அ, உ, க, ப ஆகிய எழுத்துகளை ஒலித்துப் பாருங்கள்.
- அ - வாயைத் திறந்தாலே அ என்னும் எழுத்து ஒலிக்கிறது.
- உ - உ என்னும் எழுத்தை ஒலிக்கும்போது இதழ்கள் குவிகின்றன.
- க - நாக்கின் முதற்பகுதி மேல் அண்ணத்தில் ஒட்டும்போது க என்னும் எழுத்து பிறக்கிறது.
- ப - ப என்னும் எழுத்து இதழ்கள் இரண்டும் ஒட்டுவதால் பிறக்கிறது.
பாடத்தலைப்புகள்(toc)
எழுத்துகளின் பிறப்பு - 8ம் வகுப்பு இயல் ஒன்று
ஒவ்வொரு எழுத்துக்கும் பிறக்கும் இடமும் பிறக்கும் முயற்சியும் வெவ்வேறாக உள்ளன.
பிறப்பு
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி உதடு, நாக்கு, மேல்வாய் (அண்ணம்), பல் ஆகிய உறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.
எழுத்துக்களின் பிறப்பு எத்தனை வகைப்படும்?
எழுத்துக்களின் பிறப்பு வகைகள்
- இடப்பிறப்பு,
- முயற்சிப் பிறப்பு
என இருவகையாகப் பிரிக்கலாம்.
எழுத்துகளின் இடப்பிறப்பு
உயிர் எழுத்துகள்
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
வல்லின மெய் எழுத்துகள்
வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
மெல்லின மெய் எழுத்துகள்
மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
இடையின மெய் எழுத்துகள்
இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
ஆய்த எழுத்து
ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
சார்பெழுத்து இடப்பிறப்பு
பிற சார்பெழுத்துகள் யாவும், தத்தம் முதலெழுத்துகள் தோன்றுதற்குரிய இடத்தையும், அவை பிறத்தற்குரிய முயற்சியையும் தமக்கு உரியனவாகக் கொண்டு ஒலிக்கின்றன.
எழுத்துக்களின் இடப்பிறப்பிடம்
கழுத்து | மூக்கு | மார்பு | தலை |
---|---|---|---|
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், இடையின எழுத்துகள் ஆறும் கழுத்திலிருந்து பிறக்கின்றன | மெல்லின எழுத்துகள் ஆறும் மூக்கிலிருந்து பிறக்கின்றன. |
வல்லின எழுத்துகள் ஆறும் மார்பிலிருந்து பிறக்கின்றன. |
ஆய்த எழுத்து - தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது |
எழுத்துகளின் முயற்சிப் பிறப்பு
உயிர் எழுத்துகள்
- அ, ஆ ஆகிய இரண்டும் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன.
- இ, ஈ.எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.
- உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன.
மெய் எழுத்துகள்
- க், ங் - ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
- ச்,ஞ் -ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடுஅண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
- ட், ண் - ஆகிய இருமெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
- த் , ந் - ஆகிய இருமெய்களும் மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன.
- ப்,ம் -ஆகிய இருமெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.
- ய் - இது நாக்கின் அடிப்பகுதி, மேல் வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.
- ர்,ழ் - ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
- ல் - இது மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
- ள் -இது மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.
- வ் - இது மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது.
- ற் , ன் - ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.
சார்பெழுத்துகள்
ஆய்த எழுத்து வாயைத்திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது.
பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.
'ஆய்தம்'- இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக.
எழுத்துகள் | வகை | பிறக்கும் இடம் |
---|---|---|
ஆ | உயிர் எழுத்து | கழுத்து |
ய் | மெய் எழுத்து | கழுத்து |
த | சார்பெழுத்து | மார்பு |
ம் | மெய் எழுத்து | மூக்கு |
நினைவுக்கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2025 அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு - 8 ஆம் வகுப்பு இயல் ஒன்று - எழுத்துகளின் பிறப்பு - வினா விடை 8th standard tamil book back exercise
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்
அ) இ, ஈ
ஆ) உ, ஊ
இ) எ,ஏ
ஈ) அ,ஆ
2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம்
அ) மார்பு
ஆ) கழுத்து
இ) தலை
ஈ) மூக்கு
3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்
அ) தலை
ஆ) மார்பு
இ) மூக்கு
ஈ) கழுத்து
4. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்
அ) க்,ங்
ஆ) ச்,ஞ்
இ) ட், ண்
ஈ) ப்,ம்
5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து
அ) ம்
ஆ) ப்
இ) ய்
ஈ) வ்
பொருத்துக. (பொருத்தப்பட்டுள்ளது)
க் ங் - நாவின் முதல், அண்ணத்தின் அடி
ச், ஞ் - நாவின் இடை, அண்ணத்தின் இடை
ட், ண் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
த்,ந் - நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி
சிறுவினா
1. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி உதடு, நாக்கு, மேல்வாய் (அண்ணம்), பல் ஆகிய உறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.
2. மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
வல்லின மெய் எழுத்துகள் - ஆறும் (க், ச், ட், த், ப், ற்) மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
மெல்லின மெய் எழுத்துகள் - ஆறும் (ங், ஞ், ண், ந், ம், ன்) மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
இடையின மெய் எழுத்துகள் - ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
3. ழகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
Please share your valuable comments