முதுமொழிக்காஞ்சி

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான முதுமொழிக்காஞ்சி கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும். முதுமொழிக்காஞ்சியில் சிறந்த பத்து விளக்கம் இங்கே விளக்கப்பட்டுள்ளது .

பாடத்தலைப்புகள்(toc)

முதுமொழிக்காஞ்சி குறிப்பு

முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இந்நூல், உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது. 

இந்நூல், அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது. 

இதில் பத்து அதிகாரங்கள் உள்ளன. 

ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்கள் உள்ளன. இந்நூல் நூறு பாடல்களால் ஆனது.

சிறப்புகள்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான முதுமொழிக்காஞ்சி கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும்.

முதுமொழிக்காஞ்சி ஆசிரியர் மதுரைக் கூடலூர்கிழார் குறிப்பு

பெயர் : மதுரைக் கூடலூர்கிழார்

பிறந்த ஊர் : கூடலூர்

சிறப்பு : இவர்தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாகக் கையாண்டுள்ளார்கள்.

காலம் : சங்க காலத்துக்குப்பின் வாழ்ந்தவர்.

முதுமொழிக்காஞ்சி சிறந்த பத்து விளக்கம்

(சிறந்ததெனக் கூறப்படும் பத்துப் பொருளைத் தன்னகத்தே கொண்டிருப்பது சிறந்த பத்து.)

1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஒதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை. 

2. காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்.

3.மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை.

4. வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை.

5. இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை. 

6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று.

7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று.

8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று. 

9. செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று.

10. முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று.


- மதுரைக் கூடலூர்கிழார்(code-box)


பொருள்:

1. கடல்சூழ்ந்த இவ்வுலக மக்கள் அனைவர்க்கும் கற்றலைவிட ஒழுக்கமுடைமையே சிறந்தது. 

2. பிறர்க்கு அன்புகாட்டுவதிலும் செயல்களால் அவர் போற்றும்படி நடத்தலே மேலானது. 

3. அறிவுநுட்பத்தினும் கற்றபொருளை மறவாமை மேன்மையானது. 

4. வளமான வாழ்க்கையைக்காட்டிலும் வாய்மை உடையவராக வாழ்வது உயர்ந்தது. 

5. இளமையைக் காட்டிலும் நோயற்ற வாழ்வே சிறந்தது. 

6. அழகுடையவராக இருப்பதினும் நாணமுடையவராக இருப்பதே மேலானது. 

7. குலப்பெருமையைவிட ஒழுக்கமுடைமையே சிறந்தது. 

8. சிறந்த நூல்களைக் கற்றலைவிடவும் கற்றறிந்த பெரியாரைப் பின்பற்றி யொழுகுதல் சிறப்பானது. 

9. பகைவரைத் தன்நுப்பதனைவிட, அவருக்கு நன்மைசெய்தல் சிறந்தது. 

10. முற்காலத்துப் பெருகிய செல்வத்தை பின்னர்க் குறைவுபடாமல் காத்தலே சிறந்தது.


சொற்பொருள் : 

ஆர்கலி -  நிறைந்த ஓசையுடைய கடல்; 

காதல் -  அன்பு, விருப்பம்; 

மேதை -  அறிவு நுட்பம்; 

வண்மை -  ஈகை, கொடை; 

பிணி - நோய்; 

மெய் - உடம்பு; 

நாணம்  - செய்யக் கூடாததனைச் செய்ய அச்சப்படுதல்; 

சிறந்தன்று - சிறந்தது; 

வழிபடுதல் - போற்றி வணங்குதல்.

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் 2. முதுமொழிக் காஞ்சி பகுதிக்காகப் பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - முதுமொழிக்காஞ்சி மாதிரி வினாக்கள்

1. கோடிட்ட இடத்தை நிரப்புக.

அ) முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சி திணையின் துறைகளுள் ஒன்று.

ஆ) முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்கிழார்

இ) இளமையைக் காட்டிலும் நோயற்ற வாழ்வே சிறந்தது.

ஈ) நலனுடைமையின் நாணுச் சிறந்தன்று,

உ) கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.

ஊ) முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று

எ) வண்மை என்பதன் பொருள் ஈகை

2. கோடிட்ட இடத்தில் உரிய விடையை எடுத்து எழுதுக.

அ) முதுமொழிக்காஞ்சி ........... என வழங்கப்பெறும்.

1. நன்னெறி

 2. அறநூல்

3. அறவுரைக்கோவை

ஆ) கற்றலை விடவும் சிறந்தது

1. அறிவுடைமை 

2.பொறையுடைமை

3.ஒழுக்கமுடைமை

3. பொருத்துக: பொருத்தப்பட்டுள்ளது 

ஆர்கலி - நிறைந்த ஓசையுடைய கடல்

வண்மை - ஈகை

பிணி - நோய்

மெய் - உடம்பு

4. பிரித்து எழுதுக.

அ) மக்கட்கெல்லாம் = மக்கள்+எல்லாம்

ஆ) பிணியின்மை= பிணி+இன்மை 

இ) குலனுடைமை =குலம்+ உடைமை

5. பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைக்க. 

உலகம் - உலகம் கடலால் சூழப்பட்டுள்ளது.

மக்கள் - மக்கள் அனைவரும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.

ஒழுக்கம் - ஒழுக்கம் குலப் பெருமையை விட சிறந்தது. 

வழிபடுதல் - அனைவரும் கடவுளை வழிபடுதல் வேண்டும்.

6. குறுவினாக்கள்

1. முதுமொழிக்காஞ்சி - சிறுகுறிப்பு எழுதுக. 

முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இந்நூல், உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது. இந்நூல், அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது. 

2. மதுரைக் கூடலூர்கிழார் பற்றிக் குறிப்பு எழுதுக.

மதுரைக் கூடலூர்கிழார்தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாகக் கையாண்டுள்ளார்கள். சங்க காலத்துக்குப்பின் வாழ்ந்தவர்.

3.மேதை, வண்மை இவற்றைக் காட்டிலும் சிறந்தன யாவை? 

மேதை காட்டிலும் சிறந்தது கற்றது மறவாமை.

வண்மை காட்டிலும் சிறந்தது  வாய்மையுடைமை.

4. நலனுடைமையின் சிறந்தது எது?

நலனுடைமையின் சிறந்தது நாணமுடையவராக இருப்பதே மேலானது. 

7. சிறுவினா 

முதுமொழிக்காஞ்சி குறிப்பிடும் சிறந்த பத்துகள் எவை? விளக்குக.

TNPSC previous year question 

1. யாருடைய பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாகக் கையாண்டுள்ளார்கள்? 

மதுரைக் கூடலூர்கிழார்

2. முதுமொழிக்காஞ்சி என்பது எந்த துறைகளுள் ஒன்று?

காஞ்சித்திணை

3. அறவுரைக்கோவை என வழங்கப்படுகிற நூல் எது?

முதுமொழிக்காஞ்சி

4. முதுமொழிக்காஞ்சி எத்தனை பாடல்களை கொண்டுள்ளது?

நூறு பாடல்கள் 

5. முதுமொழிக்காஞ்சி எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?

பத்து அதிகாரங்கள்

6.  ......... நூல்களுள் ஒன்று முதுமொழிக்காஞ்சி

பதினெண்கீழ்க்கணக்கு

7. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் 

மதுரைக் கூடலூர்கிழார்

8. முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்கிழார் வாழ்ந்த காலம் 

சங்க காலத்துக்குப்பின் 

9. பொருத்துக: பொருத்தப்பட்டுள்ளது 

காதலில் சிறந்தன்று - கண்ணஞ்சப் படுதல்

மேதையில் சிறந்தன்று - கற்றது மறவாமை

வண்மையில் சிறந்தன்று - வாய்மை யுடைமை

இளமையில் சிறந்தன்று - மெய்பிணி இன்மை


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad