தமிழகச் சிற்பக்கலை

கலைகளும் இலக்கியங்களும் ஒரு நாட்டின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலகிற்கு உணர்த்துவன. தமிழர்கள் சிற்பம், ஓவியம் முதலிய கலைகளில் சிறந்திருந்தனர். காலத்தால் அழியாத கலைச் செல்வங்கள் பலவற்றைப் படைத்தனர். நூற்றாண்டுகள் பல கடந்தும் கலைநயம் குறையாமலும் அழகு சிதையாமலும் விளங்கும் கலைச்செல்வங்கள் பல தமிழகத்தில் உள்ளன. அவற்றுள் சில காண்போம் வாருங்கள்.

பாடத்தலைப்புகள்(toc)

கல்லிலே கலைவண்ணம்

காவிரி பாயும் சோழவள நாடு. அது கலைகளின் விளைநிலம். வியக்கவைக்கும் கட்டடக்கலையும் சிற்பக்கலையும் கொழிக்கும் ஊர் கும்பகோணம். இங்கே அமைந்து உள்ள ஐராவதீசுவரர் கோவில்  'கலைகளின் புகலிடம்" என்று அழைக்கப்படுகின்றது.

Tnpsc general tamil


மேலே உள்ள படத்தைப் பாருங்கள். இது கல்லில் செதுக்கிய சிற்பம். உற்றுநோக்கினால், இந்தச் சிற்பத்தில் உள்ள வியப்புறு உருவங்கள் வெளிப்படும். 

இடப்பக்கத்திலிருந்து பார்த்தால், காளையின் உருவம் தெரிகிறது. 

வலப்பக்கத்திலிருந்து பார்த்தால், யானையின் உருவம் தெரிகிறது.

எவ்வளவு அருமையாக இருக்கிறது! கலைஞர்கள் இதுபோன்று பல சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள்.

அவை எங்கே இருக்கின்றன என்றுதானே கேட்கிறீர்கள்!

கும்பகோணம்

தாராசுரம் - ஐராவதீசுவரர் கோவில் 

கும்பகோணம் ஊரின் தென்புறம் அரிசிலாறு பாய்கிறது. இக்காலத்தில் அரசலாறு என வழங்கப்படுகிறது இதன் தென்கரையில் தாராசுரம் என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்கேதான் ஐராவதீசுவரர் கோவில் உள்ளது.

இஃது ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் இராசராச சோழனால் கட்டப்பட்டது.

சிற்பங்கள்

நூறு கோவில்களுக்குச் சென்று கண்ட சிற்பங்களின் பேரழகைப் பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை இந்த ஒரே கோவில் நமக்குத் தருகிறது. இவ்வளாகத்தில் எங்கும் சிற்பமயம். இக்கோவில் சிற்பங்கள் நம்மைச் சுண்டியிழுக்கும்.

ஒவ்வொரு சிற்பத்திலும் ஒரு கதையோ காவியமோ பொதிந்திருக்கிறது. 

திரிபுராந்தகன்

முப்புரம் எரித்தவன் (திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம்; 

கஜசம்ஹார மூர்த்தி

யானையைக் கொன்று அதன் தோலைத் தன்மீது உடுத்திக்கொள்ளும் யானை உரி போர்த்தவர் (கஜசம்ஹார மூர்த்தி) கதை இன்னொரு சிற்பம்; 

லிங்கோத்பவர்

அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார் (லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம். 

இப்படிக் கதைபொதிந்த சிற்பங்கள் பல உள்ளன.

இராமாயண, மகாபாரதக் கதைகள், இரதி மன்மதன் கதைகள், சிவபுராணக் கதைகள் என எண்ணில் அடங்காத கதைகள் நம்மை ஈர்க்கின்றன. அவற்றுடன் பரதநாட்டிய அடவுகளும் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன.

அன்னபூரணி

அன்னம் பாலிக்கும் அற்புத அன்னபூரணி

கண்ணப்பர்

இன்றைய கண்தானத்துக்கு அன்றே எடுத்துக் காட்டாக அமைந்த கண்ணப்பர்

ஒருடல் சிற்பங்கள்

பறவை, விலங்கு, மனிதன் எனக் கலவையாய் அமைந்த ஓருடல் சிற்பங்கள் என இக்கோவில் சிற்பங்கள் தமிழகச் சிற்பக்கலைச் சிறப்புக்கு ஒரு சோற்றுப்பதமாய் விளங்குகின்றன.

Tnpsc general tamil


சங்கீதக் கருங்கற்படிகள்

ஒவ்வொரு தூணின் நான்கு பட்டைகளிலும் அமைந்த சிற்றோவியங்கள் அரிதும் அழகுமாய் ஆனவை. கோவிலின் நுழைவாயிலில் அமைந்த ஏழு கருங்கற் படிகள் 'சரிகமபதநி' என்னும் ஏழு நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன. 

Tnpsc general tamil

சோழ மண்டலத்துக்குள் நுழைந்தாலே, எங்கும் இசையொலி,

  • 'தாம்தரிகிட தீம்தரிகிட' என்னும் மத்தள ஒலி, 
  • வீணையின் மீட்டொலி, 
  • புல்லாங்குழலின் கான ஒலி, 
  • நாகசுர நல்லொலி... 

என இசைமழையில் நனையும் அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.

தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாகக் கார்ல் சேகன் (Carl Sagon) என்ற வானவியல் அறிஞர் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும். (alert-success)


புடைப்புச் சிற்பங்கள்

அதிபத்தர், அமர்நீதியார், இயற்பகையார், இசைஞானியார், எறிபத்தர், ஏனாதிநாயனார் முதலிய அறுபத்துமூன்று நாயன்மார்களின் கதைகளைக் கூறும் கல்வெட்டு எழுத்துத் தலைப்புகளுடன் கூடிய புடைப்புச் சிற்பங்கள் கண்ணுக்குப் பெருவிருந்தாக உள்ளன.

மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கு உண்டு. 

அழகுக்கலைகள், மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகுக் காட்சியையும் இன்ப உணர்ச்சியையும் கொடுத்து மகிழ்விக்கிறபடியினாலே, நாகரிகம் படைத்த மக்கள் அழகுக் கலைகளைப் போற்றுகிறார்கள்; பேணி வளர்க்கிறார்கள்; துய்த்து இன்புற்று மகிழ்கிறார்கள்.

அழகுக்கலைக்கு இன்கலை என்றும் கவின்கலை என்றும் நற்கலை என்றும் வேறு பெயர்கள் உண்டு. 

இவ்வழகுக் கலைகள் ஐந்து. அவை, கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என்பன. 

- மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்

கலைகளின் புகலிடம்

தஞ்சை அரண்மனைக்குச் சொந்தமானது இக்கோவில். அழகு வாய்ந்த இதன் பழைமையைத் தற்போது மத்தியத் தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். 

இதனை மரபு அடையாளச் சின்னமாக யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு அறிவித்துள்ளது. 

நினைவு கூர்க 

திருவாரூர், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராகரம், மதுரை, திருவரங்கம், மாமல்லபுரம் முதலிய ஊர்களில் உள்ள அரண்மனைகள், வரலாற்று ஆய்வகங்கள், அருங்காட்சியகங்கள், தொல்பொருள்துறைக் காப்பாட்சியகங்கள் ஆகியவற்றைக் காணப் பயணம் மேற்கொள்ளலாம். 

இதேபோல் திருமயம், தரங்கம்பாடி, செஞ்சி, தீபங்குடி (சமணர் கோவில்) ஆகிய ஊர்களுக்கும், பௌத்தத் தலங்களுக்கும் பயணம் செய்யலாமே! கிறித்தவ, இசுலாமியக் கட்டடக் கலைகள் ஆகியன குறித்து அறியவும் பயணம் தொடரலாமே!

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 7. கலைகள் - சிற்பம் பகுதிக்காகப் பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise 

நிரப்புக.

அ. இன்றைய கண்தானத்துக்கு அன்றே எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் கண்ணப்பர்.

ஓரிரு சொற்களில் விடை எழுதுக.

அ. எந்த ஆற்றின் தென்கரையில் தாராசுரம் உள்ளது ?

அரிசிலாறு ஆற்றின் தென்கரையில் தாராசுரம் உள்ளது.

ஆ. ஐராவதீசுவரர் கோவிலைக் கட்டியவர் யார் ?

ஐராவதீசுவரர் கோவிலைக் கட்டியவர் இரண்டாம் இராசராச சோழன் 

ஓரிரு தொடர்களில் விடை எழுதுக.

அ. தாராசுரம் கோவிலின் விமானமும் மண்டபமும் எதனைக் காட்டுவதாகக் "கார்ல் சேகன்' கூறுகிறார் ?

தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாகக் கார்ல் சேகன் (Carl Sagon) என்ற வானவியல் அறிஞர் கூறுகிறார்.

TNPSC previous year question 

1. தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாகக் எந்த வானவியல் அறிஞர் கூறுகிறார்?

கார்ல் சேகன் (Carl Sagon) 

2. தாராசுரம் கோவில் யாரால் கட்டப்பட்டது?

இரண்டாம் இராசராச சோழன்

3. கலைகளின் புகலிடம் என்று அழைக்கப்படும் கோவில்

தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்

4. கலைகளின் புகலிடம் என்று அழைக்கப்படும் ஐராவதீசுவரர் கோவில் எங்கு அமைந்துள்ளது?

கும்பகோணம் 

5. எந்த ஆற்றின் தென்கரையில் தாராசுரம் உள்ளது ?

அரிசிலாறு

6. ஐராவதீசுவரர் கோவிலைக் கட்டியவர் யார் ?

இரண்டாம் இராசராச சோழன் 

7. இன்றைய கண்தானத்துக்கு அன்றே எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் 

கண்ணப்பர்

8. யானையைக் கொன்று அதன் தோலைத் தன்மீது உடுத்திக்கொள்ளும் யானை உரி போர்த்தவர்

கஜசம்ஹார மூர்த்தி

9. எந்த ஆண்டு இரண்டாம் இராசராச சோழனால்  ஐராவதீசுவரர் கோவில் கட்டப்பட்டது

எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்

10. முப்புரம் எரித்தவன் 

திரிபுராந்தகன்

பொருத்துக- பொருத்தப்பட்டுள்ளது 

  1. மத்தளம் - தாம்தரிகிட தீம்தரிகிட
  2. வீணை - மீட்டொலி
  3. புல்லாங்குழல் - கான ஒலி
  4. நாகசுரம் - நல்லொலி


மனம் கவரும் மாமல்லபுரம்

மாமல்லபுரம் பற்றி பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் மற்றும் கயல் என்ற குழந்தையின் உரையாடல் 

மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்கள்

1. அர்ச்சுனன் தபசு

2.கடற்கரைக் கோவில்

3. பஞ்சபாண்டவர் ரதம்

4. ஒற்றைக்கல் யானை

5. குகைக்கோவில்

6. புலிக்குகை

7.திருக்கடல் மல்லை

8. கண்ணனின் வெண்ணெய்ப் பந்து

9.கலங்கரை விளக்கம்

குளிர்ந்த காற்று வீசியது, வெளிச்சம் எங்கும் பரவியது. கயல் தன் கண்களை அகல விரித்துப் பார்த்தாள். 

'என்ன இடம் இது? நாம் எங்கே இருக்கிறோம்?' கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தாள். அவளுக்கு முன்னால் ஒரு கோவில் தெரிந்தது. வியப்புடன் பார்த்தாள். 'என்ன இது? கோவில் போலவும் இருக்கிறது. தேர் போலவும் இருக்கிறதே!' இதைப் பற்றி யாரிடம் கேட்பது எனத் திகைத்து நின்றாள். அப்போது தூரத்தில் ஒருவர் குதிரையில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தோற்றத்தில் அரசரைப் போல இருந்தார். 'இவர் யாராக இருக்கும்? சரி அருகில் வரட்டும் பார்க்கலாம்' என எண்ணினாள். குதிரை அவள் அருகில் வந்து நின்றது. குதிரையில் இருந்து அவர் இறங்கினார்.

கயல் அவரிடம், "ஐயா! வணக்கம். தாங்கள் பார்ப்பதற்கு அரசர் போல் உள்ளீர்கள். தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டாள்.

"நான் பல்லவ மன்னன். என் பெயர் நரசிம்மவர்மன். நான் மற்போரில் சிறந்தவன். அதனால், எனக்கு மாமல்லன் என்னும் பெயரும் உண்டு. உன் பெயர் என்ன?" என்று கேட்டார் அவர்.

"ஐயா, என் பெயர் ம.தி.கயல்"

"மதி, கயல் என்று இரண்டு பெயர்களா உனக்கு?"

"இல்லை ஐயா. ம.தி. என்பவை என் பெயரின் தலைப்பெழுத்துகள். என் அம்மா பெயர் மங்கை. என் அப்பா பெயர் திருநாவுக்கரசு. அப்பெயர்களின் முதல் எழுத்துகளைத் தலைப்பெழுத்துகளாக வைத்துள்ளனர்."

"அப்படியா? மகிழ்ச்சி. இங்குத் தனியாக எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்?"

"இது கோவிலா தேரா என்று தெரியவில்லை. அதனால்தான் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்" என்றாள் கயல்.

"நான் உனக்கு விளக்குகிறேன் கயல். ஒரே பாறையில் செதுக்கிச் செய்யப்பட்ட கோவில் இது. இரதம் (தேர்) போன்ற வடிவத்தில் இருக்கிறது. அதனால் இதனை இரதக் கோவில் என்று அழைக்கிறார்கள்" என்று விளக்கினார் மாமல்லர்.

கயல் சுற்றிலும் பார்த்தாள். அங்கே மொத்தம் ஐந்து இரதங்கள் இருந்தன. "இவை என்ன ஐயா?" என்று கேட்டாள்.

"ஐந்து இரதங்கள் உள்ளதால் இவ்விடத்திற்குப் பஞ்சபாண்டவர் இரதம் என்று பெயர். இவையெல்லாம் என் காலத்தில் உருவாக்கப்பட்டவை" என்றார் மாமல்லர்.

"வியப்பாக உள்ளதே! நீங்கள் நீண்ட காலத்துக்கு முன்பு வாழ்ந்தவர் அல்லவா?"

"ஆமாம் கயல். நான் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்".

"இவற்றை உருவாக்குவதற்குக் கற்களை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்?"

"இங்கேயே இருந்த பாறைகளில்தான் இவற்றை உருவாக்கினோம்".

"அப்படியா? இவற்றைக் கோவிலாக மாற்றவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?"

"நான் சிறுவனாக இருந்த போது ஒருநாள் என் தந்தையுடன் இந்தக் கடற்கரைக்கு வந்தேன். இந்தப் பாறையின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தேன். இந்தப் பாறையின் நிழல் யானை போல் தரையில் விழுந்தது. என் தந்தையிடம் அதனைக் காட்டினேன். என் தந்தை, 'ஆம், நரசிம்மா! இது யானை போலத்தான் தெரிகிறது. அதோ அந்தக் குன்றின் நிழலைப் பார். கோவில் போலத் தெரிகிறது' என்றார். 'ஆமாம் அப்பா! அந்தக் குன்றைக் கோவிலாகவும், இந்தக் குன்றைக் கோவில் முன் நிற்கும் யானை போலவும் மாற்றிவிட்டால் நன்றாக இருக்குமே' என்றேன். 'நல்ல சிந்தனை. இவை இரண்டை மட்டும் அல்ல, இங்குள்ள ஒவ்வொரு குன்றையும் சிற்பமாக மாற்றலாம். ஒவ்வொரு பாறையையும் நந்தி, சிங்கம், யானை என்று மாற்றுவோம். இந்தக் கடற்கரையையே சிற்பக்கலைக் கூடமாக மாற்றிவிடலாம் என்று கூறினார் என் தந்தை" என்று சொல்லி முடித்தார் மாமல்லர்.

"உங்கள் தந்தையும் அரசரா?" என்று கேட்டாள் கயல்.

"ஆமாம் கயல். எனக்கு முன்பு பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர் என் தந்தை மகேந்திரவர்ம பல்லவர். அவர் காலத்தில் இந்தச் சிற்பப் பணி தொடங்கியது. என்காலம், என்மகனின் காலம், என் பேரனின் காலம்வரை நடைபெற்றது. நான்கு தலைமுறைகளில் உருவாக்கப்பட்டவை இந்தச் சிற்பங்கள்" என்று பெருமிதத்துடன் கூறினார் மாமல்லர்.

"இந்தச் சிற்பங்களை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறதே" என்றாள் கயல்.

"சிற்பக் கலையின் உச்சத்தை நீ பார்க்க வேண்டுமா? என்னுடன் வா!" என்று கூறிக் கயலை அழைத்துச் சென்றார் மாமல்லர்.

இருவரும் அர்ச்சுனன் தபசுச் சிவைக்கு அருகில் வந்து நின்றனர். அங்குப் பாறையில் இருந்த சிற்பங்களைக் கண்டு கயல் வியந்து போனாள். "ஐயா! இந்தப் பாறையில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை உயிருள்ளவற்றை நேரில் பார்ப்பது போல அழகாக உள்ளன" என்றாள்.

"ஆம் கயல். இவற்றுக்குப் புடைப்புச் சிற்பங்கள் என்று பெயர். இந்த இரண்டு பாறைகளிலும் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன."

"அதில் ஒருவர் கண்களை மூடி, இரு கைகளையும் உயர்த்தி, வணங்குவது போல ஒரு சிற்பம் உள்ளது. அவரது உடல் மெலிந்து, எலும்புகளும் நரம்புகளும் வெளியே தெரிவது போல அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது."

"ஆம் கயல். அர்ச்சுனன் தவம் செய்யும் காட்சி இது. இந்தச் சிற்பம் உள்ளதால்தான், இப்பாறைக்கு 'அர்ச்சுனன் தபசு' என்று பெயர். இதனைப் 'பகீரதன் தவம்' என்றும் கூறுவர்.

"அப்படியா! இந்த இடத்தில் இரண்டு பாறைகளுக்கு இடையில் நீர் வடிந்து வந்த தடம் தெரிகிறதே?"

"ஆம் கயல். அங்கே ஆகாயகங்கை பூமிக்கு வருவது போல அமைக்கப்பட்டு உள்ளது. மழைக்காலத்தில் இதன் வழியாக மழைநீர் பாய்ந்து வரும். அப்போது உண்மையிலேயே கங்கை ஓடி வருவதைப் போல இருக்கும்" என்றார் மாமல்லர்.

"இங்கே யானைச்சிற்பங்கள் அழகாக உள்ளன. சிங்கம், புலி, அன்னப்பறவை, உடும்பு, குரங்குகள் என எல்லாமே உயிருள்ளவை போலச் செதுக்கப்பட்டுள்ளன. இங்கே பாருங்கள்! மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொறிந்து கொள்வது போன்ற சிற்பம். அது பார்ப்பதற்கு உண்மையிலேயே மான் ஒன்று இருப்பதைப் போலவே தோன்றுகிறது" என்று வியப்புடன் கூறினாள் கயல்.

"இங்கு இன்னும் நிறைய இடங்கள் உள்ளன கயல். இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது" என்றார் மாமல்லர்.

"இந்த ஊரின் பெயர் என்ன ஐயா?" என்று ஆர்வத்தோடு கேட்டாள் கயல்.

"இதுதான் தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடமாகிய மாமல்லபுரம்"

சிற்பக் கலை வடிவமைப்புகள் நான்கு வகைப்படும்.

  1. குடைவரைக் கோயில்கள்
  2. ஒற்றைக்கல் கோயில்கள்
  3. கட்டுமானக் கோயில்கள்
  4. புடைப்புச் சிற்பங்கள்

இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம்.

கயல் சிந்தித்தவாறு "உங்கள் பெயர் மாமல்லன். இந்த ஊரின் பெயர் மாமல்லபுரம். இரண்டுக்கும் ஏதோ ஒற்றுமை உள்ளதே!" எனக் கேட்டாள்.

"ஆம் கயல். இந்த ஊர் உருவாக எனது கேள்விதான் காரணம் என்பதால் என் தந்தை என் பெயரையே இந்த ஊருக்கு வைத்துவிட்டார். இக்காலத்தில் இவ்வூரை மகாபலிபுரம் எனவும் அழைக்கிறார்கள்".

"உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா!"

"எனக்கும்தான் கயல். உன்னோடு பேசிக் கொண்டிருந்ததில் என் இளமைக் காலத்திற்கே சென்றுவிட்டது போல உணர்கிறேன். மிக்க மகிழ்ச்சி மங்கை திருநாவுக்கரசு கயல்."


6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - மனம் கவரும் மாமல்லபுரம் மதிப்பீடு

சிறுவினா

1. மாமல்லபுரம் எப்படி உருவானது? அதற்குக் காரணமான நிகழ்வு யாது? 

மாமல்லபுரம் ஊர் உருவாக பல்லவ அரசன் மாமல்லன் கேட்ட கேள்விதான் காரணம் என்பதால் அவரின் தந்தை மகேந்திரவர்ம பல்லவர் அவர் மகன் பெயரையே இந்த ஊருக்கு வைத்துவிட்டார்.

மாமல்லன் சிறுவனாக இருந்த போது ஒருநாள் அவரின் தந்தையுடன் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்தார். அங்குப் பாறையின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்தப் பாறையின் நிழல் யானை போல் தரையில் விழுந்தது. அவரின் தந்தையிடம் அதனைக் காட்டினார். அவரின் தந்தை, 'ஆம், மாமல்லா! இது யானை போலத்தான் தெரிகிறது. அதோ அந்தக் குன்றின் நிழலைப் பார். கோவில் போலத் தெரிகிறது' என்றார். 'ஆமாம் அப்பா! அந்தக் குன்றைக் கோவிலாகவும், இந்தக் குன்றைக் கோவில் முன் நிற்கும் யானை போலவும் மாற்றிவிட்டால் நன்றாக இருக்குமே' என்றார். 'நல்ல சிந்தனை. இவை இரண்டை மட்டும் அல்ல, இங்குள்ள ஒவ்வொரு குன்றையும் சிற்பமாக மாற்றலாம். ஒவ்வொரு பாறையையும் நந்தி, சிங்கம், யானை என்று மாற்றுவோம். இந்தக் கடற்கரையையே சிற்பக்கலைக் கூடமாக மாற்றிவிடலாம் என்று கூறினார் அவரின் தந்தை. இதுவே மாமல்லபுரம் உருவாக காரணம்.

2. மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசுப் பாறையில் உள்ள சிற்பங்களைப் பற்றி எழுதுக.

அர்ச்சுனன் தபசுப் பாறையில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை உயிருள்ளவற்றை நேரில் பார்ப்பது போல அழகாக செதுக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்குப் புடைப்புச் சிற்பங்கள் என்று பெயர். அங்குள்ள இரண்டு பாறைகளிலும் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன.

அதில் ஒருவர் கண்களை மூடி, இரு கைகளையும் உயர்த்தி, வணங்குவது போல ஒரு சிற்பம் உள்ளது. அவரது உடல் மெலிந்து, எலும்புகளும் நரம்புகளும் வெளியே தெரிவது போல அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது.

அது அர்ச்சுனன் தவம் செய்யும் காட்சி. இந்தச் சிற்பம் உள்ளதால்தான், இப்பாறைக்கு 'அர்ச்சுனன் தபசு' என்று பெயர். 

அந்த இடத்தில் இரண்டு பாறைகளுக்கு இடையில் நீர் வடிந்து ஆகாயகங்கை பூமிக்கு வருவது போல அமைக்கப்பட்டு உள்ளது. மழைக்காலத்தில் இதன் வழியாக மழைநீர் பாய்ந்து வரும். அப்போது உண்மையிலேயே கங்கை ஓடி வருவதைப் போல இருக்கும்.

யானைச்சிற்பங்கள், சிங்கம், புலி, அன்னப்பறவை, உடும்பு, குரங்குகள் என எல்லாமே உயிருள்ளவை போலச் செதுக்கப்பட்டுள்ளன. மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொறிந்து கொள்வது போன்ற சிற்பம். அது பார்ப்பதற்கு உண்மையிலேயே மான் ஒன்று இருப்பதைப் போலவே தோன்றுகிறது.

TNPSC previous year question 

1. மற்போரில் சிறந்தவன் யார் 

நரசிம்மவர்மன்

2. நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவன்?

ஏழாம் நூற்றாண்டு 

3. மற்போரில் சிறந்ததால் நரசிம்மவர்மன் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?

மாமல்லன் 

4. அர்ச்சுனன் தவம் செய்யும் காட்சி

 'அர்ச்சுனன் தபசு' 

5. மாமல்லன் தந்தை

மகேந்திரவர்ம பல்லவர்

6. நான்கு வகை சிற்பக்கலைகளும் காணப்படும் ஒரே இடம் 

மாமல்லபுரம்

7. மகாபலிபுரம் என்பதன் பழைய பெயர்

மாமல்லபுரம்

8. 'அர்ச்சுனன் தபசு' என்பதின் மற்றொரு பெயர்

பகீரதன் தவம்

9. பஞ்சபாண்டவர் இரதம் யார் காலத்தில் உருவாக்கப்பட்டது ?

மாமல்லன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad