்கும் பழக்கம் இருந்தது. சிற்பி, தான் செதுக்கவிருக்கும் உருவத்தை முதலில் வரைந்து பார்த்த பின்னரே, அவ்வோவியத்தைக்கொண்டு கல்லில் உருவம் அமைத்தல் மரபு. இதன்படி ஆராய்ந்து நோக்கினால் செதுக்குவதற்கு ஓவியம் துணை புரிந்ததனையும், ஓவியம் முன்னரே வளர்ந்திருந்ததனையும் உணர முடிகின்றது.

ஓவியக்கலை வேறு பெயர்கள்

ஓவியக்கலை எவ்வாறெல்லாம் அழைக்கப்பட்டது?

ஓவியக்கலை 

  • ஓவு, 
  • ஓவம், 
  • ஓவியம், 
  • சித்திரம், 
  • படம், 
  • படாம், 
  • வட்டிகைச் செய்தி 

எனப் பல பெயர்களால் வழங்கப்பெற்றது. 

ஓவியக் கலைஞர் வேறு பெயர்கள்

ஓவியக் கலைஞர் 

  • ஓவியர், 
  • ஓவியப்புலவன், 
  • கண்ணுள் வினைஞன், 
  • சித்திரக்காரர், 
  • வித்தக வினைஞன், 
  • வித்தகர், 
  • கிளவி வல்லோன் 

என அழைக்கப்பட்டார். 

ஓவியர் எண்ணங்களின் எழுச்சியைப் பல வண்ணங்களின் துணைகொண்டு எழுதுவோராதலின் கண்ணுள் வினைஞர் எனப் புகழப்பெற்றார்.

நச்சினார்க்கினியர்

நச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, 'நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்' என இலக்கணம் வகுத்திருப்பது எத்துணைப் பொருத்தம் பார்த்தீர்களா? ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றுப் புலமைபெற்ற ஆசிரியர் ஓவியப் புலவன் எனப் போற்றப்பட்டார்.

ஓவியக் கலைஞர் குழு

ஓவியக் கலைஞர் குழுவை ஓவிய மாக்கள் என்றழைத்தனர். 

  • ஆண் ஓவியர் சித்திராங்கதன் எனவும், 
  • பெண் ஓவியர் சித்திரசேனா எனவும் 

பெயர் பெற்றிருந்தனர்.

சிலப்பதிகாரம் 

ஆடல் மகள் மாதவி, 'ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்' எனச் சிலம்பு பகர்கிறது. 

இதிலிருந்து ஓவியக் கலைக்கெனத் தனி இலக்கண நூல்கள் இருந்தன என்பதனைத் தெரிந்துகொள்ளலாம்.

வரைகருவிகள் - வண்ணந்தீட்டும் கோல் 

பல்வகைக் காட்சிகள், உருவங்கள் வரைய ஓவியர் அக்காலத்தில் பல்வகைக் கருவிகளைப் பயன்படுத்தினர். 

வரைகருவிகள் எவையெவை?

வண்ணந்தீட்டும் கோல், 

  • தூரிகை, 
  • துகிலிகை, 
  • வட்டிகை 

எனப்பட்டது. 

வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு வட்டிகைப் பலகை எனப் பெயரிட்டிருந்தனர்.

வரைவிடங்கள் - ஓவியம் வரையப்பட்ட இடங்கள்

அக்காலத்தில் ஓவியங்கள் வரைவதற்கென்று தனியே இடங்கள் அமைந்து இருந்தன. 

ஓவிய வரைவிடங்களாகத் திகழ்ந்தவை எவை

இங்ஙனம் ஓவியம் வரையப்பட்ட இடங்கள் 

  • சித்திரக்கூடம், 
  • சித்திரமாடம், 
  • எழுதுநிலை மண்டபம், 
  • எழுதெழில் அம்பலம் 

என வழங்கப்பட்டன. 

இறை நடனம் புரிவதற்கே சித்திர சபை ஒன்றனை ஏற்படுத்தியுள்ளனர். இவற்றிலிருந்து ஓவியக்கலையில் தமிழர்க்கு இருந்த ஈடுபாட்டையும், கண்ணுகர் விருப்ப உணர்வையும், மக்களிடம் அதற்கிருந்த செல்வாக்கையும் மேன்மையையும் அறியலாம்.

அரசர் வாழும் அரண்மனை அந்தப்புரங்கள், செல்வர் வாழும் வளமனைகள், மாளிகைகள், ஆடலரங்குகள், கோவில் மண்டபங்கள், பொதுமன்றங்கள் முதலிய இடங்களில் கட்டடச் சுவர்கள், மேற்கூரைகள், தூண்களில் ஓவியங்களை வரைந்தனர். வன ஓவியத்தால் மக்கள் வீடுகளை அலங்கரித்தனர்.

புறநானூறு 

வளங்கொழித்த மக்களின் இல்லங்களில் அழகிய ஓவியங்கள் பல தீட்டப் பட்டிருந்தன. புறநானூற்றில், "ஓவத்தனைய இடனுடை வனப்பு "என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் கவிஞர் போற்றுகிறார். 

சுடுமண் சுவர்மீது வெண்சுதை (சுண்ணாம்பு) பூசிச் செஞ்சாந்துகொண்டு ஓவியங்கள் தீட்டினர்.

அதுமட்டுமன்றி மரப்பலகை, துணிச்சீலை, திரைச்சீலைகளில் ஓவியம் எழுதினர். நாடகமேடைகளில் பல வண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் தொங்கினவற்றை 'ஓவிய எழினி' கொண்டு அறிகிறோம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்னும் பழமொழி இவ்வாறுதான் உருவாயிற்று.

புனையா ஓவியம்

வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனைப் புனையா ஓவியம் என்றழைத்தனர். 

இன்றும், இது மென்கோட்டு ஓவியமாக நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஓவியங்கள்

இனி, எவ்வெவற்றை ஓவியங்களாக்கிக் கண்டு மகிழ்ந்தனர் என்பதனைக் காண்போமா?

இயற்கைக் காட்சிகள், கற்பனைக் காட்சிகள், சமுதாய வாழ்க்கை முறைமை, இதிகாச புராணக்கதைகள் என்பன ஓவியத்திற்குரிய கருப்பொருள்களாயின. ஓவியர்கள் சோதிடக்கலை, வானநூல், கதைகள் முதலியவற்றைக் கற்றுணர்ந்து செவ்வனே சித்திரம் தீட்டினர். 

நெடுநல்வாடை

ஆடு முதலான பன்னிரண்டு இராசிகளையும்,விண்மீன்களையும் வரைந்த செய்தி, நெடுநல்வாடை என்னும் சங்க நூல் தரும் அரிய செய்தியாகும். 

ஓவிய மரபுகள் 

தமிழருக்கே உரிய ஓவிய மரபுகளை எவ்வாறு கண்டறிவது?

ஓவியங்களில் நிற்றல், இருத்தல், கிடத்தல் ஆகிய மனித இயல்புகளையும் வீரம், அமைதி, சினம், வியப்பு, உவகை முதலிய மெய்ப்பாடுகளையும் உத்தமம், மத்திமம், அதமம் மற்றும் தசதாளம், நவதாளம், பஞ்சதாளம் முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழருக்கே உரிய ஓவிய மரபுகளாக விளங்குகின்றன.

பல்லவப் பேரரசர்கள்

இங்ஙனம், சங்க காலத்தில் செழித்திருந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்துபோகத் தொடங்கியது. மறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் பல்லவப் பேரரசர்களாவர்.

மகேந்திரவர்ம பல்லவன்

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட முதலாம் மகேந்திரவர்ம பல்லவன். கலையார்வம் மிக்கவன். மகேந்திரவர்மன் காலத்தில் ஓவியக்கலை எழுச்சியுற்று உயர்நிலையை எட்டியது. இம்மன்னனே சிறந்த ஓவியனாகப் புகழ்பெற்றிருந்தான். 

கல்வெட்டுகள் இம்மன்னனைச் சித்திரக்காரப்புலி எனப் புகழ்கின்றன. 

தட்சிணசித்திரம் என்னும் ஓவிய நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.

இச்செய்தியிலிருந்து மகேந்திரவர்மன் ஓவியக்கலையின்மீது கொண்டிருந்த பற்றினையும் ஆர்வத்தையும் உள்ளக் கிடக்கையையும் ஊகித்தறியலாம்.

பழங்கால ஓவியங்களாகக் கண்டெடுக்கப்பட்டவை எவை ?

சித்தன்னவாசல் ஓவியம்

மகேந்திரவர்மன் காலத்திற்குப் பின்னர்த் தமிழகத்தில் ஆட்சிபுரிந்த அரசர்கள் ஓவியக்கலையை வளர்த்து வந்துள்ளார்கள்.

  •  பனமலை, 
  • திருமலை, 
  • மாமல்லபுரக் குகைக்கோவில், 
  • மாமண்டூர், 
  • காஞ்சிக் கைலாசநாதர் கோவில் 

முதலிய இடங்களில் பல்லவர் கால ஓவியங்கள் சிதைந்த தோற்றத்துடன் காணப்படுகின்றன. 

பார்வதி உருவம், கின்னரர், கின்னரி, கந்தர்வர் ஓவியங்கள் காண்போரை மயக்குவன.

திருநந்திக்கரையில் சேரர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன. 

புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்கோவில் ஓவியங்கள், ஓவியக் கருவூலங்களாக வைத்துப் போற்றத்தகுந்தன.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் அவனிப சேகர ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில், மதுரை ஆசிரியர் இளம்கௌதமன் இவ்வோவியங்களை வரைந்தார் எனக் கல்வெட்டுச் செய்தி அறிவிக்கின்றது. 

அங்குள்ள தாமரைத்தடாகம், ஆடல் அணங்குகள், அரசன், அரசி ஓவியங்கள் நம் கண்ணைக் கவர்வன.

சோழர்கால ஓவியங்கள் எங்குக் காணப்படுகின்றன ?

சோழர்கால வனப்புமிக்க ஓவியங்களைத் தஞ்சைப் பெரியகோவிலில் கண்டு மகிழலாம். அவற்றிலுள்ள கவின்மிகு கயிலைக்காட்சி கண்களுக்கு விருந்தளிப்பன. 

  • சேரமான், 
  • சுந்தரர் கயிலைசெல்லும் காட்சி,
  • சிவபெருமான் முப்புரம் எரித்த காட்சி, 
  • சுந்தரரைத் தடுத்தாளும் கோலம், 
  • நாட்டிய மகளிர், 
  • மாமன்னன் இராசராசன், 
  • கருவூர்த்தேவர் 

முதலிய ஓவியங்கள் வரலாற்றுச் சிறப்பை உணர்த்துவன.

நாயக்க மன்னர்களின் ஓவியங்கள்

நாயக்கர் கால ஓவியங்கள் எங்கெங்கு உள்ளன?

திருவரங்கம், திருப்பதி, தில்லை, திருவாரூர், குடந்தை, மதுரை, காஞ்சி முதலிய பல இடங்களில் விசயநகர நாயக்க மன்னர்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன. 

மராட்டிய மன்னர்கள்

கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஓவியக்கலை நன்கு வளர்ச்சி பெற்றது. ஒலைகளிலும், கண்ணாடிகளிலும், தந்தங்களிலும் ஓவியங்கள் தீட்டப்பெற்றன. வண்ணங்களின் வனப்புக்கேற்ப இரத்தினங்கள் பதிக்கப்பெற்றன. ஓவியர்களின் கைவண்ணங்களை இன்றும் கோவில் கூரைகளிலும் சுவர்களிலும் மரச்சிற்பங்களிலும் காணலாம்.

நினைவுக் கூர்க

ஈராயிரம் ஆண்டுகளாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு, வளர்ந்துவரும் கலையாக ஓவியக்கலை உள்ளது. தமிழர் ஓவிய மரபு, காலம் பல கடந்து எதிர்காலத் தலைமுறையினரான உங்கள் கையிலும் தவழ்ந்து கொண்டிருக்கின்றது.

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 7. கலைகள் - ஓவியம் பகுதிக்காகப் பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - ஓவியக்கலை மாதிரி வினாக்கள்

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. சங்ககாலத்தில் ஓவியங்களை கண்ணெழுத்து என அழைத்தனர்.

2. தொல்காப்பியம் நடுகல் வணக்கம் பற்றிக் கூறுகிறது.

3. இறை நடனம் புரிவதற்கு சித்திர சபை ஏற்படுத்தப்பட்டது.

4. கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனை புனையா ஓவியம் என்றழைத்தனர்.

5. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் சித்திரக்காரப் புலி என அழைக்கப்பட்டவன்

ஓரிரு சொற்களில் விடையளிக்க.

அ. சித்தன்னவாசல் ஓவியங்களை வரைந்தவர் யார்?

அவனிப சேகர ஸ்ரீவல்லபன்

ஆ. சித்திரக்காரப் புலி என அழைக்கப்படுபவர் யார்?

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

குறுவினாக்கள்

1. ஓவியக்கலை எவ்வாறெல்லாம் அழைக்கப்பட்டது?

2. கோட்டோவியங்கள் என்றால் என்ன?

3. வரைகருவிகள் எவையெவை?

4. சோழர்கால ஓவியங்கள் எங்குக் காணப்படுகின்றன ?

5. நாயக்கர் கால ஓவியங்கள் எங்கெங்கு உள்ளன?

சிறுவினாக்கள்

1. பழங்கால ஓவியங்களாகக் கண்டெடுக்கப்பட்டவை எவை ?

2. ஓவிய வரைவிடங்களாகத் திகழ்ந்தவை எவை?

3. தமிழருக்கே உரிய ஓவிய மரபுகளை எவ்வாறு கண்டறிவது?

நெடுவினாக்கள்

1. சித்தன்னவாசல் ஓவியங்களைப் பற்றி விவரிக்க.

TNPSC previous year question 

1. சங்ககாலத்தில் ஓவியங்களை ...... என அழைத்தனர்.

வட்டெழுத்து 

கண்ணெழுத்து

கோட்டோவியம்

சித்திர எழுத்து 

2. நடுகல் வணக்கம் பற்றிக் கூறுவது

பரிபாடல்

குறுந்தொகை

தொல்காப்பியம்

நற்றிணை 

3. இறை நடனம் புரிவதற்கான சபை 

சித்திர சபை 

சித்திரக்கூடம்

சித்திரமாடம்

எழுதுநிலை மண்டபம்

4. கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனை .......  என்றழைத்தனர்.

மென்கோட்டு ஓவியம் 

புனையா ஓவியம்

ஓவு 

சித்திர எழுனி 

5. சித்திரக்காரப் புலி என அழைக்கப்பட்டவன்

நந்திவர்மன்

மாமல்லன்

ஶ்ரீவர்மன்

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

6. தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் இருந்ததனைக் குறிப்பிடும் நூல்

பரிபாடல்

குறுந்தொகை

இரண்டும்

எதுவும் இல்லை 

7. பொருத்துக- பொருத்தப்பட்டுள்ளது 

நாயக்கர் - மதுரை

சோழர் - தஞ்சை

சேரர் - திருநந்திக்கரை

பல்லவர் - மாமண்டூர்

8. புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்கோவில் ஓவியங்களை வரைந்தவர் 

நந்திவர்மன்

இளம்கௌதமன்

மாமல்லன்

ஶ்ரீவர்மன்

9. தட்சிணசித்திரம் என்னும் ஓவிய நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.

நந்திவர்மன்

மாமல்லன்

ஶ்ரீவர்மன்

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

10. ஆடு முதலான பன்னிரண்டு இராசிகளையும்,விண்மீன்களையும் வரைந்த செய்தியைக் குறிப்பிடும் நூல்

பட்டினப்பாலை

நற்றிணை

நெடுநல்வாடை

புறநானூறு 

11. புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் ஓவியங்கள் யார் காலத்தில் வரையப்பட்டது 

அவனிப சேகர ஸ்ரீவல்லபன்

மாமல்லன்

நந்திவர்மன்

ஶ்ரீவர்மன் 

12. "ஓவத்தனைய இடனுடை வனப்பு "என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் கூறும் நூல்

பட்டினப்பாலை

நற்றிணை

நெடுநல்வாடை

புறநானூறு 

13. பொருந்தாதது எது?

சித்திரக்கூடம்

சித்திரமாடம்

எழுதுநிலை மண்டபம்

சித்திர சபை (இறை நடனம் புரிவதற்கான சபை - மற்றவை ஓவியம்p வரையப்பட்ட இடங்கள்)

14. வண்ணந்தீட்டும் கோல் பொருந்தாதது எது?

தூரிகை

துகிலிகை

வட்டிகை 

வட்டிகைப் பலகை (வண்ணங்கள் குழப்பும் பலகை)

15. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு ....... எனப் பெயரிட்டிருந்தனர்.

வட்டிகைப் பலகை 

தூரிகை

துகிலிகை

வட்டிகை 

16. ஆடல் மகள் மாதவி, 'ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்' எனக் கூறும் நூல்

சிலம்பு

மணிமேகலை 

மாதவி காப்பியம்

கண்ணகி காப்பியம்

17. ஓவியருக்கு, 'நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்' என இலக்கணம் வகுத்திருப்பது

நச்சினார்க்கினியர் உரை 

பட்டினதடிகள்

தொல்காப்பியம்

அகத்தியம் 

18. ஓவியக் கலைஞர் குழுவை ....... என்றழைத்தனர். 

ஓவிய மாக்கள்

சித்திராங்கதன்

சித்திரசேனா

கண்ணுள் வினைஞர்

19. ஆண் ஓவியர் ..... என்றழைத்தனர். 

ஓவிய மாக்கள்

சித்திராங்கதன்

சித்திரசேனா

கண்ணுள் வினைஞர்

20. பெண் ஓவியர் ..... என்றழைத்தனர். 

ஓவிய மாக்கள்

சித்திராங்கதன்

சித்திரசேனா

கண்ணுள் வினைஞர்

21. 'ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்' எனச் சிலம்பு யாரைக் குறித்து பகர்கிறது

மாதவி

கண்ணகி 

மணிமேகலை

ஆதிரை

22. ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றுப் புலமைபெற்ற ஆசிரியர் ...... எனப் போற்றப்பட்டார்.

ஓவியப் புலவன்

ஓவியக் கலைஞர் 

கண்ணுள் வினைஞன்

சித்திரக்காரர்

23. ஓவியக் கலைஞர் வேறு பெயர்களுள் பொருந்தாதது 

ஓவியப்புலவன், 

கண்ணுள் வினைஞன்

சித்திரக்காரப் புலி(முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் இவ்வாறு அழைக்கப்பட்டான்)

வித்தக வினைஞன்

24. கிளவி வல்லோன் என அறியப்படுபவர்

ஓவியக் கலைஞர்

சிற்பக் கலைஞர்

பாட்டு கலைஞர்

ஆடல் கலைஞர்

25. ஓவியக்கலை வேறு பெயர்களுள் பொருந்தாதது 

ஓவு

ஓவம்

படாம்

வட்டிகை (சரி - வட்டிகைச் செய்தி )

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad